ஒலியானது இசையாக மாற்றம் பெறும்போது இசை ஒரு கலையாகிறது. அவ்வாறு மாற்றம் செய்தவன் இசைக்கலைஞனாகிறான். இசை ஒரு கலை. அது எல்லாக்கலைகளையும் போலவே கேட்பவர்களுக்கு, புத்துணர்ச்சியையும், மனஎழுச்சியையும், சோம்பேறித்தனத்தையும், மனச்சோர்வையும் உண்டாக்க வல்லது.
தனது மனப்போக்கின் வழிப்படி ஒரு இசைக்கலைஞன் தனது இசைக்கருவியை வாசிக்கிறான். மனம் போன போக்கில் வாசிக்கும் கலைஞனது வாசிப்பு நீளும் போது சில குறிப்பிட்ட இடங்களில் வாசிக்கப்படும் இசை இனிமையான ஒன்றாகத் தோன்றுகிறது. அந்தக் குறிப்பிட்ட இடங்களில் வாசிக்கப்பட்டது போன்றே மீண்டும் மீண்டும் வாசிக்கையில் அந்த இனிமையும் மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இனிமையான இசைக்கு இப்படி வாசிக்கலாம் என முடிவு செய்யப்படுகிறது. ராகங்கள் உருவாக்கப்படுகின்றன. சொற்கள் பெருகுவதானது, அவைகளை ஒரு வித நயத்தோடு வாசிக்கத் தூண்டி விடுகிறது. அந்த நயமானது இசைபோன்று இனிமையானதாக இருப்பதால் அந்த ரசனையானது இனிமையாக சொற்களை வாசிப்பதற்கான அதாவது கவிதைகளுக்கான இலக்கணத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அதுபோலத்தான் இசைக்காகவும் இலக்கணம் உருவாக்கப்படுகின்றன.
இசைக்கு இலக்கணம் அவசியமா? பெரிய கேள்விதான், ஆனால் பதில் மிகவும் சிறியது. அது அவசியம் என்பதுதான். இலக்கணம் என்பது குறிப்பிட்ட விளைவை உண்டாக்குவதற்காக ஒழுங்குபடுத்துவதுதான். வாகனங்களைப் பயன்படுத்துவதின் இலக்கணம் என்ன? அதை முறையாக ஓட்டுவதுதான். இசை என்பதே ஒலியை ஒழுங்குபடுத்துவதால் வருவதுதானே. ஆகவே, இசைக்கான இலக்கணம் என்பது அவசியம்தான். சரி, இசையின் இலக்கணங்களை மீறலாமா? மீறலாம். இசையின் இலக்கணங்களை மீறுவதென்பதும் இசையாகத்தான் இருக்க முடியும். எனவே, இசையின் இலக்கணங்களை மீறலாம். இசைக்கு இலக்கணம் எவ்வளவு அவசியமோ, அதைவிடவும் கூடுதலாக அதை மீறுவதென்பது அவசியமானது. காலந்தோறு மீறுதல்கள் என்பது நடந்துகொண்டுதானிருக்கிறது. அதனால்தான், இசை இன்று விரிந்து வளர்ந்திருக்கிறது.
|