8. நான்காம் நாள்
நான்காம்நாள் எனனை நயவஞ் சனைபுரிந்து வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த பொய்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள் மெய்மை யறிவிழந்தேன்,வீட்டிலே மாடமிசை சித்தந் திகைப்புற்றோர் செய்கை யறியாமல். 5
எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம் மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே, காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால் வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும் யானதனைக் கண்டே,இது நமது பொய்க்குயிலோ? 10
என்று திகைத்தேன்: இருந்தொலைக்கே நின்றதனால் நன்று வடிவம் துவங்கவில்லை; நாடுமனம் ஆங்கதனை விட்டுப் பிரிவதற்கு மாகவில்லை. ஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான் வீதியிலே வந்துநின்றேன்.மேற்றிசையில் அவ்வுருவம் 15
சோதிக் கடலிலே தோன்றுவரும் புள்ளியெனக் காணுதலும்,சற்றே கடுகி யருகேபோய், நாணமிலாப் பொய்க்குயிலோ என்பதனை நன்கறிவோம் என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால். நின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால், 20
யான்நின்றால் தான்நிற்கும் சென்றால் தான்செல்லும்; மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது வானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும். யான்நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்புநாம் கூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த 25
ஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால். மாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல் சின்னக் கருங்குயிலி செவ்வனே வீற்றிருந்து, பொன்னங் குழலின் புதிய ஒலிதனிலே 30
பண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தான்பாடிக் கொண்டிருத்தல் கண்டேன்.குமைந்தேன்;எதிரேபோய். நீசக் குயிலே,நிலையறியாப் பொய்மையே, ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை 35
நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன், கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்;மறுபடியும் நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன் ஈங்கிதற்குள், வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக் 40
கண்ணிலே பொய்ந்நீர் கடகடெனத் தானூற்றப் பண்ணிசைபோ லின்குரலாற் பாவியது கூறிடுமால்; ஐயனே,என்னுயிரின் ஆசையே ஏழையெனை வையமிசை வைக்கத் திருவுளமோ? மற்றெனையே கொன்று விடச் சித்தமோ?கூறீர் ஒருமொழியில்! 45
அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது, ஞாயிறுதான் வெம்மைசெயில்,நாண்மலர்க்கு வாழ்வுளதோ? தாயிருந்து கொன்றால்,சரண்மதலைக் கொன்றுளதோ? தேவர் சினந்துவிட்டால்,சிற்றுயிர்கள் என்னாகும்? ஆவற் பொருளே! அரசே! என் ஆரியரே! 50
சிந்தையில் நீர் என்மேற்சினங்கொண்டால் மாய்ந்திடுவேன் வெந்தழலில் வீழ்வேன்,விலங்குகளின் வாய்ப்படுவேன். குற்றம் நீர் என்மேற் கொணர்ந்ததனை யானறிவேன். குற்றநுமைக் கூறுகிலேன் குற்றமிலேன் யானம்ம! புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு 55
மென்மையுறக் காதல் விளையாடினேன் என்றீர்; என்சொல்கேன்! எங்ஙனுய்வேன்! ஏதுசெய்கேன்,ஐயனே! நின்சொல் மறக்க நெறியில்லை;ஆயிடினும் என்மேல் பிழையில்லை;யாரிதனை நம்பிடுவார்? நின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன், 60
வெவ்விதியே! நீ என்னை மேம்பாடுறச் செய்து செவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும், அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட,நான் அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும், 65
எக்கதிக்கும் ஆளாவேன்;என்செய்கேன்?வெவ்விதியே!
