பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தனியாக செல்போன் மற்றும் இமெயில் ஏதும் இல்லை என அவரது செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
சமீபத்தில் உலகம் முழுவதும் 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி மற்றும் இமெயில்களை அமெரிக்க உளவு துறை, உளவு பார்த்ததாக பரபரப்பு தகவல் வெளியாகின. இந்த தகவல் உலகம் முழுவதும் உள்ள தலைவர்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதற்கான ஆதாரத்தை, அமெரிக்க உளவுத்துறை முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டென் சமீபத்தில் வெளியிட்டார். இதனை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்போன் பேச்சுகளையும் அமெரிக்க உளவுத்துறை ஒட்டு கேட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது, "பிரதமர் மன்மோகன் சிங் தனியாக செல்போன் பயன்படுத்த மாட்டார். அவரது அலுவலகத்திற்கு என தனியாக இ-மெயில் இருக்கிறது. அவருக்கென தனிப்பட்ட முறையில் இமெயில் ஏதும் இல்லை. அதனால் ஒட்டுக்கேட்பு குறித்து இந்தியா கவலைப்படத்தேவையில்லை" என பிரதமரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
|