LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

நான்காம் அங்கம்: இரண்டாம் களம்

     இடம்: கோட்டை வாசல்
    காலம்: காலை

நேரிசை ஆசிரியப்பா
1ம் படைஞன்:    இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்?
எப்படி இருந்த திராஜன் பேச்சு!
கல்லும் உருகிக் கண்ணீர் விடும். இப்
புல்லும் கேட்கிற் புறப்படும் போர்க்கு
2ம் படை :     முற்றும் கேட்டை கொல்?
1-ம் படை:    
    முற்றும் கேட்டேன்.
    சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு
    சரியல ஆணையில் தவறுதல் என்றே
    வெருவிநான் மீண்டேன். இலையேல் உடன்சென்
    றொருகை பார்ப்பேன் ஓகோ! சும்மா
    விடுவேனா! பார்க்கலாம் விளையாட் டப்போது
    என்செய! என்செய! எத்தனை பேரையான்
    பஞ்சாப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில்
    வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்?
    நெஞ்சகம் பிறந்திந் நெடுவாள் தனக்குக்
    கொஞ்சமோ ஊட்டுவன் குருதி! என்செய!
    நினைதொறும் உடலெலாம் தின்பது தினவே!
    பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்!
2-ம் படை :    பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி
குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன்
சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித்
தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால்.
3-ம் படை :    கெடுத்தான் அவனே என்னையும், அன்றேல்
முடித்தே விடுவனென் சபதம் முற்றும்
சண்டிஅச் சங்கரன் வந்துள்ளான் சமர்க்கு.
கண்டேன் கையிற் கிடைக்கிற் பண்டென்
தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த
வாயினை வகிர்ந்து மார்பினை பிளந்து
[வாய்மடித்து பற்கடிக்க]
4-ம் படை :     வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள்
பிஞ்சிற் பழுத்த பேச்சினர்; யானெலாம்
நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன்
சென்றுளேன் ஜனார்த்தனம், கண்டுளேன் வைக்கம்
2-ம் படை:    விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும்
நடுநிசி ஆயினும் அடுகள முழுதும்
தேடுவன்; சங்கரன் செத்தான் ஆயினும்
நாடி யவன்தலை நசுக்கி மிதித்து
வாயிடை நெடுவேல் இறக்கி...
முதற்படை:    
    சீ! சீ!
    சேவக னாநீ! செப்பிய தென்னை!
    யாவரே பிணதோ டாண்மைபா ராட்டுவர்
    பிணமோ பிணத்தோ டெதிர்க்க!
3-ம் படை:     
    போ! போ!
    பெருமைநீ பேசேல், பெற்றவுன் தாயேல்
    அருமைநீ அறிகுவை.
1-ம் படை:    
    யாரா யினுமென்?
    பிணத்தொடு பிணக்கெது? சீ! சீ! அன்றியும்
    ஒருவன் தனக்கா உண்டா குரோதம்
    கருதியிங் கெவன்வாள் உருவினன்? நமக்கெலாம்
    மாதா இவ்வயின் மகாநா டிதுவே.
    ஏதோ அவளையும் நம்மையும் இகழ்ந்திவ்
    வஞ்சியர் வஞ்சமாய் வந்தனர் அதனால்
    நெஞ்சகம் கொதித்து நெடியநம் சுதந்தரம்
    தனக்காய் உயிரையும் உவப்போ டளிக்கத்
    துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம்.
    என்னில் அவரவர் இழுக்குஆர் கருதுவர்?
    உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா
    வந்தபோர் அன்றிஃ தூர்ப்போர். அதனால்
    இதேஅங் கெய்தினோர் யாரே ஆயினும்
    சுதேசாநு ராகத் தொடர்பால் அன்றிப்
    பலவாம் தமது பழம்பழி மீட்போர்
    கொலைபா தகஞ்செயும் கொடுமைய ரேயாம்.
[நாரயணன் படைக்கோலமாகிக் குதிரையின்மேல் வர]
2-ம் படை:    பாரும்! பாரும்! நாரா யணிரிதோ...
நாரயணன்:     உன்பெயர் முருக னன்றோ?
1-ம் படை:    
    அடியேன்.
4-ம் படை:    என்பெயர் சாத்தன் சுவாமி.
நாரா:     ஓகோ!
எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்?
1-ம் படை:    பத்தைஞ் ஞூறுளர், மெத்தவும் உத்தமர்
மிகுதிறத் தார், போர் விரும்பினர். இவர்தம்
தகுதிக் கேற்ப தன்றிக் காதல்
நாரா:    பொறு! பொறு! முருகா புரையற் றோர்க்குமற்
றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும்
சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச்
செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும்
திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு.
2-ம் படை :    வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல்
நாணமும் நோவுமாம் நாரா யணரே!
நாரா:     வேண்டுமென் றாரே விடுப்பர் சிச்சீ
அப்படியேதான் ஆயினும் நமக்குக்
கைப்படு கடமையே கடமை...
    முருகா!
    எத்தனை பேரால் ஏலுமிக் காவல்?
1-ம் படை :     நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி.
நாரா:    அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின்
இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல்
ஏற்றிட வல்லரை மாற்றுநீ நிறுத்திக்
காட்டுதி எனக்கு.
1-ம் படை:     
    காட்டுவன் ஈதோ
    [அணிவகுத்துக் காட்ட]
நாரா:    (தனதுள்)
நல்லணித் தலைவன்; வல்லவர் இவரும்.
1-ம் படை:    ஈதோ நின்றனர்!
[காவற்படைகளை விலக்கி நிறுத்திக் காட்ட]
நாரா:     போதுமோ இவர்கள்?
காவற்படைகள்:     போதுமே யாங்கள்...
நாரா:    எண்ணுமின் நன்றா யேற்குமின்! பின்புநீர்
பண்ணும் தவறுநம் பாலாய் முடியும்
காவற்படை:    தவிர்கிலம் கடமையில் சத்தியம் தலைவ
நாரா:    தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க
மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்?
காவற்படை:    மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல்
நாரா:     சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல்.
பரிமற் றையர்க்கெலாம் உளவோ?
3-ம் படை:    
    ஓகோ!
4-ம் படை:     பெரியதென் பரிபோற் பிறிதிலை.
நாரா:     
    காணுதும்
    அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா!
    மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான்
    வைத்துள படையும் அழைத்திப் புறநீ
    நொடியினில் வருதி.
1-ம் படை:     
    அடியேன், அடியேன்
    [முதற்படைஞன் போக]
நாரா:     ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின்;
[கோட்டை மேல் உலாவி நின்று]
(தனதுள்)
அரும்படை இரண்டும் அதோ!கை கலந்தன.
வரும்பழி யாதோ? மன்னர்க் கேதோ?
ஆவதிங் கறியேன் ஜீவக! ஜீவக!