9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல் தேவனே! என்னருமைச் செல்வமே! என்னுயிரே! போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்! முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில் மாங்கிளையி லேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன். 5
ஆங்குவந்தார் ஓர்முனிவர்,ஆரோ பெரியரென்று பாதத்தில் வீழ்நது பரவினேன்; ஐயரென ஆதரித்து வாழ்த்தி யருளினார்,மற்றதன்பின், வேத முனிவரே,மேதினியில் கீழ்ப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன், சாதிக் குயில்களைப்போல் 10
இல்லாமல்,என்தன் இயற்கை பிரிவாகி, எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன்? மானுடர்போற் சித்தநிலை வாய்த்திருக்குஞ் செய்தியேன்? யானுணரச் சொல்வீர் என வணங்கிக் கேட்கையிலே கூறுகின்றார் ஐயர்;குயிலே கேள். முற்பிறப்பில் 15
வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன் வீர முருகனெனும் வேடன் மகளாகச் சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர் மலையில் வந்து பிறந்து வளர்ந்தாய் நீ, நல்லிளமை முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில் 20
யாரும் நினக்கோர் மணையில்லை என்றிடவே சீருயர நின்றாய்;செழுங்கான வேடரிலுன் மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான்; காமன் கணைக்கிரையாய்,நின்னழகைக் கண்டுருகி, நின்னை மணக்க நெடுநாள் விரும்பி,அவன் 25
பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு நித்தம் கொடுத்து,நினைவெல்லாம் நீயாகச் சித்தம் வருந்துகையில்,தேமொழியே,நீ யவனை மாலையிட வாக்களித்தாய்;மையலினா லில்லை;அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்; 30
ஆயிடையே,நின்றன் அழகின் பெருங்கீர்த்தி தேயமெங்குந் தான்பரவத் தேன்மலையின் சார்பினிலோர் வேடர்கோன்,செல்வமும் நல் வீ ரமுமே தானுடையான்; நாடனைத்தும அஞ்சி நடுஞ்குஞ் செயலுடையான், மொட்டை புலியனுந்தன் மூத்த மகனான 35
நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி, நின்னை மணம்புரிய நிச்சயித்து,நின்னப்பன் தன்னை யணுகி,நின்னோர்தையலையென் பிள்ளைக்குக் கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன் என்னிடலும், எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே,நின்தந்தை 40
ஆங்கே உடம்பட்டான்;ஆறிரண்டு நாட்களிலே பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார். பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில் அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு, மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து 45
நாடிச் சினத்துடனே நானா மொழிகூற, நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால், காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா,கடுமையினால் நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும், கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும் 50
மாதமொரு மூன்றில் மருமம் சிலசெய்து பேதம் விளைவித்துப் பின்னங்கே வந்திடுவேன்; தாலிதனை மீட்டுவர் தங்களிட மேகொடுத்து நாலிரண்டு மாதத்தே நாயகான நின்றனையே பெற்றிடுவேன்;நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ? 55
மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா என்றுரைத்தாய்; காதலினா லில்லை கருணையினால் இஃதுரைத்தாய் (மாதரசாய்,வேடன் மகளான முற்பிறப்பில், சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்) பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின்,பெண்குயிலி, 60
நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே, வேட்டிக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான் தன்னருமை மைந்தன்;தனியே,துணைபிரிந்து, 65
மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத் தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை வாழியவன் கண்டுவிட்டான்,மையல் கரைகடந்து நின்னைத் தனக்காக நிச்சயித்தான்,மாதுநீ மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய். 70
நின்னையவன் நோக்கினான்;நீயவனை நோக்கி நின்றாய்; அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர், தோழியரும் வேத்ன் சுடர்க்கோலந் தான்கண்டே ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே அஞ்சி மறைந்து விட்டார்.ஆங்கவனும் நின்னிடத்தே. 75
வஞ்சித் தலைவன் மகன்யான்எனவுரைத்து, வேடர் தவமகளே. விந்தை யழகுடையாய்! ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்று பெற்றேன்; கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்என்றிசைக்க, மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய். 80
ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்; கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்; அன்னவரைச் சேர்ந்தேநீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர், மன்னவரை வேண்டேன் மலைக்குறவர் தம்மகள்யான்; 85
கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ? வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்? பத்தினியா வாழ்வதெல்லால் பார்வேந்தர் தாமெனினும் நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை, பொன்னடியைப் போற்றுகின்றேன்,போய் வருவீர் தோழியரும் 90
என்னைவிட்டுப் போயினரே,என்செய்கேன்? என்று நீ நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே,வேந்தன் மகன் விஞ்சிநினிறன் காதல் விழீக்குறிப்பி னாலறிந்தே, பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ் செக்கச் சிவக்க முத்தமிட்டான்,சினங்காட்டி 95
நீ விலகிச் சென்றாய்-நெறியேது காமியர்க்கே?- தாவி நின்னைவந்த தழுவினான் மார்பிறுக, நின்னையன்றி ஓர்பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே பொன்னே,ஒளிர்மணியே புத்தமுதே,இன்பமே, நீயே மனையாட்டி,நீயே அரசாணி, 100
நீயே துணைஎனக்கு,நீயே குலதெய்வம். நின்னையன்றிப் பெண்ணை நினைப்பேனோ? வீணிலே என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே நின்மனைக்குச் சென்றிடுவோம்;நின்வீட்டி லுள்ளோர் பால் என்மனத்தைச் சொல்வேன்,எனதுநிலை யுரைப்பேன். 105
வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன் மாதரசே! என்று வலக்கைதட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய். வாரிப் பெருந்திரை போல் வந்த மகிழ்ச்சியிலே நாணந் தவிர்த்தாய்;நனவே தவிர்ந்தவளாய், 110
காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே சேர்ந்துவிட்டாய்,மன்னன்றன் திண்டோளை நீயுவகை ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச் சிந்தை கொண்டாய்,வேந்தன்மகன்,தேனில் விழும் வண்டினைப்போல். விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல், 115
ஆவலுடன் நின் யறத்தழுவி,ஆங்குனது கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே; சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன், மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டுக் குதூகலமாய் 120
ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன்,- நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்துவிட்டான். பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப் பார்! கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை. மண்ணாக்கி விட்டாள்! என் மானந்தொலைத்து விட்டாள்! 125
நிச்சிய தாம்பூலம்நிலையா நடந்திருக்கப் பிச்சைச் சிறுக்கிசெய்த பேதகத்தைப் பார்த்தாயோ? என்று மனதில எழுகின்ற தீயுடனே நின்று கலங்கினான் நெட்டைக் குரங்கனங்கே மாப்பிளைதான் ஊருக்கு வந்ததையும்,பெண்குயிலி 130
தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று பாடி விளையாடும் பண் புகேட் டேகுரங்கன் ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம் யாரோ உரைத்துவிட்டார்;ஈரிரண்டு பாய்ச்சலிலே நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே 135
மாடனங்கு வந்துநின்றான்.மற்றிதனைத் தேன்மலையின் வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பாக்கவில்லை நெடைக் குரங்கன்ங்கு நீண்ட மரம்போலே எட்டி நிற்குஞ் செய்தி இவன் பார்க்க நேரமில்லை. அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று 140
தன்னையே இவ்விருவர் தாங்கண்டார்,வேறறியார், மாடனதைத் தான்கண்டான்,மற்றவனும் அங்ஙனமே மாமன் வெறிகொண்டான் மற்றவனும் அவ்வாறே காவலன் றன் மைந்தனுமக் கன்னிகையுந் தானுமங்கு தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை. 145
ஆவிக் கலப்பின் அழுத சுகந்தனிலே மேவியங்கு மூடீ யிருந்த விழிநான்கு ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு மாடனுத்ன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே 150
ஓடி வந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்தான் வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாளுருவி வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர் தாம் பேச்சிழந்தே அங்கு பிணமாகக் கிடந்துவிட்டார். 155
மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான், பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில் வாரி யெடுத்துவைத்து வாய்ப்புலம்பக் கண்ணிரண்டும் மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான்; 160
பெண்ணே,இனிநான் பிழைத்திடேன்;சில்கணத்தே ஆவி துறப்பேன்,அழுதோர் பயனில்லை. சாவிலே துன்பமில்லை;தையலே,இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவம்,பொன்னே,நினைக்கண்டு, காமுறுவேன்;நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; 165
இன்னும் பிறவியுண்டு;மாதரசே இன்பமுண்டு, நின்னுடனே வாழ்வனினி நேரும் பிறப்பினிலே என்று சொல்லிக் கண்மூடி,இன்பமுறு புன்னகைதான் நின்று முகத்தே நிலவுதர,மாண்டனன் காண். மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது 170
