|
||||||||
முப்பெரும் பாடல்கள் - பாஞ்சாலி சபதம் - இரண்டாம் பாகம் பகுதி - 1 |
||||||||
மூன்றாவது அடிமைச் சருக்கம்
39. பராசக்தி வணக்கம்
ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என்
றமைத்தனம் சிற்பி, மற் றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான்; உலகினோர் தாய் நீ!
யாங்க ணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே. 205
40. சரஸ்வதி வணக்கம்
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகி னிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே! நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ ணாதோ! 206
41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்
வேறு
அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான்,
நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
புருவ மாங்குத் துடிக்கச் சினத்தின்
வெறித லைக்க, மதிம ழுங்கிப் போய்
வேந்தன் இஃது விளம்புத லுற்றான். 207
வேறு
நன்றி கெட்ட விதுரா! -சிறிதும் நாண மற்ற விதுரா!
தின்ற உப்பி னுக்கே-நாசந் தேடுகின்ற விதுரா!
அன்று தொட்டு நீயும்-எங்கள் அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான்-எந்தை மதியை என் னுரைப்பேன்! 208
ஐவருக்கு நெஞ்சம்-எங்கள் அரண்மனைக்கு வயிறும்,
தெய்வமன் றுனக்கே-விதுரா! செய்து விட்டதேயோ?
மெய்வகுப் பவன்போல், -பொதுவாம் விதி உணர்ந்தவன்போல்,
ஐவர் பக்கம் நின்றே, -எங்கள் அழிவு தேடுகின்றாய். 209
மன்னர் சூழ்ந்த சபையில்-எங்கள் ம்ற்றலார் களோடு
முன்னர் நாங்கள் பணயம்-வைத்தே முறையில் வெல்லுகின்றோம்,
என்ன குற்றங் கண்டாய்? -தருமம் யார்க் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கி றோமோ? -பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ? 210
பொய்யுரைத்து வாழ்வார், -இதழிற் புகழுரைத்து வாழ்வார்.
வைய மீதி லுள்ளார், -அவர்தம் வழியில் வந்ததுண்டோ?
செய்யொணாத செய்வார்- தம்மைச் சீருறுத்த நாடி,
ஐயா! நீ எழுந்தால்-அறிஞர் அவல மெய்தி டாரோ? 211
அன்பிலாத பெண்ணுக்கு-இதமே ஆயிரங்கள் செய்தும்,
முன்பின் எண்ணு வாளோ? -தருணம் மூண்ட போது கழிவாள்;
வன்பு ரைத்தல் வேண்டா, -எங்கள் வலி பொறுத்தல் வேண்டா,
இன்ப மெங்க ணுண்டோ, -அங்கே ஏகி டென் றுரைத்தான். 212
42. விதுரன் சொல்லுவது
வேறு
நன்றாகும் நெறியறியா மன்னன், அங்கு
நான்குதிசை அரசர்சபை நடுவே, தன்னைக்
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொற் கூறிக்
குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தான்;
சென்றாலும் இருந்தாலும் இனிஎன் னேடா?
செய்கைநெறி அறியாத சிறியாய், நின்னைப்
பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்;
பொல்லாத விதிஎன்னைப் புறங்கண் டானால்! 213
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
கருங்கல்லில் விடந்தோய்ந்த நெஞ்சுங் கொண்டோர்
படுஞ்செய்தி தோன்றுமுனே படுவர் கண்டாய்.
பால்போலும் தேன்போலும் இனிய சொல்லோர்
இடும்பைக்கு வழிசொல்வார்; நன்மை காண்பார்
இளகுமொழி கூறார்என நினைத்தே தானும்,
நெடும்பச்சை மரம்போலே வளர்ந்து விட்டாய்-
நினக்கெவரும் கூறியவ ரில்லை கொல்லோ? 214
நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி! நின் அவைக்களத்தே அமைச்ச ராக
வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை
வைத்திருத்தல் சிறிதேனுந் தகாது கண்டாய்.
சிலங்கைப் பொற் கச்சணிந்த வேசை மாதர்
சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர், மற்றுங்
குலங்கெட்ட புலைநீசர், முடவர், பித்தர்
கோமகனே! நினக்குரிய அச்சர் கண்டாய்! 215
சென்றாலும் நின்றாலும் இனிஎன் னேடா?
செப்புவன நினக்கெனநான் செப்பி னேனோ?
மன்றார நிறைந்திருக்கும் மன்னர், பார்ப்பார்
மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்.
