திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும் - ஆயுள்வேத முடையரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும் ('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின். அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம்.காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றுஉம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க் கூறுப.)
மணக்குடவர் உரை:
உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.
தேவநேயப் பாவாணர் உரை:
நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று- மருத்துவ நூலார் ஊதை(வாதம்) முதலாக எண்ணிய முக்கூறுகளும்; மிகினும் குறையினும் நோய் செய்யும்-தாம் இருக்க வேண்டிய அளவிற்குக் கூடினாலும் குறைந்தாலும் உடம்பிற் பல்வேறு நோய்களை உண்டுபண்ணும். 'வளிமுதலா வெண்ணிய முன்று' ஊதை பித்தங் கோழை (சிலேட்டுமம்) என்பன. ஐ அல்லது ஐயம் என்பதும் கோழைக் கொருபெயர். இம் முன்றும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் செய்யும் இன்றியமையாத கூறுகளேயன்றி நோய்களல்ல.மூச்சும் பேச்சும் உட்பொருளிடமாற்றமும் வெளியேற்றமும் தனித்தும் பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது ஊதையின் தொழில்கள்; உண்டதன் செரிமானத்திற்கு உதவுவது பித்தநீர்; தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவுநெய்போற் பயன்படுவது கோழை. இவை உணவுடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபட்டாலும் மிகுதலுங் குறைத்தலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும் என அறிக. இதற்கு மாறாக, மிகுதல் குறைதல்களை உணவு செயல்களின் தொழிலாகவுரைத்துள்ளார் பரிமேலழகர். உணவொவ்வாமையாவது, சுவை மணம் ஆற்றல்களால் உடற்கூற்றொடும் கால விடங்களொடும் பொருந்தாமை. உடையொவ்வாமையாவது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்காமை. செயலொவ்வாமை மிகையுந் தகாமையும், முற்றும்மை தொக்கது. ஆக என்னும் வினையெச்சவீறு 'ஆ' எனக் கடைக்குறைந்து நின்றது. 'நூலோர்' என்பதற்கு ஆயுள்வேத முடையோர் என்று பரிமேலழகர் உரைத்ததும் நச்சுக் கூற்றே. சித்த மருத்துவத்தின் வடநாட்டு வேறுபாடே ஆயுர்வேதம் என அறிக. மேலையர் ஊதை முதலிய முக்கூறுகளையும் அரத்தம்(blood) கோழை(phlegm), பித்தம்(choler), கரும்பித்தம்(melancholy) என நால்வகை நீரங்களாகப் (humours) பகுப்பர்.
கலைஞர் உரை:
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
Translation
The learned books count three, with wind as first; of these,
As any one prevail, or fail; 'twill cause disease.
Explanation
If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.