|
|||||
மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும் - அறநிலையத்துறை |
|||||
![]() "மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்" என்று இந்து சமய அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது. கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் 7ஆவது படைவீடு எனப் பக்தர்களால் போற்றப்படுகின்றது.
இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் 4ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சேவா அறக்கட்டளைத் தலைவரான டி.சுரேஷ்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் விஜயராகவனும் அதேபோன்ற மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், "குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த இரு மனுக்களும் நீதிபதி பரதச் சக்கரவர்த்தி அமர்வு முன் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, "மருதமலை கோவில் குடமுழுக்கின்போது, சமஸ்கிருதத்துக்கு இணையாகத் தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும்" என்றும், "தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மருதமலை கோவில் செயல் அலுவலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குடமுழுக்கு விழாவில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜைகள் நடத்தப்படும் .சிவாச்சாரியார், ஓதுவார் ஆகியோர் தமிழ் மந்திரங்கள் ஓதுவர். பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும்.
யாகசாலையில் சமஸ்கிருதத்துக்கு இணையாகத் தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். யாகப் பூஜையின்போது 36 யாக குண்டத்தில் தமிழிலும் வேறு 36 குண்டத்தில் சமஸ்கிருதத்திலும் வேள்விகள் நடத்தப்படும்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள கணபதி தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகி ந.நித்தியானந்த பாரதி, "முதல் முறையாகத் தமிழ் மொழி இந்து சமய அறநிலையத்துறை கோவிலில் உள்ள வேள்விச் சாலையில் நுழைந்து இருக்கிறது. 72 வேள்விச் சாலையில், சரிபாதி 36 வேள்விச் சாலையில் தமிழில் நடத்த அனுமதி அளித்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியான செய்தி..." என்று தெரிவித்துள்ளார்.
|
|||||
by hemavathi on 29 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|