இன்றோடு முடிகுவனதோ? வருவ தெல்லாம்
யானறிவேன், வீட்டுமனும் அறிவான் கண்டாய்.
வென்றான் உள் ஆசையெலாம் யோகி யாகி
வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின் றாரேன. 216
விதிவழிநன் குணர்ந்திடினும், பேதை யேன்யான்,
வெள்ளைமன முடைமையினால், மகனே, நின்றன்
சதிவழியைத் தடுத்துரைசள் சொல்லப் போந்தேன்
சரி, சரி இங் கேதுரைத்தும் பயனொன் றில்லை,
மதிவழியே செல்லு கென விதுரன் கூறி
வாய்மூடித் தலைகுனிந்தே இருதக்கைகொண்டான்.
பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான்,
பாரதப்போர் வருமென்று தேவ ரார்த்தார். 217
43. சூது மீட்டும் தொடங்குதல்
வேறு
காயு ருட்ட லானார்-சூதுக் களி தொடங்க லானார்.
மாய முள்ள சகுனி-பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்:
நீ அழித்த தெல்லாம்-பின்னும் நின் னிடத்து மீளும்,
ஓய் வடைந்திடாதே-தருமா! ஊக்க மெய்துகென்றான். 218
கோயிற் பூசை செய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன்-வீட்டை வைத் திழத்தல் போலும்
ஆயிரங்க ளான-நீதி யவை உணர்ந்த தருமன்
தேயம் வைத் திழந்தான்; -சிச்சீ! சிறியர் செய்கை செய்தான். 219
நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல் நரர்க ளென்று கருதார்;
ஆட்டு மந்தை யா மென்-றுலகை அரச ரண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள்-பல தாங் காட்டினார்களேனும்.
நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை 220
ஓரஞ் செய்திடாமே தருமத் துறுதி கொன் றிடாமே,
சோரஞ் செய்திடாமே-பிறரைத் துயரில் வீழ்த் திடாமே
ஊரை யாளு முறைமை-உலகில் ஓர் புறத்து மில்லை
சார மற்ற வார்ததை! -மேலே சரிதை சொல்லுகின்றோம். 221
44. சகுனி சொல்வது்
வேறு
செல்வம்முற் றிழந்த விட்டாய்! -தருமா
தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந் தாய்.
பல்வளம் நிறை புவிக்கே-தருமன்
பார்த்திவன் என்ப தினிப்பழங் கதைகாண்!
சொல்வதோர் பொருள் கேளாய்; -இன்னுஞ்
சூழ்ந்தொரு பணயம்வைத் தாடுதி யேல்,
வெல்வதற் கிடமுண் டாம்; ஆங்கவ்
வெற்றியி லனைத்தையும் மீட்டலாம். 222
எல்லா மிழந்த பின்னர்-நின்றன்
இளைஞரும் நீரும் மற்றெதிற் பிழைப்பீர்?
பொல்லா விளையாட்டில்-பிச்சை
புகநினை விடுவதை விரும்புகிலோம்.
வல்லார் நினதிளை ஞர்-சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணய மென்றே;
சொல்லால் உளம்வருந் தேல்; -வைத்துத்
தோற்றதை மீட்டென்று சகுனி சொன்னான். 223
வேறு
கருணனும் சிரித்தான்:-சபையோர்
கண்ணின் நீருதிர்த் தார்.
இருள்நிறைந்த நெஞ்சன், -களவே
இன்ப மென்று கொண்டான்
அரவு யர்த்த வேந்தன்-உவகை
ஆர்த்தெழுந்து சொல்வான்;
பரவு நாட்டை யெல்லாம்-எதிரே
பணய மாக வைப்போம். 224
தம்பிமாரை வைத்தே-ஆடித்
தருமன் வென்று விட்டால்,
முன்பு மாமன் வென்ற-பொருளை
முழுதும் மூண் டளிப்போம்.
நம்பி வேலை செய்வோம்; -தருமா!
நாடிழந்த பின்னர்
அம்பி னொத்த விழியாள்-உங்கள்
ஐவருக்கு முரியாள் 225
அவள் இகழ்ந்திடாளோ? -அந்த
ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம்; -மேலே
களி நடக்குகென்றான்.
இவள வான பின்னும்-இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்.
துவளும் நெஞ்சினா ராய்-வதனம்
தொங்க வீற் றிருந்தார். 226
வீமன் மூச்சு விட்டான்-முழையில்
வெய்ய நாகம் போலே;
காம னொத்த பார்த்தான்-வதனக்
களை இழந்து விட்டான்;
நேம மிக்க நகுலன்-ஐயோ!
நினை வயர்ந்து விட்டான்
ஊமை போலிருந் தான்-பின்னோன்
உண்மை முற்றுணர்ந் தான். 227
கங்கை மைந்த னங்கே-நெஞ்சம்
கன லுறத் துடித்தான்;
பொங்கு வெஞ் சினத்தால்-அரசர்
புகை யுயிர்த் திருந்தார்;
அங்கம் நொந்து விட்டான், -விதுரன்
அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்தை நாய்கள் கொல்லுஞ்
செய்தி காண லுற்றே. 228
45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்
வேறு
எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை
ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை
தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -அங்குச்
செப்பினன் காயை உருட்டினார்-அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான். 229
46. நகுலனை இழத்தல்
நகுலனை வைத்தும் இழந்திட்டான்; -அங்கு
நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி-வந்து
புகுவது போலவன் புந்தியில்என்ன
புன்மை செய்தோம்? என எண்ணினான்-அவ்வெண்ணம்
மிகுவதன் முன்பு சகுனியும்-ஐய!
வேறோரு தாயிற் பிறந்தவர்-வைக்கத்
தகுவ ரென்றிந்தச் சிறுவரை-வைத்துத்
தாயத்தி லேஇழந் திட்டனை. 230
திண்ணிய வீமனும் பார்த்தனும்-குந்தி
தேவியின் மக்களுனை யொத்தே-நின்னிற்
கண்ணியம் மிக்கவர் என்றவர்-தமைக்
காட்டுதற் கஞ்சினை போலும் நீ? -என்று
புண்ணியமை மிக்க தருமனை-அந்தப்
புல்லன் வினவிய போதினில், -தர்மன்
துண்ணென வெஞ்சின மெய்தியே, -அட!
சூதில் அரசிழந் தேகினும். 231
47. பார்த்தனை இழத்தல்
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; ஐவர்
எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண், -இவர்
பங்கமுற் றேபிரி வெய்துவார்-என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய்; -அட!
சிங்க மறவர் தமக்குள்ளே-வில்லுத்
தேர்ச்சியி லேநிக ரற்றவன், -எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும்-விலை
யீடெனக் கொள்ளத் தகாதவன். 232
கண்ணனுக் காருயிர்த் தோழனாம்-எங்கள்
கண்ணிலுஞ் சால இனியவன்,
வண்ணமும் திண்மையும் சோதியும்-பெற்று
வானத் தமரரைப் போன்றவன்-அவன்
எண்ணரு நற்குணஞ் சான்றவன், -புக
ழேறும் விஜயன் பணயங் காண்! -பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய்-என்று
பார்த்திவன் விம்மி உரைத்திட்டான். 233
மாயத்தை யேஉரு வாக்கிய-அந்த
மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான்; -கையில்
தாய முரடடி விழுத்தினான்; -அவன்
சாற்றிய தேவந்து வீழ்ந்ததால், -வெறும்
ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார்-மன்னர்
இப்புவி மீதுள ராமன்றோ? 234
48. வீமனை இழத்தல்
கொக்கரித் தார்த்து முழுங்கியே-களி
கூடிச் சகுனியுஞ் சொல்லுவான், -எட்டுத்
திக்கனைத்தும் வென்ற பார்த்தனை-வென்று
தீர்த்தனம் வீமனைக் கூறென்றான்.தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன், -உளஞ்
சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில்-எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன், -அறத்
தண்ணல் இதனை உரைக்கின்றான்; 235
ஐவர் தமக்கொர் தலைவனை-எங்கள்
ஆட்சிக்கு வேர்வலி அஃதினை, -ஒரு
தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும்-நின்று
சீறி அடிக்குந் திறலனை-நெடுங்
கைவளர் யானை பலவற்றின் வலி
காட்டும் பெரும்புகழ் வீமனை-உங்கள்
பொய்வளர் சூதினில் வைத்திட்டேன்-வென்று
போஎன் றுரைத்தனன் பொங்கியே. 236
போரினில் யானை விழக்கண்ட பல
பூதங்கள் நாய்நரி காகங்கள்-புலை
ஓரி கழுகென் றிவையெலாம்-தம
துள்ளங் களிகொண்டு விம்மல்போல், -மிகச்
சீரிய வீமனைச் சூதினில் அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும்-நின்று
மார்பிலுந் தோளிலுங் கொட்டினார்-களி
மண்டிக் குதித்தெழுந் தாடுவார். 237
49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்
மன்னவர், தம்மை மறந்துபோய், -வெறி
வாய்ந்த திருடரை யொத்தனர், -அங்குச்
சின்னச் சனுனி சிரிப்புடன்-இன்னும்
செப்புக பந்தயம் வே றென்றான்-இவன்
தன்னை மறந்தவ னாதலால்-தன்னைத்
தான்பண யமென வைத்தனன், -பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ? -அந்த
மோசக் சகுனி கெவிலத்தனன். 238
50. துரியோதனன் சொல்வது
பொங்கி யெழுந்து சுயோதனன்-அங்கு
பூதல மன்னர்க்குச் சொல்லுவான்; -ஒளி
மங்கி யழிந்தனர் பாண்டவர்; -புவி
மண்டலம் நம்ம தினிக்கண்டீர், -இவ்
சங்கை யிலாத நிதியெல்லாம்-நம்மைச்
சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள்! -இதை
எங்கும் பறையறை வாயடா-தம்பி!
