LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

மூன்றாம் அங்கம் : முதற் களம்

     இடம்: பாண்டியன் அரண்மனை
    காலம்: காலை
    [ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை]

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஜீவ:     ஐயமென்? அருஞ்சூழ் அமைச்சநின்! தனையன்
பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக்
குரியன முற்றும் ஒருங்கே முடித்து
வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும்
உபாயுமும் யாவும் உடையான்; அதனாம்
அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்!
குடிலன்:    பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக்
கிலையிலை ஐயம் சிறிதும் உலகத்து
இயற்கை யறியா இளையோ னாகிலும்
முயற்சியின் மதியின் முதியோன் எனவே
மொழிகுவர். அவனாற் பழுதில கொற்றவ!
வஞ்சி நாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார்
நஞ்சினும் கொடிய நெஞ்சினர். அவர்தாம்
கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்;
என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால்
மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம்.
அன்றியும் புருடோத் தமனெனும் அரசன்
கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும்.
ஜீவ:     சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம்
மனத்தே அவாவி மயங்கு நம் மனோன்மணி
திருவும் வெருவும் உருவும், பெருகும்
அருளுறை யகமும், மருளறு முணர்வும்,
முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன்
அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக்
குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில்
செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல்
தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால்
தலையா லோடி வருவன். உனக்கு
மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே!
குடில:     முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர்
என நாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின்
எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்?
துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்?
சிறந்தநூல் உணர்வும் தௌிந்ததோர் உளமும்
செப்பினர் என்றிடில் ஒப்பெலாந் தகைத்தே,
ஆயினும், மலைய நாட்டரசன் நமது
தாயின் தன்மை சகலமும் இப்போது
அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை
நெறிமுறை சிறிதும் பிறழா நினது
தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம்
அம்மா! தனியே அவன்பல பொழுதும்
மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி
அவயவத் தழகெலாம் மாறா தறைந்தறைந்து,
இமையவர் தமக்கும் இசையுமோ இவளது
பணிவிடை? நமது பாக்கிய மன்றோ?
அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்?
என்றுமிப் படியே இவள்பணி விடையில்
நின்று நம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?
என்றவன் பலமுறை யியம்பல் கேட்டுளனே.
ஜீவ:     ஐயமோ? குடிலா மெய்மையும் இராஜ
பத்தியு நிறைந்த பலதே வன்றன்
சித்த மென்குல திலகமாந் திருவுடன்
பரிவுறல் இயல்பே, அரிதாம் நினது
புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு
ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்
குடில:     அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ!
மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம்
அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன்
ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ,
யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும்;
அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம்
உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே
நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும்
ஜீவ:     ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப்படைந்த
தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை
வேதம் வகுத்த வியாசன் வியந்து
போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையல்
சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவேன்;
ஒருவன் தனதடி யிணையடைந் துறவே
பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவான்;
மற்றோர் மனிதன் சற்று மெண்ணாதே
செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்;
மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்;
பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர்
உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும்
உன்னான் ஆயினும் இன்னவை யாவும்
பிரபுத் துவமலாற் பிறவல குடிலா!
குடி:     அடியேற் கவ்விடத் தையமொன் றுளது
முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்
இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந்
துணிவுறா உளனும் பணிகிலா உறனும்
உனைவிட எவர்க்குள? ஓதுவாய், உன்வயின்
தினையள வேனும் சேரா தாகும்
ஒருகுணம் பிரபுத் துவமென யாரே
உரைதா உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்
மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன்
அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும்
நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான்
என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம்
நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே.
