|
||||||||
அன்னையர் தினம் - தாய்மை - வித்யாசாகர் |
||||||||
சொட்டுச் சொட்டாய் உறிஞ்சும் பாலில் இனிக்கிறது தாய்மை; விட்டுவந்த முதியோரில்லத்தில்தான் வலிக்கிறது தாய்மை!
கற்றதில், கண்டதில், வாழ்ந்ததில் மெத்த உயர்ந்தது தாய்மை, சுற்றத்தில், பக்கத்தில், வீட்டில் இன்றும் மனதால் அழுகிறது தாய்மை!
அப்பா அடித்தால் ஒளிய முந்தானை ஆசிரியர் அடித்தால் வடியக் கண்ணீராய்த் தாய்மை, அம்மாவிற்கே கோபம் வந்தாலும் - அதையும் தனக்குள்ளேயே செரித்துக்கொள்ளும் தாய்மை!
மகனுக்கு கோபமென்று மனதுக்குள் நோகும் தாய்மை, மகளுக்கு வலிக்குமோன்னு பேசாமல் மனதுக்குள் புழுங்கும் தாய்மை!
மெத்தையில், மண்படுக்கையில், முட்களின் மீதுவிழுந்தாலும்; பிள்ளைகளுக்குக் குத்தாதத் தாய்மை, முதுமையில், இயலாமையில், பொறுமையின்மையில் பிள்ளைகளால் குத்தப்படும் தாய்மை!
இரத்தத்துள் தாய்ப்பாலாய் உணர்வுள் தாய்ப்பாலாய் பேச்சில் தாய்ப்பாலாய் சுடாது வேகிறது தாய்மை!
இன்னும் மதிக்கவேண்டி இன்னும் அணைக்கவேண்டி இன்னும் அன்பு வேண்டி இன்னும் புகைப்படத்தில்தான் சிரிக்கிறது தாய்மை!
எச்சிலிலூறி முத்தத்தில் நனைந்து நம்பிக்கையில் நமைப் பெற்றது தாய்மை,
ஒரு சொல்லில் ஒரு பார்வையில் ஒரு அருகாமைப் பொழுதுள் தான் இன்று உயிர்த்துக்கிடக்கிறது தாய்மை;
தாய்மை நமை தாலாட்டுவதற்கு மட்டுமல்ல நாம் தாலாட்டவும்தான்!!
-வித்யாசாகர் |
||||||||
by Swathi on 09 May 2015 0 Comments | ||||||||
Tags: அன்னையர் தினம் Mothers Day Annaiyar Dhinam Amma Day அம்மா தினம் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|