திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.
தேவநேயப் பாவாணர் உரை:
[வினைமுடித்து மீளுந் தலைமகன் முன்னிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.] முயங்கிய கைகளை ஊக்க- தன்னை யிறுகக்கட்டித் தழுவிய கைகளை இவட்கு நோமென்று கருதி ஒரு சிறிது தளர்த்தேனாக; பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது- அதற்குள், அச்சிறு தளர்ச்சியையும் பொறாது, பசும்பொன் வளையல்களை யணிந்த என் இளங்காதலியின் நெற்றி பசலை பாய்ந்துவிட்டது. அத்தகைய மெல்லியல் நெற்றி இப்பிரிவிற்கு யாதாகுமோ! இனிக் கடுகிச் செல்லவேண்டுமென்பது கருத்து.
கலைஞர் உரை:
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.
Translation
One day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked.
Explanation
When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.