இருள் பாய் சுருள்கின்றது வேறெங்கோ விரிவதற்காய்.
நங்கூரம் தூக்குகின்றது இராமானுஜம் கப்பல்.
இன்னமும் அணையாமல் இராமேஸ்வரம் விளக்கு.
ஆழிக்குமரனும் நீந்திய பாக்கு நீரிணை
சொற்பக் கடல்தான் அப்பால் விரியும் மகா சமுத்திரமாய் விழிநீர் பெருக்குடனும்....
ஆழ்கடல் போர் முடித்து அணி குலைந்து திரும்பும் கடற்புரவிகள்.
கணக்கும் காயமும் கரையினில் தொயுமோ?
நானுமாய் வலை வீசிய கடலிடம் ஏது? கலைகள்தாம் எங்கே?
எனதரும் தோழர் ஏலேலோ பாடகரை உட்கொண்ட கடல்.
அடேய் மைக்கல்.... எதையெல்லாம் நான்....
கடுகின் காரம் நீ. புரண்டெழும் அலைகளில் எற்றுண்ணும் நீர்த்திவலைகள்
காற்று காவி வரும். கண்கள் காக்கும் அழுது விடுவேனோ?
சூரியன் எழுமுன்னால் கரை கடந்தாயிற்று நேசக் கடல் தாண்ட....
காற்றும் கடலுமாய் தொடுத்த போரில் அழிந்து போன கரையும், அழிந்த கரைமேல் சவுக்கு மரத் தோப்பும் கோட்டோ வியமென மங்கித் தொலைவுறும்.
என்னைச் சூழவும் நீலம் மிஞ்சும்.
2.
கனவுகள் மொட்டவிழும் பயமறியாப் பருவம்.
முகில் பற்றைக் காட்டுக்குள் பின்னிலவு புதைந்திருக்கும்.
அழிந்த கரை மேலே கள்ளத் தோணியாலே முன்னமொரு போதில் நான். அலைகளின் எக்களிப்பும் காற்றின் பேச்சொலிப்பும் ஈர மணற் சிலிர்ப்பின் ஊதல் வெடடெப்பும், சவுக்கம் தோப்பசைவின் கருநிழல் எச்சாப்பும், கருங்கற் சுவர் ஒதுக்கால் பவனி வரும் ராஜராஜன் குதிரைக் குளம்பதிர்வும்....
நான் அப்போது அறிந்தேனா இறங்கியது கரையல்ல மானுடப் பேராழியென்று.
அச்சம் தவிரென்று உச்சி முகர்ந்தும்,
செவிலியர் பண்புடன் ஒத்தடம் தந்தும்
நெய்தல் மருதம் குறிஞ்சி முல்லை நிலங்கள் தோறும் என்னுடன் நீங்கள்.
பாலை நிலத்திற்கும் நீர் வார்க்கும் கனவுகள்.
மனங்களில் சுரக்கும் சுனை நீர் ஊற்றுகள்.
நெஞ்சினில் நீர்மை மிகுந்தனாலோ நீர் வற்றிப் போயின காவிரி, வைகை, பாலாறு....
3
பசியாறா வெறியுடன் கடல், மெளன இருட்டாழம் ஆர்ப்பாப்பில் அமுங்கும்.
என்னையும் அழைக்கின்றதா?
வாலிப முறுக்கினில் மிதப்புறும் வெண் நரையாய் நுரை பொங்கும் அலைகள்.
அலை எங்கும் கரையேறும், மண்தனையும் மெல்லும்.
கடல்வாய் கொள்ளுண்ட நிலம் போலாகுமோ துப்பாக்கி வாய்ப்பட்ட என் சிறு தேசம்.
வீரிய விதைகள் இரத்தத்துள் அமிழும், பதர்கள் மிதக்கும்.
சிறு போகம், பெரும் போகம் எல்லாமும் பொய்த்ததுவோ....?
அகதி முகம் பெறவா உயிர்க் களையை நான் இழந்தேன்? தேசமெங்கும் தீ விதைத்தேன்?
துறவறம் கொண்டதும் கடுந்தவம் புரிந்ததும் வரம் பல பெற்றதும் வீரமும் களத்தே விட்டு வெறுங்கையோடு இலங்கை புகும் இராவணேஸ்வரனாகவா?
சிறகுகளைக் கூட காவிச் செல்ல மாட்டாமல்... சரணாலயம் நீங்கும் ஏதிலிப் பறவை.
4.
ஒளிக் கதிரில் சூடேற்றி சூரியன் எழுகின்றான்.
நீண்டும் கோணியும் படியும் என் நிழல்....
மூத்தது கோணலென்றால் பின்னால் பிறந்தவையும்....
இருக்கையும் அதட்டுகிறது.
"என்ன புலம்புகின்றாய் நாடற்றவன் போல.... அகதி முகம் உள்ளதே அப்புறம் என்ன?
நீங்கள் கையுயர்த்தி முகமழித்த மனிதரை நினைவுண்டோ ?
இந்த இருக்கைகளில்தான் எத்தனை ஆயிரம் துயர் கொண்டழுதிட்ட என்புத் தோல் மனிதர்கள்.
மர இருக்கைகளை பிளாஸ்டிக்காய் மாற்றியதே அவர் உகுத்த கண்ணீர்தான்!
அலையின் சுழற்சியை என்னென்பேன் அவர்கள் வந்திறங்கிய கரை இருந்து நீ. வேடிக்கையாக இல்லை.
கவனத்தில் கொள் உன் சந்ததியையும் கேடு சூழும் நாதியற்றவராய்.... நாடற்றவராய்... அப்போது புலம்பு...."
இருப்பு கொள்ள மனம் மறுக்கும் காங்கேசன் துறை நோக்கும் கப்பலின் அணியம்.
ஆபுத்திரன் கரையேறிய மணிபல்லவம் தீவும் மறைகின்றது.
விரிந்த வானத்தில் வெண் முகில்கள் இணைந்தும் கலைந்தும் உருக்கொள்ளத் தவித்தும்,
என் முகம் போல....
5.
நான் எதையெல்லாம் உங்களில் தொற்ற வைத்தேன்?
நீங்கள் எவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டீர்?
நான் அறியேன்.
ஆனால் நான் கனிந்தேன் உங்கள் தோளணைவால் வெம்பலாகாமல்.
வேர் ஏன் அறுந்தது?
அத்தேசம் என்னை உயிர்ப்பிக்கட்டும்.
என்னைத் தள்ளுங்கள்
தள்ள முடியாதவை எல்லாவற்றையுமே உரைத்துப் பாருங்கள் நிறுத்துக் கொள்ளுங்கள்.
நிறுவைப் படிகள் உங்கள் கைகளில்.
காவிரிப் படுகையிலும் வைகைக் கரை நெடுகிலும் காசல் மண் காட்டிலும் என்னுடன் அலைகையில் எதை நீர் விதைத்தீர்?
பருத்தி வெடித்தால் தறியினில் நெய்யலாம், கரும்பு விளைந்தால் ஆலையில் பிழியலாம், கம்பு பயிரானால் கூழ் காய்ச்சிக் குடிக்கலாம், கூட்டு நினைவினில் பயிராகி வளர்ந்தவை ஆறாத் துயரென்றால்.... கருத்துகள் பற்றிக் கொள்ளும்
சந்தேகம் கொள்ளற்க கற்களின் உரசலில் தீப்பொறி தெறிக்கும். பாறை இடுக்கிலும் நீர்மை கசியும்.
சொர்க்க பூமியும் கனவுத் தேசமும் எங்குமே இல்லை.
இரத்தமும் சதையுமாய்த்தான் பாதைகள் விரியும் என் தேசம் போல வெந்து தணியாக் காடாக....
நீலமலைத் தொடானின்றும் ராமர் அணை மேட்டிலிருந்தும் எட்டிச் செல்லாப் பாடமாக....
இன்றுபோய் நாளை வரும். உயிர்ப்பேன் உங்களிடை இருப்பேன்.
கைகள் கொள்ளா கலைச் செல்வங்கள் காவியும் நெஞ்சு முட்ட அன்புதனை நிறைத்தும்
நேசக் கடல் நாடி வருவேன்- முகம் பெற்றவனாக
1988 பாக்கு நீரிணை
|