1957 ஆம் அண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் போதே பொதுத் தேர்தல் வந்தது . இத்தேர்தலை மாநிலத் தலைவராக இருந்து நடத்திய பெருமை கக்கனுக்கு உண்டு . அன்றைய தேர்தல் குழுவின் ஆணைப்படி இவரும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார் . 1952 க்கு முன் திருச்சி மாவட்டத்தில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டார் . நல்லதோர் அரசியல் கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் இவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை . ஆனால் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த பி . வடிவேலு என்பவர் எதிர்த்து நின்றார் .
மாநில அளவில் நல்ல பேரும் புகழும் பெற்றிருந்த கக்கன் , அவரை எதிர்த்து நின்ற வடிவேலு என்பவரைக் காட்டிலும் கிட்டத்தட்ட 12,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி மாலை சூடினார் . 133 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் ‘பேரவைத் தலைவராகக் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இரண்டாவது முறையாகத் தம் அமைச்சரவையை அமைக்கும் காமராசர் , ஏழுபேர் கொண்ட தம் அமைச்சரவையில் கக்கனையும் சேர்த்துக் கொண்டார் . எம் . பக்தவச்சலம் , சி . சுப்பிரமணியம் . ஆர் . வெங்கட்ராமன் , வி . இராமையா , லூர்தம்மாள் சைமன் , எம் . ஏ மாணிக்கவேல் நாயக்கர் , பூவராகவன் ஆகியோர் அமைச்சரவையின் பிற உறுப்பினராவர் .
1957 ஆம் ஆண்டு ஏப்ரல் பதின்மூன்றாம் நாள் காமராசர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் கக்கன் அமைச்சர் பொறுப்பை ஏற்றார் . பொதுப்பணி , அரிசனநலம் ஆகிய துறைகளின் அமைச்சராக 1962 ஆம் ஆண்டு மார்ச் பதினான்காம் நாள் வரை சிறப்பாகச் செயல்பட்டார் . இவர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்தார் .
தமது அரசியல் வளர்ச்சியில் முதன் முதலாகப் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார் . அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முதல் சுற்றுப்பயணமாக மதுரை மேலூருக்கு வந்தார் . மேலூர் பயணியர் மாளிகையில் தங்கி இருந்த அமைச்சர் கக்கன் , ஆலோசனைக்காக அழைத்த முதல் அதிகாரி மாவட்டக்கல்வி அதிகாரியாவார் . அன்றைய மாவட்டக்கல்வி அதிகாரியாக இருந்த முனைவர் வேங்கடசுப்பிரமணியன் தமது துறைக்குத் தொடர்பில்லாத அமைச்சர் அழைப்பதில் அதிர்ந்து போனார் என்றாலும் மரபுகருதி அமைச்சரைக் காண வந்தார் . மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றன எத்தனை கிராமங்களில் பள்ளிகள் இல்லை என்பதை விசாரித்தார் . ஒவ்வொரு கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளியைத் தொடங்கிட ஆவன செய்தார் . கக்கன் அமைச்சராகி செய்த முதற்பணி கல்விப்பணியே .
அன்றைய மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த முனைவர் வேங்கட சுப்பிரமணியன் பிற்காலத்தில் புதுச்சேரிப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான பின்னும் இந்தச் செய்தியைப் பல மேடைகளில் சொல்லிச் சொல்லி வியந்தார் .
இவ்வாறு , தமது பொறுப்பில் இல்லாத துறையாக இருந்தாலும் , மக்களின் நலன் கருதி எதை முதலில் செய்ய வேண்டும் என்று எண்ணி அதற்கேற்பச் செயற்பட்டுள்ளார் . ‘ கல்வியே ஆன்மாவின் உணவு , அஃதின்றேல் நம் ஆற்றல்கள் எல்லாம் செயலற்று நின்றுவிடும் , பயன்தரா’ இவ்வாறு வெளிநாட்டு அறிஞர் ‘மாகினி’ கூறியதை எண்ணும் போது மக்களின் ஆன்ம உணவாக , உணர்வாகக் கல்வியைக் கக்கன் கருதிவந்தார் என்பது வெள்ளிடைமலை .
|