ஜீவ:     ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும்.
குலகுரு கூறுதல் கொண்டில மென்னில்
நலமென் றென்றே நாடி யனுப்பினோம்
நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்?
இயைந்த கணவர்வே றாயிரம், காண்குதும்.
குடி:     அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்!
இதுமாத் திரமன் றிறைவ! சேரன்
சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ
என்றே யென்மனம் பதறும் ஏவுமுன்
உரைக்க உன்னினேன் எனினும் உன்றன்
திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன்.
ஜீவ:     வெருவல குடிலா! அரிதாம் நமது
தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும்
போதலோ காணுதி, பொருநைத் துறைவன்
செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்!
விடுவனோ சிறிதில்? குடில! உன் மகற்குத்
தினைத்துணை தீங்கவன் செய்யின் என்மகட்கும்
பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன்.
[ஒற்றன் வர]
ஒற்றன்:     மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா!
ஜீவ:     எங்குளார்? நமது தூதுவர்?
ஒற்றன்:     
    இதோ! இம்
    மாலையில் வருவர், வாய்ந்தவை முற்றுமிவ்
    ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே!
    [ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க]
குடிலன்:    (தனக்குள்)
ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம்
முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை
போரும் வந்தது; நேரும் புரவலற்
கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன
ஜீவ:     (தனதுள்)
துட்டன்! கெட்டான் விட்டநந் தூதனை
ஏசினான்; இகழ்ந்தான்; பேசிய வதுவையும்
அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப்
படியில் விடுவானாம்; படைகொடு வருவனாம்;
முடிபறித் திடுவனாம்; முடிபறித் திடுவன்!
(குடிலனை நோக்கி)
குடிலா! உனைப்போற் கூரிய மதியோர்
கிடையார், கிடையார், அடையவும் நோக்காய்;
கடையவன் விடுத்த விடையதி வியப்பே!
[குடிலன் ஓலை நோக்க]
குடில:     நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே!
உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற்
குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்!
யுத்தந் தனக்கெள் ளத்தனை யேனும்
வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய
உருவினாள் தனக்கிங் குரைத்தோர் குற்றமும்
இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்!
ஜீவ:     பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும்
ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங்
கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி
குடில:     செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்?
ஒருமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான்.
வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும்,
ஆலவா யுள்ள படைகளை யழைக்கில்
சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே.
ஜீவ:     வேண்டிய தில்லை யீண்டவர் உதவி
தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம்
ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன்
பின்னழைத் திடுவோம்; அதுவே நன்மை
புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி
எலிவேட் டைக்கும் இசையுமோ? இயம்பாய்.
குடில:    அன்றியு முடனே அவன்புறப் படலால்
வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால்
ஜீவ:     இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்?
பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம்
ஆயத்த மாக்குதி; யாமிதோ வந்தனம்.
[ஜீவகன் போக வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து]
சேவகன்:    விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற்
பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம்
நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே
குடிலன்:     நல்லது! நல்லது! செல்லா யப்பால்.
[சேவகன் போக]
(தனதுள்)
சொல்லிய தென்னை? சோரன் நமது
நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ?
இளையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி
நாரண னோர்ந்து நவின்றனன் போலும்
காரணம் அதற்கும் கண்டிலம், ஆ! ஆ!
மாலைக் காசு வாழ்த்தினன் இவனும்!
புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல
"கள்ள மனந்தான் துள்ளு" மென்பதும்
"தன்னுளந் தன்னையே தின்னு" மென்பதும்
"குற்றம் உள்ளோர் கோழையர்" என்பதும்
சற்றும் பொய்யல; சான்றுநம் மிடத்தே
கண்டனம், அவனெம் அண்டையில் அம்மொழி
விளம்பியகாலை விதிர்விதிர்ப் பெய்தி
உளம்பட படத்தென் னூக்கமும் போனதே
சீச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ!
வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே!
நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக்
கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத்
தன்னுளே பன்முறை சாவடந் தடைந்து
பிறர்பொருள் வௌவும் பேதையிற் பேதை
எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!..
நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள!
ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது!
கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்
வா வா காலம் வறிதாக் கினையே
ஓவா திவையெலாம் உளறுதற் குரிய
காலம் வரும்வரும். சாலவும் இனிதே!
[குடிலன் போக]

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.