நாடு முழுவதும் இன்று 67-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மன் மோகன் சிங் செங்கோட்டையில் தேசிய கொடி கொடியேற்றினார்.
காலை 7.30 மணி அளவில் செங்கோட்டைக்கு வந்த பாரத பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி வரவேற்றார். இதனையடுத்து தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார். 21 குண்டகள் முழங்க பிரதமர் மூவர்ணக் கொடியேற்றினார். இதனையடுத்து பிரதமர் மன் மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய உரையில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு நிறைந்த நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்ற கனவு நிறைவேறி வருகிறது. உத்தரகாண்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு நம்மை வருத்தத்தில் ஆழ்த்தினாலும், அப்போது திறமையாக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர்கள் மீட்புப் பணியை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மும்பையில் கடற்படைக்குச் சொந்தமான சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் 18 மாலுமிகள் பலியான சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது என்றும் அவர் வேதனை தெரிவித்தார். கல்வி பெறும் உரிமைச் சட்டம் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்துள்ளது; நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறி வருவதாகவும் அதற்கான நாம் அனைவரும், தொடர்ந்து பாடுபட வேண்டும் எனவும் மன்மோகன் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் பயங்கரவாத போக்கை நிறுத்திக் கொண்டால் மட்டுமே இரு நாடுகளுடனான சுமூக பேச்சை தொடர முடியும். இவ்வாறு பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
|