முற்றுநான் அறிவன்நின் குற்றமும்
குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்?
வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும்
உத்தம ஒழுக்கமும் எத்துணைத்தையோ!
வறிதாக் கினையே வாளா அனைத்தும்

அறியா தொருவனை யமைச்சா நம்பி!
இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை
மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல
என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்?
வாய்த்ததுங் குனைப்போல் வாணாள் வறிதாத்

தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல்
மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே!
சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ?
கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்?
அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை

ஆயிரம் ஆயினும் தாய்மனோான் மணிநிலை
கருதுவர் உன்ன்லம் கருதா தென்செய்வர்?
வருவது வருக! புரிகுவம் நன்மை.
[2ம் படைஞனை நோக்கி]
முருகன் வரவிலை?
2-ம் படை:     வருவன் விரைவில்
நாரா:     அதுவென்? ஆ! ஆ!
2-ம் படை:     
    ஆ! ஆ! அறியேம்!
நாரா:     பலதே வன்படை அலவோ?
2-ம் படை:     ஆம்! ஆம்!
நாரா:    மன்னவன்?
2-ம் படை:    நடுவே.
நாரா:     வலப்புறம்?
2-ம் படை:    குடிலன்.
நாரா:     என்னையிக் குழப்பம் இடப்புறம்?
2-ம் படை:     எதோ!
நாரா:     வருவது முருகன் போலும். முருகா!
[முருகன் வர]
வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம்
(படைவீரரை நோக்கி)
இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும்.
இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்!
1-ம் படை:    வந்தனர் ஈதோ மற்றைய வீரரும்
நாரா:     தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில்
வலம்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம்.
இருபுறம் காக்குதும். வருகவென் அருகே!
(முருகன் காதில்)
குடிலனை நம்பலை.
1-ம் படை:     அடியேன் அறிவேன்.
நாரா:    அறிந்தவா றாற்றுதி! மறந்திடல் மெய்ம்மை!
வம்மின் வீரரே! வம்மின்!
உம்வயின் உளதுநம் செம்மல துயிரே.

[யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல]

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.