இடம்: ஊர்ப்புறத்து ஒரு சார். காலம்: வைகறை. [நடராசன் அருணோதயங் கண்டு நிற்க]
(இணைக்குறள் ஆசிரியப்பா) நடராசன்: பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியந் தொழில்வலோன் நீவியக் கிழியில் தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந்
தூரியந் தொடத் தொடத் துலங்குதல் போல சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து சிறிது சிறிதா யுறுப்புகள் தௌியத்
தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து ஒருமுறை கூவி உழையுளார் புகழ
உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம்
பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும் பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டமாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில்
இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி ததைய்ந் தஞ்சிறை தடவி விளக்கிக் கதுவுங் காத லாணையிட் டறைந்து
பின்புசென் றோயோ தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர் கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பாலைச் சொரிந்த பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி
உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக் கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறைதலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும் வாணீ! மங்காய்! வாழி நின் குணம்!
ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளை நின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு வாங்கியும்; மதியா தவள் போ லாங்கே. ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச்
சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை ஏதியா னெண்ணுவ னோவெ னவுடன்நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும் அழுங்கலை வாணீ! அறிவேன்! அறிவேன்! உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர்
வியர்த்தமே செய்கையும் மொழியும் (உற்றுச் செவி கொடுத்து) "வாணி" என்றபேர் கேட்டனன்! யாரது? காணின் நன்றாம். காரிகை யார்கொல்? [பலதேவனும் ஒரு நற்றாயும் தோழனும் தொலைவில் வர] சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து (ஆசிரியத் துறை) நற்றாய்: நாணமு மென்மகள் நன்னல முமுகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்! (ஆசிரியத் துறை) நற்றாய்: நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம் காணப் பிறர்பொருள் கள்ளல மாதலினால் வாணிக்குரித் தெனக்கேட்ட பின் வௌவலம் வாரலையோ (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) நாராயணன் அன் றுரைத்தது மெய்யே! (ஆசிரியத் துறை) நற்றாய்: நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள்களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்ளலை பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால் வாணி யொளித்து நீவாசித் தறிந்துகொள் வாரலையோ (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தன்னுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! பலதேவன்: எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை சவமவ ளெனக்கேன்? இவள்சுக மெங்கே? பொய்பொய் நம்பலை, ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காகச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன் இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு வருகுவன் ஈதோ! மறக்கன்மின் என்னை! [நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க] தோழன்: செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை! ஐந்தோ? ஆறோ? பல: அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில் தோழன்: வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு பல: வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது; வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு! ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. [பலதேவனும் தோழனும் போக] நட: கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல் கடுவெனப் பரந்தென் கைகால் நடுங்கின கைத்ததென் கண்ணுங் காதும் இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? [நாராயணன் வர] வா! வா! நாரணா! நாராயணன்: ஏ! ஏ! என்னை! சினந்தனை தனியாய்? நட: ஏன்இத் தீயவன் அனந்தைக் கேகுங் காரணம்? நாரா: யார்? யார்? நட: அறிவை! நீவிளை யாடலை; அறைதி நாரா: வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட நட; அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! நாரா: அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் நட: விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவேன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன் நொடி. உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை நாரா: முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவை யவ்வழியே யாற்றிட வாணியை அதட்டினன் நட: அதற்கவள்? நாரா: மறுத்தனள்? நட: எங்ஙனம்? நாரா: 'இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். நட: அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி நாரா: என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நுண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிர் பெரிதுந் திடனே. புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதராற் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப நென்றா ளன்றி யன்ன தவள்கருத் தாமோ? நட: அறியாய்! புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்; இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்; ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன் தந்நய மன்றிப் பின்னொன் றறியாக் காதகர்; கடையர்; கல்வியில் கசடர். நாரா: ஓதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. நட: திரைபொரல் கரையிலும் வௌியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை தியக்கமும் மயக்கமுஞ் செறிவ திரிவையர், உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும், மெய்ம்மையில் தௌிவும், உள்ளார், அவர்தம் உறுதிநீ யுணராய் சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலைதருங் கொடியஇவ் வலகைகள் வழியே புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர் அவாவிற் கனவிலை, அன்போ அறியார் மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ! சீ! சீ! என்இத் தீயவர் செய்கை! மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சும், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச் சென்றுழிச் சென்று நன்றறி வின்றி அலையா வண்ணம் அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ் செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி ஆசையாந் திசைதொறும் அலைந்து திரிந்து கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் அனையார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர் தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ! தம்மெய் யரிவார் போலத் தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவரா நலிந்து பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்ன! துதிபெறு மன்புநற் குணமு முளாரில் துணைவ ராயின் இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பகத் தருவென அற்பமுங் கருதாது அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தந்தா அன்புபா ராட்ட, மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தௌித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து, மற் றொன்றாய் நின்ற எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி உடற்றின வடக்குமா உரைஞ்சிடு தடியென மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங் கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே! நாரணா! இவ்வவயிற் கேட்டதுங் கண்டதுந் தீராத் துயரமே செய்வது, செல்குவன் ஏதா யினுமினி எய்தில், ஓதாய் முனிவர் உறையு ளுற்றே. [நடராசன் போக] (நேரிசை ஆசிரியப்பா) நாரா: (தனிமொழி) நல்லது மிகவும்! செல்லிடந் தோறுங் கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்? புதுமையுங் கிதுவும்! பொருந்துவ தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே [நாராயணன் போக)
|