LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1239 - கற்பியல்

Next Kural >

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன?(தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி)
மணக்குடவர் உரை:
யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.
தேவநேயப் பாவாணர் உரை:
முயக்கிடைத் தண்வளி போழ- அங்ஙனம் கைகளைத் தளர்த்த போது எம் இருவர்க்குமிடையே ஒரு சிறுதென்றற் போழ்ந்து நுழைந்ததாக; பேதை பெருமழைக் கண் பசப்பு உற்ற- அத்துணைச் சிற்றிடையீடும் பொறாது, என் இளங் காதலியின் பெரிய குளிர்ந்த கண்கள் பசலையடைந்து விட்டன. அத்தகைய கண்கள் நாடுங் காடும் ஆறும் மலையுமாகிய மாபேரிடையீடுகளையெல்லாம் எங்ஙனம் பொறுத்தனவோ! 'போழ' என்றது இருவருடம்பும் ஒன்றென ஒன்றியிருந்தமை தோன்ற நின்றது.
கலைஞர் உரை:
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.
சாலமன் பாப்பையா உரை:
(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.
Translation
As we embraced a breath of wind found entrance there; The maid's large liquid eyes were dimmed with care.
Explanation
When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.
Transliteration
Muyakkitaith Thanvali Pozhap Pasapputra Pedhai Perumazhaik Kan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >