1. குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின் மேற்கே,சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை, நாற்கோத் துள்ளபல நத்தத்து வேடர்களும் வந்து பறவைகூட வாய்ந்த பெருஞ்சோலை;- அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10
வேடர் வாராத விருந்துத் திருநாளில், பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில் வீற்றிருந்தே,ஆணகுயில்கள் மேனி புளகமுற, ஆற்ற லழிவுபெற,உள்ளத் தனல் பெருக, சோலைப் பறவையெலாம் சூழ்ந்து பரவசமாய்க் 15
காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்கக, இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல், மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல்,வானத்து மோகினியாள் இந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளங்குதல்போல், 20
இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை- முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே-கண்டேன் யான். கன்னிக் குயிலன்று காவிடத்தே, பாடியதோர் 25
இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய், மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ? இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல், காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ? நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ? 30
என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால். அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ? குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே; அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; 35
விந்தைக் குரலுக்கு,மேதினியீர்,என்செய்கேன்!
2. குயிலின் பாட்டு
ராகம்-சங்கராபரணம் ஏக-தாளம் ஸ்வரம் ஸகா-ரிமா-காரீ பாபாபாபா-மாமாமாமா ரீகா-ரிகமா-மாமா (சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்க.) காதல்,காதல்,காதல், காதல் போயிற் காதல் போயிற் சாதல்,சாதல்,சாதல். (காதல்)
1. அருளே யாநல் லொளியே; ஒளிபோ மாயின்,ஒளிபோ மாயின். இருளே,இருளே,இருளே, (காதல்)
2. இன்பம்,இன்பம்,இன்பம்; இன்பத் திற்கோ ரெல்லை காணில், துன்பம்,துன்பம்,துன்பம். (காதல்)
3. நாதம்,நாதம்,நாதம்; நாதத் தேயோர் நலிவுண் டாயின், சேதம்,சேதம்,சேதம். (காதல்)
4. தாளம்,தாளம்,தாளம்; தாளத் திற்கோர் தடையுண் டாயின், கூளம்,கூளம்,கூளம். (காதல்)
5. பண்ணே,பண்ணே,பண்ணே; பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின் மண்ணே,மண்ணே,மண்ணே. (காதல்)
6. புகழே,புகழே,புகழே; புகழுக் கேயோர் புரையுண்டாயின், இகழே,இகழே,இகழே. (காதல்)
7. உறுதி,உறுதி,உறுதி; உறுதிக் கேயோர் உடையுண் டாயின், இறுதி,இறுதி,இறுதி. (காதல்)
8. கூடல்,கூடல்,கூடல்; கூடிப் பின்னே குமரர் போயின், வாடல்,வாடல்,வாடல். (காதல்)
9. குழலே,குழலே,குழலே; குழலிற் கீறல் கூடுங் காலை. விழலே,விழலே,விழலே. (காதல்)
3. குயிலின் காதற் கதை
மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும் ஏக மவுன மியன்றதுகாண்: மற்றதிலோர் இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால், பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால் மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ் 5
ஒற்றைக் குயில் சோக முற்றுத் தலைகுனிந்து வாடுவது கண்டேன்.மரத்தருகே போய்நின்று பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்! ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்! பீழையுனக் கெய்தியதென் பேசாய்! எனக்கேட்டேன். 10
மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர் மாயச்சொல் கூற மனந்தீயுற நின்றேன் காதலை வேண்டிக் கரைகின்றேன்,இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்என்றதுவால் வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய் 15
ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய் காதலர்நீ யெய்துலாக் காரணந்தான் யாதென்றேன். வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே கானக் குயிலி கதைசொல்ல லாயிற்று:- மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல், 20
உண்ம முழுதும் உரைத்திடவேன் மேற்குலத்தீர்! பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன். அறிவும் வடிவுங் குறுகி,அவனியிலே றியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும், தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ, 25
யாவர் மொழியு எளிதுணரும் பேறுபெற்றேன்; மானுடர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்; கானப் பறவை கலகலெனும் ஓசையிலும், காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும், ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும், 30
நீலப் பெருங்கடலேந் நேரமுமே தானிசைக்கும் ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும், மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்குங் 35
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்கதிடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும். 40
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர் வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன். நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் 45
பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னையோ? நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர் மஞ்சரே;என்றன் மனநிகழ்ச்சி காணீரோ? காதலை வேண்டிக் கரைகின்றேன்,இல்லையெனில், சாதலை வேண்டித் தவிக்கின்றேன்என்றதுவே, 50
சின்னக் குயிலதனைச்செப்பியவப் போழ்தினிலே, என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர, உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப் பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்; காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல் 55
சாதலோ சாதல்எனச் சாற்றுமொரு பல்லவியென் உள்ளமாம் வீணைதனில்,உள்ளவீ டத்தனையும் விள்ள ஒலிப்பதலால் வேறோர் ஒலியில்லை, சித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும், அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் 60
சோலைக் கிளியிலெலாந் தோன்றி யொலித்தனவால், நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்; காதல் வழிதான் கரடுமுரடாமென்பர்; சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலே நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; 65
அல்லற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ் வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே; அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில் வந்தருளல் வேண்டும்.மறவாதீர்,மேற்குலத்தீர்! சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல், 70
ஆவி தரியேன்.அறிந்திடுவீர் நான்காநாள், பாவியிந்த நான்குநாள் பத்துயுகமாக் கழிப்பேன்; சென்று வருவீர்,என் சிந்தைகொடு போகினிறீர், சென்று வருவீர்எனத் தேறாப் பெருந்துயரங் கொண்டு சிறுகுயிலுங்கூறி மறைந்ததுகாண். 75
4. காதலோ காதல்
கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன், எண்ணுதலுஞ் செய்யேன்,இருபது பேய் கொண்ட வன்போல் கண்ணும் முகமும் களியேறிக் காமனார் அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க, கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 5
ஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற, சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி, நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ? தறிபடுமோ?யார் படுவார் நாளொன்று போயினது நானு மெனதுயிரும். 10
நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும், மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும், சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா மிஞ்சி நின்றோம்.ஆங்கு,மறுநாள் விடிந்தவுடன், (வஞ்சனைநான் கூறவில்லை)மன்மதனார் விந்தையால், 15
புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல், வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே நீலிதனைக் காண வந்தேன்,நீண்ட வழியினிலே நின்றபொருள் கண்ட நினைவில்லை.சோலையிடைச் 20
சென்றுநான் பார்க்கையிலே,செஞ்ஞாயிற் றொண்கதிரால் பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின் இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம் வேறெங்கோ போயிருப்ப,வெம்மைக் கொடுங்காதல் மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் 25
காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன் கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன்,
5. குயிலும் குரங்கும் மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை. சுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே- வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே! நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே! - கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! 5
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ! காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ! மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ! மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 10
விம்மிப் பரிந்துசொலும் வெந்துய்ச்சொல் கொண்டதுவாய், அம்மவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன், துதேது?நன்றேது?செய்கைந் தௌவிவேது? அந்தக் கணமே அதையுங் குரங்கைனையும் 15
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன். கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும், ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, 20
பேடைக் குயிலிதனைப் பேசியது;-வானரரே! ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும்,ஏந்தலே! நின்னழகைத் தப்புமோ?மையல் தடுக்குந் தரமாமோ? மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே, 25
எண்ணிநின்றார் தம்மை;எனிலொருகால்,ஊர்வகுத்தல் கோயில் அரசு,குடிவகுப்புப் போன் றசில வாயிலிலே,அந்த மதிர் உயர்வெனலாம். மேனி யழனினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, 30
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர்நிக ராவாரோ? ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும், பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் 35
ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும்,கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும், வேறெத்தைச் செய்தாலும்,வேகமுறப் பாய்வதிலே 40
வான ரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே? ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ? பாகையிலே வாலிருக்கப் பாத்ததுண்டு,கந்தைபோல்; வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? 45
சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்- வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ? வானரர் தம்டுள்ளே மணிபோல் உமையடைந்தேன். பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும், நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் 50
தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே ஆவலினாற் பாடுகின்றேன்,ஆரியரே கேட்டருள்வீர், (வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை யானறிந்து கொண்டுவிட்டேன்,யாதோ ஒருதிறத்தால்) நீசக் குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் 55
ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:-
காதல்,காதல்,காதல்; காதல் போயிற் காதல் போயிற் சாதல்,சாதல்,சாதல் முதலியன (குயிலின் பாட்டு) காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும், பாட்டின் சவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார். வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே, 60
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும் ஆவி யுருகுதடி,ஆஹாஹா! என்பதுவும், கண்ணைச் சிமிட்டுவதும்,காலாலுங் கையாலும் மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும், ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! 65
பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன், காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்; காதலினால் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய், எப்பொழுதும் நின்னை இனிப்விரிவ தாற்றுகிலேன், இப்பொழுதே நின்னைமுத்த மிட்டுக் களியுறுவேன் 70
என்றுபல பேசுவதும் என்னுயிரேப் புண்செயவே, கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன் கைவாளை யாங்கே:கனவோ?நனவுகொலோ? தெய்வ வலியோ?சிறுகுரங்கென் வாளுக்குத் தப்பி,முகஞ்சுளித்துத் தாவியொளித்திடவும், 75
ஒப்பிலா மாயத் தொருகயிலுந் தான்மறைய, சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க மேலைச் செயலறியா வெள்ள றிவிற் பேதையேன் தட்டித் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. 80
6. இருளும் ஒளியும்
வான நடுவினிலே மாட்சியுற ஞாயிறுதான் மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான். மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற, உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க, நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு 5
பேணும்னை வந்தேன்;பிரக்கினைபோல் வீழ்ந்துவிட்டேன், மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்; நாலுபுறமுமெனை நண்பர்வந்து சூழ்ந்துநின்றார். ஏனடா மூர்ச்சையுற்றாய்?எங்குசென்றாய்?ஏதுசெய்தாய்? வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் 10
சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி நின்றதென்னே?என்று நெரித்துவிட்டார் கேள்விகளை. இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல் என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம். நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன்இவ் 15
வேளை எனைத்தனியே விட்டகல்வீர்என்றுரைத்தேன். நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார் நைந்து நின்றதாயார் தாம் உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார் சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்; முற்றும் மறந்து முழுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன். 20
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும், மண்டு துயரெனது மார்பையெலாங் கவ்வுவதே! ஓடித் தவறி உடைவனவாம் சொற்களெலாம்; கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம் நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் 25
பேசு மிடைப்பொருனிள் கின்னே மதிபோக்கிக் கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும் விற்பனர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான் மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம். காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன். 30
தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ? கண்ணையினி தென்றுரைப்பார்;கண்ணுக்குக் கண்ணாகி 35
விண்ணை அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்றோ? மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல் நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப்புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி 40
மண்ணைத் தெளிவாக்கி,நீரில் மலாச்சிதந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன். நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும், இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன், 45
துன்பக் கதையின் தொடருரைப்பேன்,கேளீரோ!
