கூதிர் காலம் என்பது கார்காலத்திற்கு பின்பாக வரக்கூடிய குளிர்காலம்.இக்காலத்தில் அதிக குளிரும் சிறிது மழையும் (சாரல்) சிறிது வெயிலும் இருக்கும்.
இங்கே நாம் பார்க்கக்கூடிய பருவ காலங்கள் எல்லாமே தமிழகத்தில் நிலவும் பெரும் பொழுதினை அடிப்படையாகக் கொண்டவை.
உலகின் பிற பகுதிகளில் வாழும் அன்பர்கள் இதற்கு இணையான அவர்கள் வாழும் ஊரில் உள்ள பருவங்களோடு ஒப்புநோக்கி பழக்கவழக்கங்களை பின்பற்றிக்கொள்ள வேண்டும்.ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தங்கள் ஊரினைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்தால் தகுந்த ஆலோசனை வழங்குகின்றேன்.
இந்தக் கூதிர் காலத்தில் பொதுவாக தாகமும் உடல் வறட்சியும் ஏற்படுவதாக சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.உடலில் அழல் ஆற்றல் மிகுந்து காணப்படும்.பகலில் உடல் வெப்பம் கூடியும் இரவில் உடல் குளிர்ச்சி கூடியும் ஒரு மாறுபட்ட நிலையினை உண்டாகும்.
இக்காலத்தில் சுற்றுப்புற சூழல் மிகுந்த தூய்மையுடன் இருப்பதாலும் மாசற்ற நீர் தாராளமாகக் கிடைப்பதாலும் இக்காலங்களில் உடல் வன்மை பொதுவாக உயர்ந்தே இருக்கும். இதற்கு முந்தைய காலத்தில் நாம் பார்த்திருந்த கால ஒழுக்கங்களை முறையாக பின்பற்றியிருந்தால் இந்தக் காலத்தில் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.
இக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் :
1.முன் காலங்களில் பேதி மருத்துவம் மேற்கொண்டிருக்காவிட்டால் இக்காலத் தொடக்கத்தில் மேற்கொள்ள வேண்டும்.
2.பேதி மருத்துவம் முன்பே மேற்கொண்டவர்கள் கசப்பான மூலிகைச் சாறுகளைக் கொண்டு வாந்தி மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். (௦விவரங்களுக்கு பேதி மருத்துவம் என்ற தலைப்பினைப் பார்க்கவும்)
3.இக்காலத்தில் இனிப்பு,கசப்பு,துவர்ப்பு சுவை உடைய பொருட்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.பிற சுவையுடைய பொருட்களை குறைத்தே பயன்படுத்த வேண்டும்.
4.வறட்சியானதும் சிறிது குளிர்ச்சியானதுமான பொருட்களே உணவாக அமைய வேண்டும்.
5.அதிக எண்ணெய் உடைய நெய்ப்பான பொருட்கள் மந்தம் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இவற்றை நீக்குதல் வேண்டும்.
6.தயிர் அதிக உணவு ஆறிய பழைய உணவுகள் குளிர்ந்த உணவுகள் இவற்றை நீக்குதல் வேண்டும்.
7.இலேசாக சீரணிக்கும் படியான உணவுகள் எடுத்துக்கொள்ளல் வேண்டும்.உதாரணமாக கஞ்சி,இட்லி,காய்,கீரை இரசம்,மோர்.இவற்றை குறைந்த இடைவேளையில் எடுத்தக்கொள்ள வேண்டும்
7.பசி மந்தமாகவே இருக்கும்.இந்த பசி மந்தம் வெயில் காலங்களில் உள்ளது போன்றிருக்காது. சற்றுவேறுபட்டிருக்கும். அதனை நீக்குவதற்கு இக்காலங்களில் சுண்டைக்காய்,மிதிபாகல்,கோவைக்காய் வாழைப்பூ,நெல்லிக்காய் போன்ற துவர்ப்பும் கசப்பும் நிறைந்த காய்களை சமைத்தோ வற்றலாக்கியோ பயன்படுத்தலாம்.ஏலக்காய் விதை (ஏலரிசி),கிராம்பு(இலவங்கம்)போன்றவற்றை இரண்டு உணவுகளுக்கு இடைவேளையில் வில் அடக்கிக் கொள்வதால் இக்காலத்தில் வரும் பசி மந்தம் நீங்கும்.
8.துளசி,ஆடாதோடை,வேப்பங்கொழுந்து,வில்வ இலை போன்ற ஏதேனும் ஒன்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிடுவதால் இக்காலத்தில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
9.எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்,மிளகு,சீரகம்,சிறிய வெங்காயம் போட்டுக் காய்ச்சிய எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும்.
10.உடல் ஊட்டத்தினை கூட்டுவதற்காக பச்சைப்பயிறு,திணை,சம்பா அரிசி,துவரை பருப்பு,தேங்காய்ப்பால்,பனைவெல்லம்,பொன்னாங்கண்ணி,முருங்கை இலை,கரிசலாங்கண்ணி,வெந்தயம்,வேப்பம் பூ ,போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
நலப் பயணம் தொடரும்................
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |