கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். கடந்த 27-ம் தேதி இரு தலைவர்களும் தொலைப்பேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்’’ என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 10, 11-ம் தேதிகளில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அங்கிருந்து வரும் 12-ம் தேதி அவர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றிரவு ட்ரம்ப் சார்பில் மோடிக்குச் சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது.
வரும் 14-ம் தேதி அமெரிக்கத் தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். கடந்த மாதம் 20-ம் தேதி பதவியேற்பு விழாவுக்குப் பிரதமர் மோடியை அழைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் சந்திக்க உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.