7. குயிலும் மாடும் காலைத் துயிலெழுந்து,காலிரண்டு முன்போலே சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே சோலையினில் வந்தநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன், கோலப் பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை. மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே 5
நீலக் குயிலிருந்து நீண்டகதை சொல்லுவதும, கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும், கண்டேன்,வெகுண்டேன்,கலக்கமுற்றேன்;நெஞ்சிலனல் கொண்டேன்,குமைந்தேன்,குமுறினேன்,மெய்வெயர்த்தேன்; 10
கொல்லவாள் வீசல் குறித்தேன். இப் பொய்ப்பறவை சொல்லுமொழி கேட்டதன்பின் கொல்லுதலே சூழ்ச்சியென முன்போல் மறைந்துநின்றேன்;மோகப் பழங்கதையைப் பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும் கொண்டு,குயிலாங்கே கூறுவதாம்;நந்தியே! 15
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே! பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுடோ? மானுடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். 20
காளயர்தம் முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே! நீள முகமும்,நிமிர்ந்திருக்குங் கொம்புகளும், பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும், மிஞ்சுப் புறச்சுமையும்,வீரத் திருவாலும், வானத் திடிபோல மாவென் றுறுமுவதும், 25
ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால் வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும்,பல் காலம்நான் கண்டு கடுமோக மாய்விட்டேன். பார வடிவும் பயிலு முடல்வலியும் தீர நடையும் சிறப்புமே இல்லாத 30
சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன். அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு, மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம் சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி 35
என்னபயன் பெற்றேன்? எனைப்போலோர் பாவியுண்டோ? சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன்வயிற்றில் போற்றுமொளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ? நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும் ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே 40
சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ? வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை. மூட மதியாலோ, முன்னைத் தவத்தாலோ, ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்! மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் 45
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் தெய்வமென நீருதவி செய்தபின்னர்,மேனிவிடாய் எய்தி யிருக்கு மிடையினிலே,பாவியேன் வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்; வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன், 50
வாலிலடி பட்டு மனமகிழ்வேன்,மாவென்றே ஒலிடு நும் பேரொலியோ டொன்று படக் கத்துவேன் மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன், கானிடையே சுற்றிக் கழனியெல்லாம் மேய்ந்து,நீர் மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் 55
பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன். காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே! தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர். காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன். 60
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால், தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ? ஒஒதத குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம். இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ? தேவர் முன்னே அன்புரைக்கச் சிந்தை வெட்கங் கொள்வதுண்டோ? 65
காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்? ஆசைதான் வெட்கம் அறியுமோ?என்றுபல நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே. 70
காதல்,காதல்,காதல்; காதல் போயிற் காதல் போயிற், சாதல்,சாதல்,சாதல் முதலியன (குயிலின் பாட்டு) பாட்டுமுடியும்வரை பாரறியேன்,விண்ணறியேன்; கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்! தன்னை யறியேன்,தனைப்போல் எருதறியேன்; பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே கண்டேன்,படைப்புக் கடவுளே! நான்முகனே! 75
பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார். நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய் நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய், காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி தோறுவித்தாய்,நின்றன்,தொழில்வலிமை யாரறிவார் 80
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்; எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் 85
பொல்லாப் பிரமாஇபுகுத்தி விட்டாய்,அம்மாவோ! காலம் படைத்தாய்,கடப்பதிலாத் திக்கமைத்தாய்; ஞாலம் பலவினிலும் நாடோறுந் தாம்பிறந்து தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்; சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான் முகனே! 90
சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்! தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்? ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே, கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா! காட்டுநெடு வானம்,கடலெல்லாம் விந்தையெனில் 95
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில் நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ? ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே, ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ? 100
செத்தைக் குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர் வித்தை முடிந்தவுடன்,மீட்டுமறி வெய்திநான் கையினில் வாளெடுத்துக் காளையின்மேல் வீசினேன் மெய்யிற் படுமுன் விரைந்ததுதான் ஓடிவிட, வன்னக் குயில் மறையப் பறவையெலாம் 105
முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க, நாணமில்லாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை வீணிலே,தேடியபின்,வீடுவந்து சேர்ந்துவிட்டேன். எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை; கண்ணிலே நீர்ததும்பக் கானக் குயிலெனக்கே 110
காதற் கதையுரைத்து நெஞ்சங் கரைத்ததையும், பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும், இன்பக் கதையின் இடையே தடையாகப் புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும் ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல் 115
தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும், சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும், இத்தனைகோ லத்தினுக்கும் யான்வேட்கை தீராமல் பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும்- 120
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை; கண்ணிரெண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன்.
|