என்றது கேட்டுச் சகுனி தான். 239
51. சகுனி சொல்வது
புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல்-நின்னைப்
போன் றவர் செய்யத் தகுவதோ? -இரு
கண்ணி லினியவ ராமென்ற-இந்தக்
காளையர் தம்மைஇங் குந்தைதான்-நெஞ்சில்
எண்ணி யிருப்ப தறிகுவாய்; -இவர்
யார்? நின்றன்சோதர ரல்லரோ? களி
நண்ணித் தொடங்கிய சூதன்றோ? -இவர்
நாணுறச் செய்வது நேர்மையோ? 240
இன்னும் பணய்ம்வைத் தாடுவோம்? -வெற்றி
இன்னும் இவர் பெற லாகுங்காண்,
பொன்னுங் குடிகளுந் தேசமும்-பெற்றுப்
பொறபொடு போதற் கிடமுண்டாம்; -ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள்-இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால், -(அவள்)
துன்னும் அதிட்ட முடையவள் இவர்
தோற்ற தனைத்தையும் மீட்டலாம் 241
என்றந்த மாமன் உரைப்பவே வளர்
இன்பம் மனத்தி லுடையனாய்-மிக
நன்றுநன்றென்று சுயோதனன்-சிறு
நாயொன்று தேன்கல சத்தினை -எண்ணித்
துன்று முவகையில் வெற்றுநா-வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல்போல்-அவன்
ஒன்றுரை யாம லிருந்திட்டான்-அழி
வுற்ற துலகத் தறமெலாம். 242
அடிமைச் சருக்கம் முற்றும்.
திரௌபதியை சபைக்கு அழைத்த சருக்கம்
52. திரௌபதியை இழத்தல்
பாவியர் சபைதனி லே, -புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
ஆவியில் இனியவ ளை, -உயரித்து
அணிசுமந் துலவிடு செய்யமு தை,
ஓவியம் நிகர்த்தவ ளை, -அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை, நிலத்திரு வை-எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத் தை, 243
படிமிசை இசையுற வே-நடை
பயின் றிடுந் தெய்விக மலர்க்கொடி யைக்
கடிகமழ் மின்னுரு வை, -ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழ கை-இன்ப
வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத் தில்-அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான். 244
வேறு
வேள்விப் பொருளினை யே-புலை நாயின் முன்
மென்றிட வைப்பவர் போல்,
நீள்விட்டப் பொன் மாளி கை-கட்டிப் பேயினை
நேர்ந்து குடியேற்றல் போல்,
ஆள்விற்றுப் பொன்வாங்கி யே-செய்த பூண யோர்
ஆந்தைக்குப் பூட்டுத்ல் போல்,
கேள்விக் கொருவரில் லை-உயிர்த் தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கி னான். 245
செருப்புக்குத் தோல்வேண்டி யே-இங்குக் கொல்வரோ
செல்வக் குழந்தையி னை?
விருப்புற்ற சூதினுக் கே-ஒத்த பந்தயம்
மெய்த் தவப் பாஞ்சாலியோ?
ஒருப்பட்டுப் போன வுடன் -கெட்ட மாமனும்
உன்னியத் தாயங்கொண் டே
இருப்பகடை போடென்றான்-பொம்மைக் காய்களும்
இருப்பகடை போட்டவே. 246
மூன்றாவது அடிமைச் சருக்கம் |
||||||||
by C.Malarvizhi on 22 Feb 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|