இடம்: அரண்மனையில் ஒரு சார் காலம்: மாலை [ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை; பலதேவன் ஒருபுறம் நிற்க]
(நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன்: ஆதி இன்னதென் றோதுதற் கரிய வழுதியின் தொழுகுல வாணாள் ஓரிரா எனமதிப் பதற்கும் இருந்ததே! குடில! இத்தனை கேடின் றெங்ஙனம் விளைந்தது? சற்றும் அறிந்திலேந் தையலர் புகலுமுன், மாற்றார் நமது மதிற்புறத் தகழைத் தூர்த்தார் எனப்பலர் சொல்லுவ துண்மைகொல்! குடில: (தனதுள்) ஓரிடம் அன்றே உணர்ந்திலை போலும். வேரறக் களைகுதும் இதுவே வேளை. ஜீவ: என்னை! என்னை! குடில: மன்னவா! யானிங் கென்னென ஓதுவன் இன்றையச் சூது? ஜீவ: மருவரு மதிலுள கருவியென் செய்தன? குடில: கருவிகள் என்செயும் கருத்தா இன்றியே! ஜீவ: காவல் இல்லைகொல்? சேவகர் யாவர்? குடில: ஏவலின் படியாம் எண்ணா யிரவர் ஆதியர் காவலா ஆக்கியே அகன்றோம். ஜீவ: ஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்? குடில: இருந்திடில் இங்ஙனம் பொருந்துமோ இறைவ! ஜீவ: செவ்விது! செய்ததென்? குடில : எவ்விதம் செப்புகேன்? நாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம் போரிடைக் கண்டனை நாரணர் தம்மை ஜீவ: மெய்ம்மை! கண்டனம். விட்டதென் காவல்? குடில: ஐயா! யான் அறிகிலேன். அவரிலும் நமக்கு மெய்மையர் யாவர்? வேலியே தின்னில் தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர். ஜீவ: துரோகம்! துரோகம்! குடில: துரோகமற் றன்று! விரோதம்! அடியேன் மேலுள விரோதம். திருவடி தனக்கவர் கருதலர் துரோகம். ஜீவ: கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில். குடில: மடையன்! ஐயோ! மடையன்! சுவாமி எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில் நெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது. விருப்பம்மற் றவர்க்குள் வெகுமதி ஆயின் திருத்ததமாய் ஒருமொழி திருச்செவி சேர்க்கில் அளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும் அத்தனை அன்புநீ வைத்துளை! [அழுது] ஜீவ: ஆ!ஆ! எத்தனை துட்டன்! எண்ணிலன்! சற்றும்! குடில: ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது! தெய்வமே அறியுமென் சித்த நிலைமை! வௌிப்பட ஒருமொழி விளம்பிடில் யானே களிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும் விடுவோம் அதற்கா வேண்டிலெம் உயிரும்! போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி? [பலதேவன் மார்பைக் காட்டி] ஜீவ: யார்? யார்? நாராணன்? [பலதேவனை நோக்கி] பலதே: ஆம்! அவன் ஏவலில் வம்பனங் கொருவன்... ஜீவ: நம்பகை அன்றுபின்! குடில: நின்பகை அன்றுமற் றென்பகை இறைவ! ஜீவ: உன்பகை என்பகை! ஓ! ஓ! கொடியவன்! செய்குவன் இப்போ தேசிரச் சேதம்! இடங்குழம் பியதங் கிதனாற் போலும்? குடில: அடங்கலும் இதனால் ஐய! அன்றேல், இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்? மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம் ஒருமொழி அல்லா திருமொழி ஆயின் வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்! ஜீவ: அழை நாரணனை. [முதற் சேவகனை நோக்க] 1-ம் சேவ: அடியேன். ஜீவ: நொடியில். [சேவகன் போக] பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம்; பாவி! இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்? குடில: சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள், என்னதே அப்பிழை மன்ன! நீ காக்குதி! வருபவை உன்திரு வருளால், வருமுன்
தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம் நிலவிய படியே பலதே வனைப் படைத் தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன். எனதே அப்பிழை. இலதேல் இவ்விதம் நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி!
அதன்பின் ஆயினும் ஐயோ! சும்மா இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து கடிபுரிக் காவற் படைகளும் தானுமாய் இடம்வலம் என்றிலை; அடையவும் கலைத்து, கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை [விம்மி] ஜீவ: கண்டனம் யாமே. குடில: காலம்! காலம்! ஜீவ: கொண்டுவா நொடியில். [2-ம் சேவகனை நோக்க] 2-ம் சேவ: அடியேன்! அடியேன்! [2-ம் சேவகன் போக] குடில: சென்றது செல்லுக. ஜயிப்போம் நாளை ஒன்றுநீ கேட்கில் உளறுவன் ஆயிரம். நெடுநா உடையான். கேட்டினி என்பயன்? ஜீவ: விடுவேம் அல்லேம் வௌிப்படை கேட்பதென்? எழுமுன் அவன்கழு ஏறிடல் காண்குதும். குடில: தொழுதனன் இறைவ! பழமையன்! பாவம்! சிறிதுசெய் கருணை. அறியான்! ஏழை! ஜீவ: எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம் பொறுக்கிலம் எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்! குடில: சுத்தன்! ஜீவ: சுத்தனோ? துரோகி! துட்டன்! [நாராயணன் உள்ளே வர] இட்டநம் கட்டளை என்னையின் றுனக்கே? [முருகன் முதலியோர் வாயிலில் நிற்க] நாரா: எப்போ திறைவ? ஜீவ: இன்று போர்க் கேகுமுன்! நாரா: அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை கடிபுரி காக்கவென் றேவினன் குடிலன். ஜீவ: குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்! நாரா: குடிலனைக் குடினலென் றேயுட் கொண்டுளென். ஜீவ: கெடுவாய் இனிமேல் விடுவாய் பகடி! குடிலனென் அமைச்சன். நாரா: நெடுநாள் அறிவன்! ஜீவ: நானே அவனிங் கவனே யானும். நாரா: ஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை. ஜீவ: கேட்டது உறுதி. நாரா: கேட்டிலை போலும். ஜீவ: கடிபுரி காத்தைகொல்? நாரா: காத்தேன் நன்றாய். ஜீவ: காத்தையேல் அகழ்க்கணம் தூர்த்ததென்பகைவர்? நாரா: தூர்த்ததுன் பகையல. துரத்திய படைப்பிணம். பார்த்துமேற் பகருதி. ஜீவ: பார்த்தனம் உன்னை ஆர்த்தபோர்க் களத்திடை அதுவோ காவல்? நாரா: உன்னையும் காத்திட உற்றனன் களத்தில். ஜீவ: என்னையுன் கபட நாடகம்? இனிதே! அவனுரம் நோக்கி அறிவைகொல்? [பலதேவனைக் காட்டி] நாரா: அறிவேன் ஜீவ: எவனது செய்தவன்? நாரா: அவனே அறிகுவன் ஜீவ: ஒன்றும் நீ உணர்கிலை? நாரா: உணர்வேன். இவன்பால் நின்றதோர் வீரன்; இப் பொற்றொடியுடையான் "என் தங்கை கையினிழி விப்படி எனக்கே" பொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன். ஜீவ: நன்றுநன் றுன்கதை! குடில: நன்றிது நன்றே! [பொற்றொடி காட்டி] பூணிது நினதே! அரண்மனைப் பொற்றொடி காணுதி முத்திரை! வாணியும் சேர்ந்துள்ளாள். இச்செயற் கிதுவே நிச்சயம் கூலி. அடியேம் தமக்கினி விடையளி, அகலுதும் அஞ்சிலேம் உடலுயிர்க் கஞ்சுவம் மானம். வஞ்சகர் கெடுப்பர். வந்தனம். [தன் முத்திரை மோதிரம் கழற்றி நீட்ட] ஜீவ: நில்! நில்! (நாராயணனை நோக்கி) இத்தனை சூதெலாம் எங்குவைத் திருந்தாய்? உத்தமன் போலமற் றெத்தனை நடித்துள்ளாய்? சோரா! துட்டா! சுவாமித் துரோகி! வாராய் அமைச்ச! வாரீர் படைகாள்! [முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர] நாரா யணனிந் நன்றிகொல் பாதகன், இன்றியாம் இவனுக் கிட்டகட் டளையும் நன்றியு மறந்து நன்னகர் வாயிற் காவல் கைவிடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும், மேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும், ஏவலர்க் கதனையீந் தேபல தேவன் ஓவலில் உயிரினை உண்டிடத் தூண்டியும், அநுமதி இன்றியின் றமர்க்களத் தெய்திக் கனைகழற் படைபரி கரிரதம் கலைத்துச் சுலபமா யிருந்தநம் வெற்றியும் தொலைத்துப் பலவழி இராசத் துரோகமே பண்ணியும்
