அரசியல் வாழ்வுக்கு வருபவர்கள் தன்னலமற்ற , தியாகியாக இருப்பதில்லை , அதன்படி இருப்பவர்கள் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்வதில்லை . மனிதருள் மாணிக்கமாக , தன்னலமற்ற தியாகியாகத் திகழந்தவர் , நாம் போற்றிப் புகழும் கக்கன் அவர்கள் . தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் , உயர்குல மக்களே போற்றும் அளவிற்கு வாழ்ந்து காட்டியவர் அவர் .
அவரும் நானும்
‘நான் கோயம்புத்தூரில் துணை ஆட்சியராக , ஓர் ஆண்டு பயிற்சியை முடித்து , கோபிசெட்டிப் பாளையத்தில் கோட்டாட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டேன் . அப்போது , சுற்றுப்பயணமாக அங்கு வந்த மாண்புமிகு அமைச்சர் கக்கன் அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன் . அப்போது அவர் பொதுப் பணித்துறையுடன் ஹரிஜன நலத்துறை அமைச்சராகவும் இருந்தார் . அவருடன் பல கிராமங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது .
சத்தியமங்கலம் வட்டத்தில் தாளவாடி என்னும் கிராமம் முன்னேற்றம் காணாத இடமாக இருந்தது . அங்குள்ள மக்களிடம் வேளாண்மை பற்றிய விவரங்களையும் , அவர்கள் துன்பங்களையும் பரிவோடு கேட்டறிந்தார் . அங்குள்ள தட்பவெப்ப நிலையை அதிகாரிகளிடம் கேட்டறிந்து , பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழிலை ஆரம்பித்து வைத்தார் . பிறகு பவானி வட்டத்தில் உள்ள பர்கூர் என்னும் கிராமத்திற்குச் சென்று , அங்கு வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்களின் தேவைகளையும் , கேட்டறிந்து அதிகாரிகளிடம் பேசி , ஆவன செய்வதாகக் கூறினார் . எல்லா மக்களிடமும் அவர் எளிய மனிதராகப் பழகி , அன்போடு அவர்களை அரவணைத்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது .
கும்பகோணத்தில் நாங்கள்
அதன்பிறகு , 1963 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் கோட்டாட்சித் தலைவராகப் பணிசெய்தபோது , அங்கும் கக்கன் அவர்கள் வந்தார்கள் . ஆடுதுறை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நெல் பரிசோதனை நிலையத்தைப் பார்வையிட்டு , உழவுத்தொழில் தொடர்பான பல கேள்விகள் கேட்டு , அவருக்கு இருந்த வேளாண்மைப் புலமையை வெளிப்படுத்தினார் . அங்குள்ள அலுவலகத்திற்கு வந்தவர் , எதேச்சையாக ஒரு மேசை இழுவைப் பெட்டியைத் திறந்து பார்த்தார் . சில அரசாங்கக் காகிதங்கள் எலிகளால் கடிக்கப்பட்டு , துண்டு துண்டாகக் கிடப்பதைப் பார்த்து , தொடர்புடைய எழுத்தரை மிகவும் கடிந்து கொண்டார் . அரசாங்கப் பொருள்களை எப்படிப் பேணவேண்டும் என்ற கோட்பாட்டினை அவர் சொன்னபோது எல்லாரும் வாயடைத்துப் போனார்கள் .
கன்னியாகுமரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ….
1964 ஆம் ஆண்டில் முதல் ஐந்து மாதங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் , மாவட்ட ஆதி திராவிட நல அலுவலராக நான் பணியாற்றினேன் . அப்பொழுது அமைச்சர் கக்கன் அவர்கள் அம்மாவட்டத்திற்கு வருகை தந்தார் . அப்பொழுது , சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டுச் சென்னை திரும்பும்போது என்னிடம் ‘செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இதே பணியைச் செய்வதற்கு வருகிறீர்களா ?’ என்று கேட்க , நானும் சம்மதித்தேன் .
ஆதலால் , உடனே நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் , மாவட்ட ஆதி திராவிட நல அலுவலராக மாற்றப்பட்டுப் பணியில் சேர்ந்தேன் . அப்பொழுது , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகம் சைதாப்பேட்டையில் தற்பொழுது உள்ள அரசு கலைக் கல்லூரி கட்டடத்தில் செயல்பட்டு வந்தது . மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அலுவலகமும் அங்குதான் இருந்தது . ஆகவே , நான் சென்னையில் வசித்து வந்தேன் . இதனால் அமைச்சர் அவர்களைப் பணி தொடர்பாக அவ்வப்போது சந்திக்கும் நல்ல வாய்ப்புக் கிடைத்தது .
மேலும் , அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சில சமயங்களில் சுற்றுப்பயணம் வந்தார் . அவ்வாறு வரும்போது எல்லாம் , முக்கியமாக தலித் மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அவர்கள் குடியிருக்கும் சூழ்நிலைகள் , அங்கு வேண்டிய அடிப்படை வசதிகளான வீட்டு வசதி , குடிநீர் , தெருவிளக்கு , இணைப்புச் சாலை , மயான வசதி போன்றவைகளையும் கேட்டு , வேண்டிய இடங்களில் தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்வார் . மாவட்டத்திலுள்ள மாணவர் விடுதிகள் , துறை நடத்தும் பள்ளிகளுக்குச் சென்று பார்வையிடுவார் . அக்காலத்தில் பல விடுதிகள் தனியார் கட்டடங்களில்தான் இயங்கி வந்தன .
ஆதலால் , மாணவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அங்கு இருக்கின்றனவா என்று கேட்டு அறிந்தும் , அவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தன்மையைக் கேட்டும் , விடுதிக் காப்பாளர்களுக்குத் தக்க அறிவுரைகள் கொடுப்பார் . மாணவர் விடுதியாக இருந்தாலும் , பள்ளியாக இருந்தாலும் , தொடர்புடையவர்களிடம் அங்குள்ள மாணவர்களின் கல்வியைப்பற்றி மிகவும் கவனமாகக் கேட்டு , அவர்களுக்கு மாணவர்களை நன்றாகக் கல்வியைக் கற்க வைக்கவேண்டும் என்று அறிவுரைகள் கொடுப்பார் . மாணவர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வார் .
இவ்வாறு அமைச்சர் அவர்களைத் தனியாகப் பார்க்கும்போது , அவர் கொடுத்த அறிவுரைகள் மற்றும் கற்றுப்பயணத்தின்போது சொல்லிய கருத்துக்கள் மற்றும் அறிவுரைகள் எனது மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன . மக்களோடு மக்களாகச் சாமான்ய மனிதராக நின்று அவர்களின் துயர்நீக்கும் ஒரு மாபெரும் மனித நேயத்தை அவரிடமும் நான் கண்டேன் .
எனக்கு அப்பொழுது வயது 31 ஆகும் . பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள்தான் ஆகியிருந்தது . அவருடைய அறிவுரைகள் நான் பிற்காலத்தில் இந்தத் துறையின் இயக்குநராகவும் செயலாளராகவும் பணியாற்றும்போது நல்ல வழிகாட்டிகளாக அமைந்தன . ஏன் ? எனது பணிக்காலம் முழுதும் பொதுமக்களிடம் எவ்வாறு பழகவேண்டும் , அரசுப் பணிகள் செய்யும்போது எவ்வாறு மனிதாபிமானம் கொண்டு செயல்படவேண்டும் என்ற நல்ல கருத்துக்கள் எனது மனத்தில் புதிய வழிவகுத்தன .
பிறகு , எனக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேர்முக ( பொது ) உதவியாளராக மாற்றல் உத்தரவு வந்தது .
அந்த உத்தரவைத் திரு . கக்கன்ஜி அவர்களிடம் சொல்லி , அதை ரத்துசெய்யக் கேட்டுக்கொண்டேன் .
அவரோ , “ உமக்குக் கிடைத்திருப்பது அருமையான பணி ! அங்குதான் ஏழை எளிய மக்களுக்கு உதவமுடியும்” என்று சொல்லி , உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டார் .
பரிந்துரைகளை ஏற்காமல் நேர்மையாகவும் மக்களுக்காகவும் வாழ்ந்த மேதைதான் திரு . கக்கன்ஜி அவர்கள் . அதிகாரிகளிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பழகும் பண்பாடு நம்மை அடிமையாக்கிவிடும் .
“அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்கு உடையான் கட்டே தெளிவு”
என்னும் வள்ளுவர் குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவர்
– திரு . அ . பத்மநாபன் ஐ . ஏ . ஏஸ்
|