பல்வேறு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் எதிர்ப்புகளை மீறி இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விவாதிக்க, நேற்று காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூடியது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை சல்மான் குர்ஷித் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தீவிர ஆலோசனைக்குப் பிறகு, பிரதமர் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கலாம் என முடிவு செய்யப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் பங்கு பெறும் இம்மாநாட்டில் இந்தியா பங்கு பெறுவது அவசியம் எனவும், இந்த மாநாட்டை இந்தியாவிற்கும், இலங்கைக்குமான பிரச்சினையாகப் பார்க்காமல், சர்வதேச மாநாடாக கருத்தில் கொண்டு பிரதமர் இதில் பங்கேற்கலாம் என உயர்நிலைக் குழுவில் தீர்மானம் செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
|