பீடையுறு புள்வடிவம் பேதையுனக் கெய்தியது, வாழிநின்றன் மன்னவனும் தொண்டை வளநாட்டில் ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில் மானிடனாத் தோன்றி வளருகின்றான் நின்னையொரு கானிடத்தே காண்பான்.கனிந்துநீ பாடும்நல்ல 175
பாட்டினைத்தான் கேட்பான்.பழவினையின் கட்டினால் மீட்டு நின்மேற் காதல்கொள்வான் மென்குயிலே! என்றந்தத் தென்பொதியை மாமுனிவர் செப்பினார்.சாமீ, குயிலுருவங் கொண்டேன் யான்,மோமானோ மேன்மை பயிலு மனிதவுருப் பற்றிநின்றான்,எம்முள்ளே 180
காதலிசைந் தாலுங் கடிமணந்தான் கூடாதாம். சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல் பொய்யாய் முடியாதோ?என்றிசைத்தேன் புன்னகையில் ஐயர் உரைப்பார்-அடி பேதாய்,இப்பிறவி தன்னிலும் நீ விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக் 185
கன்னியெனத் தான் பிறந்தாய் கர்ம வசத்தினால், மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக் காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் நின்னையங்கே.இப்பிறப்பில் நீயும் பழமைபோல் மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும் 190
நின்னைக் குயிலாக்கி நீ செல்லுந் திக்கிலெலாம் நின்னுடனே சுற்றுகின்றார்.நீயிதனைத் தேர்கிலையோ? என்றார் விதியே! இறந்தவர்தாம் வாழ்வாரை நின்று துயருறுத்தல் நீதியோ பேய்களெனைப் பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி 195
வாதைப் படுத்தி வருமாயில்,யாதெனது காதலனைக் காணுங்கால்,காய்சினத்தால் ஏதேனும் தீதிழைததால் என்செய்வேன்? தேவரே,மற்றிதற்கோர் மாற்றிலையோ?என்று மறுகி நான் கேட்கையிலே, தேற்றமுறு மாமுனிவர் செப்புகின்றார்:-பெண்குயிலே! 200
தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன் கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு நேசம் மிகுதியுற்று நிற்கையிலே,பேயிரண்டும் மோசம் மிகுந்த முழுமாயச் செய்கை பல செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல் வேந்தன் 205
ஐயமுறச் செய்துவிடும்,ஆங்கவனும் நின்றனையே வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான். பிந்தி விளைவதெல்லாம் பின்னேநீ கண்டு கொள்வாய், சந்தி ஜபம் செய்யுஞ் சமயமாய் விட்டதென்றே 210
காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர் காதலரே! மாற்றி உரைக்கவில்லை.மாமுனிவர் சொன்னதெல்லாம் அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ! திருவுளத்தில் எப்படிநீர் கொள்வீரோ யானறியேன்.ஆரியரே! 215
காத லருள்புரிவீர் காதலில்லை யென்றிடிலோர், சாத லருளித் தமது கையால் கொன்றிடுவீர்! என்று குயிலும் எனதுகையில் வீழ்ந்ததுகாண், கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ பெண்ணென்றால் பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ? 220
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ? மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ? அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு முன்புவைத்து நோக்கியபின் மூண்டுவரும் இன்பவெறி கொண்டதனை முத்தமிட்டேன்.கோகிலத்தைக் காணவில்லை. 225 விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா! ஆசைக் கடலின் அமுதடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! பெண்ணொருத்தி அங்குநின்றாள்;பேருவகை கொண்டுதான் கண்ணெடுக்கா தென்னைக்கணப்பொழுது நோக்கினாள், 230
சற்றே தலைகுனிந்தாள் சாமீ! இவளழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ? மீள விழியில் மிதந்த கவிதையெலாம் சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம் 235
பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான் என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை நின்றதொரு மின்கொடி போல் நேர்ந்தமணிப் பெண்ணரசின் மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும் தேனி லினியாள் திருத்த நிலையினையும் 240
மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை கற்றவர்க்குச் சொல்வேன்,கவிதைக் கனிபிழிந்த சாற்றினிலே,பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து, காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் 245
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனெப்பேன். பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்த பின்னே, 250
பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம் ஒக்க மறைந்திடலும்,ஓஹே! எனக்கதறி வீழ்ந்தேன்.பிறகு விழிதிறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்மைச் சுவடி,எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம்,பழம்பாய்-வரிசையெல்லாம் 255
ஒத்திருக்கநாம் வீட்டில் உள்ளோம்எனவுணர்ந்தேன். சோலை,குயில்,காதல்,சொன்னகதை யத்தனையும், மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன். ஆன்ற தமிழ்ப் புலர்,கற்பனையே யானாலும், 260
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரோ?
|