நின்றுளான். அதனால் நீதியா யவனை இன்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்! அறிமின் யாவரும்; அறிமின்! அறிமின்! சிறிதன் றெமக்கிச் செயலால் துயரம் இன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு. நாரா: வெருவிலேன் சிறிதும் வேந்தநின் விதிக்கே! அறியாய் ஆயின் இதுகா றாயும் வறிதே மொழிகுதல்! வாழ்க நின்குலம்! ஜீவ: நட்பல; மக்களே யாயினென்? நடுநிலை அற்பமும் அகலோம். ஆதலில் இவனை [படைத்தலைவரை நோக்கி] நொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்! முருகன்: அடியேம், நொடியினில் ஆற்றுதும் ஆஞ்ஞை. குடிலரே வாரும்! ஜீவ: மடையன் இவன்யார்? முருக: கூறிய பலவும், குடிலரோ டொவ்வும். வேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே? குடில: (காதில்) கேட்டனை இறைவ! கெடுபயல் கொடுமொழி மூட்டினன் உட்பகை! நாரா: முருகா! சீ! சீ! [முருகனை அருகிழுத்து] ஜீவ: மாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில். [சேவகனை நோக்கி] முருக: ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும். [வாயிற்சேவகன் வர] சேவ: சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம் ஜீவ: வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா! நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில். குடில: மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்; விடுத்திட அருளாய்! ஜீவ: விடுகிலம். குடில: ஆயின், அடுத்துநின் றிதுநீ நடத்தலே அழகாம். ஜீவ: (தன் சேவகனை நோக்கி) அடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில். [ஜீவகன் போக] குடில: சடையா! கொடுபோய் அடையாய் சிறையில். [சடையன் அருகில் செல்ல] முருக: அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம். [சடையன் பின்னும் நெருங்க] வேணுமோ கோணவாய் விக்கா! சடையன்: கொக் கொக். [விக்கி] சேவகர் யாவரும்: சேவலோ! சேவலோ! சேவலோ! சேவலோ! [கைதட்டிச் சிரித்து] குடில: ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்! வீதியிற் செல்லலை வீணர் அபாயம் ஒழிகுவம் இவ்வழி! வழியிது! வா! வா! [குடிலனும் பலதேவனும் மறைய] சேவர்களில் சிலர்: பிடிமின் சடையனை! [சடையனும் குடிலனும் சேவகரும் ஓடிட, சில படைஞர் துரத்திட, சிலரார்த்திட] மற்றைய சேவகர்: பிடிமின்! பிடிமின்! சேவகர்ளில் சிலர்: குடிலனெங் குற்றான்? குடில: கொல்வரே! ஐயோ! [நன்றாய் மூலையில் மறைய] சேவகரிற் சிலர்: விடுகிலம் கள்வரை! மற்றைய சேவ: பிடிமின்! பிடிமின்! [கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக] நாரா: முருகா! நிகழ்பவை சரியல சிறிதும். (ஒரு திண்ணையிலேறி நின்று) அருகுநில் சீ! சீ! அன்பரே அமைதி [குழப்பம் குறைந்து அமைதி சிறிது பிறக்க] முருக: அமைதி! கேண்மின்! முதற்சேவகன்: அமைதி! அமைதி! நாரா: நல்லுயிர்த் துணைவரே! நண்பர் ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ! [குழப்பந் தீர] சேவகரிற் சிலர்: சொல்லுதி. [சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ] சேவகர் யாவ: சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நாரா: நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர் அநேக வந்தனம்! [கைகூப்பி] சேவகர்: அறியா ருனையார்? அறிவார் யாவரும். [முற்றிலும் அமைதி பிறக்க] நாரா: அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? என்செய வல்லவன்! என்கைம் மாறு! பாத்திர மோநும் பரிவிற் கித்தனை! சேவகர்: காத்தனை! காத்தனை! காவற் கடவுள்நீ! நாரா: கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! ஆயினும், வீரர்நீ ராதலின் நும்முடன் ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை அளிப்பீரோ அறியேன்? [படைஞர் நெருங்கிச் சூழ] சேவகர்: அளிப்போம் உயிரும். குடில: (பலதேவன் காதில்) ஒளித்ததிங் குணர்வனோ ஓ! பலதேவ! நாரா: ஒருதின மேனும் பொருதுளேன் உம்முடன் கருதுமின் என்னவ மானமும் சிறிதே. சேவகர்: உரியதே எமக்கது பெரிதன் றுயிரும்! [யாவரும் கவனமாய்க் கேட்க] குடில: (தனதுள்) எரியிடு வானோ இல்லிடை? ஐயோ! நாரா: அத்தனை அன்புநீர் வைத்துளீர் ஆயின் என்மொழி தனக்குநீர் இசைமின், எனக்காத் தீதே ஆயினும் செமித்தருள் புரிமின்! சேவ: யாதே ஆயினும் சொல்லுக! நாரா: சொல்லுதும்! போர்க்களத் துற்றவை யார்க்கும் வௌிப்படை ஊர்புறத் தின்னம் உறைந்தனர் பகை நாற்புறம் நெருப்பு நடுமயிர்த் தூக்கின் மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை இதனிலும் அபாயமிங் கெய்துதற் கில்லை நுந்தமிழ் மொழியும் அந்தமில் புகழும் சிந்திடும்; சிந்திடும் நுஞ்சுதந் தரமும் இத்தகை நிலைமையில் என்னை நும் கடமை! மெய்த்தகை வீரரே! உத்தம நண்பரே! எண்ணுமின் சிறிதே! என்னை நம் நிலைமை! களிக்கவும் கூவவும் காலமிங் கிதுவோ? வௌிக்களத் துளபகை வீண்கூக் குரலிதைக் கேட்டிடிற் சிறிதும் கேலியென் றெண்ணார் கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர் பெரிதுநம் அபாயம் பேணி அதற்குநீர் உரியதோர் கௌரவம் உடையராய் நடமின் விடுமின் வெகுளியும் வீண்விளை யாட்டும். படையெனப் படுவது கரையிலாக் கருங்கடல் அடலோ தடையதற்கு? ஆணையே அணையாம் உடைபடின் உலகெலாம் கெடுமொரு கணத்தில் கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும் பெருநெருப் பன்றோ? பின்யார் தடுப்பர். அதனால் அன்பரே! ஆணைக் கடங்குமின்! குடில: (மூச்சு விட்டு) ஆ! நாரா: இதுபோல் இல்லை யெனக்குப காரம் இரந்தேன். அடங்குமின்! இரங்குமின் எமக்கா! 1-ம் சேவ: நாரா யணரே! நவின்றவை மெய்யே! ஆரே ஆயினும் சகிப்பர் அநீதி! நாரா: ஏதுநீர் அநீதியென் றெண்ணினீர்? நண்பரே! ஓதிய அரசன் ஆணையை மீறி எனதுளப் படிபோர்க் கேகிய அதற்கா மனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த தண்டனை யோவநி யாயம்? அலதியான் உண்டசோற் றுரிமையும் ஒருங்கே மறந்துமற் றண்டிய அரச குலத்திற் கபாயம் உற்றதோர் காலை உட்பகை பெருக்கிக்
குற்றமில் பாண்டிக் கற்றமிக் கேடு பண்ணினேன் என்னப் பலதலை முறையோர் எண்ணிடும் பெரும்பழிக் கென்பெயர் அதனை ஆளாக் கிடநீர் வாளா முயலலோ யாதே அநீதி? ஓதுமின். அதனால் என்புகழ் விரும்புவி ராயின் நண்பரே! ஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்கே! 1-ம் சேவ: எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே? 2-ம் சேவ: உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி? நாரா: கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த கருமமே உலகம் காணற் குரிய! ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது? கருதுமின் நன்றாய். காக்குமின் அரசனை செல்லுமின், நில்லீர்! செல்லிலென் றனக்கு நல்லீர் மிகவும்! சேவகர்: நாரா யணரே உமக்காங் கொடிய கழுமரம் எமக்கும் நன்றே என்றே நின்றோம் அன்றிக் கெடுதியொன் றெண்ணிலம் கொடுமதற் கநுமதி நாரா: தென்னவன் சிறைசெயச் செப்பினன்; அதனால் இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில் இல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன். வல்லைநீர்! செல்லுமின்! செல்லுமின்! வந்தனம். செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்! நல்லது! நல்லது! [படைஞர் விடைபெற்றுப் போக] முருக: நாரா யணரே! நுஞ்சொல் என்சிரம் ஆயினும் நுஞ்செயல் சரியோ என்றெனக் குறுவதோர் ஐயம் சத்தியம் செயிக்கும் என்றீர், எத்திறம் குடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும் முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை! நாரா: பொறு! பொறு! முடிவில் அறிகுவை. முருக: முடியும் தருணம் யாதோ? மரணமோ என்றால், மரணம் அன்றது; மறுபிறப் பென்பீர் யாதோ உண்மை? நாரா: (இருவரும் நடந்து) ஓதுவம் வாவா! நன்றிது தீதிது என்றிரு பான்மையாய்த் தோற்றுதல் துணிபே. அதனால் தேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே. [நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக] பலதே: என்னையும் பீதி? எழுவெழு இவர்க்குன் பொன்னோ பொருட்டு? [பலதேவனும் குடிலனும் வௌியே வந்து] குடில: போ!போ! மடையா உன்னினம் சூதே. பலதே: உன்குணம் நாரணன் சொன்னது கேட்டிலை? குடில: சொல்லிற் கென்குறை முன்னினும் பன்னிரு பங்கவன் துட்டன், [சேவகன் வர] சேவகன்: மன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம் குடில: வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்? சேவ: போயினர். குடில: ஓ! ஓ! போ இதோ வந்தோம் [சேவகன் போக] (தனதுள்) செயினும் எளியன் திருப்புவம் நொடியே [குடிலனும் பலதேவனும் போக]
|