LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : நசியம் ( மூக்குத்துளி ) மருத்துவம் – 26

நசியம் ( மூக்குத்துளி ) மருத்துவம்

NASAL DROPS

தமிழர்களின் ஒரு வழக்கமாக இருந்து மறைந்து விட்ட நோய் தடுப்பு மருத்துவமுறைகளில் நசிய மருத்துவம் என்ற மூக்குத்துளி  மருத்துவமும் ஒன்று.

நசிய மருத்துவம் என்றால் என்ன ?

மூலிகைச் சாறுகளையோ, மூலிகை கலந்த எண்ணெய்களையோ, மூலிகைகளின் குடிநீரினையோ ( கசாயம் ), தாய்ப்பால், பசும் பால் மற்றும் சில விலங்குகளின் பாலினையோ, சில சித்த மருந்துகளையோ மூக்கில் துளியாக விட்டு நோய் வராமல் பாதுகாக்கும் முறைக்கு நசிய மருத்துவம் என்று பெயர். சில விதமான நோய் நிலைகளிலும் இது மருத்துவ முறையாக பயன்படுகிறது. ஆறு வாரங்களுக்கு ஒரு முறை மேற்சொன்ன ஏதேனும் ஒரு பொருளை மூக்கில் துளியாக விடல் வேண்டும். இதனால் உயிர் ஆற்றலின் ஒரு கூறாக உள்ள ஐயம் ( கபம், கோைழ, நீர்த்துவமான உயிர் ஆற்றல் ) இயல்பு நிலை அடைவதாக சித்தர்கள் கூறுகின்றார்கள்.

இக்காலகட்டத்தில் மூச்சுப் பாதை மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் பெருகி வருவதை நாம் அறிவோம். இதற்கு மூச்சுப் பாதை மற்றும் சுவாச உறுப்புகளின் நோய் எதிர்ப்பாற்றல் குறைவது ஒரு முக்கியக் காரணமாகும். சுற்றுப்புறச் சூழல் கேடடைவது தட்பவெப்ப நிலை மாறுபாடு போன்ற பல காரணங்களால் பாதிக்கப்படும் முக்கியமான பகுதி மூச்சுப்பாதையாகும். இந்த பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மூச்சுப்பாதையும் நுரையீரலும் போதுமான வன்மையுடன் இருக்க வேண்டும். அதற்கு நசிய மருத்துவம் உதவியாய் இருக்கும். இந்த மருத்துவ முறைகளால் உடலின் உயிர் ஆற்றல் இயல்பு நிலை அடைந்து ஐயம் என்ற உயிர் ஆற்றல் நுட்பமான முறையில் சீரடைந்து பீநிசம் ( Sinusitis ), இரைப்பு இருமல் ( Bronchitis, Bronchial asthma – Bronchospasm ) போன்ற நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

என்ன செய்ய வேண்டும் ?

நசிய மருத்துவத்திற்க்காக அதாவது மூக்குத்துளிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளை ( விளக்கம் – பின்பு கொடுக்கப்பட்டுள்ளது ) பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இம்மருத்துவ முறைக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட நாளில் அதிகாலை  4  மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு குளிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு மூக்கிலும் 2 முதல் 5 துளி வரை விட வேண்டும். மருந்திற்கு மருந்து துளி கணக்கு மாறுபடும். முதலில் ஒரு மூக்கில் மருந்து விட்டு பின்பு உடனையே அடுத்த மூக்கிலும் விடலாம். வசதிக்காக மேல் முதுகுப்பகுதியில் ஒரு தலையணையை வைத்துக் கொண்டு தலையை பின்புறமாக சாய்த்தும் மூக்கு துவாரம் மேல் நோக்கி இருக்கும் படியாக படுத்துக் கொள்ள வேண்டும். மூக்குதுளி விட்ட பின்பு 5 முதல் 20  நிமிடம் வரை இதே நிலையில் இருக்க வேண்டும். இந்த நிலையில் மூக்கில் விட்ட மருந்து தொண்டை வரை வரும். அதனை துப்பி விடலாம். தேவைப்பட்டால் மீண்டும் ஒன்றிரண்டு புதிய மருந்து துளியை மூக்கில் விடலாம்.

சிலருக்கு மூக்கு அடைப்பு ஏற்பட்டிருந்தால் ஆவி பிடித்த பின்பாக இந்த மருத்துவ முறையை மேற்கொள்ள வேண்டும். ஆவி பிடித்தும் மூக்கு பாதை திறக்காவிடில் விரலிமஞ்சள் கிழங்கை அடுப்பில் சுட்டு  அதிலிருந்து வரும் புகையினை மூக்கினுள் செலுத்த வேண்டும் ( உறிஞ்ச வேண்டும் ). அதன் பின்பாக மூக்குப்பாதை திறந்தவுடன் மூக்குத்துளியை விட வேண்டும்.

இதிலிருந்து ஏறத்தாழ 40  நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். குளித்த பின்பு காலையில் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு, கீரை, காய், பழச்சாறு போன்ற பொருட்கள் காலை உணவிலிருந்தால் நன்மை உண்டாகும்.

எண்ணெய் குளியல் செய்யும் போது மூலிகை எண்ணெய்யை அல்லது வெறும் நல்லெண்ணெய்யை மூக்கில் துளியாக பயன்படுத்துவதை நாம் அறிந்திருப்போம் ( பார்க்க எண்ணெய் குளியல் )

அது அல்லாமல் தனியாக நசிய மருத்துவ முறைக்காகவே  6 வாரத்திற்கு ஒரு நாள் ஒதுக்கி இம்மருத்துவ முறையை மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு மூக்கிலிருந்து நீர்வடிதல், மூக்கினுள் எரிச்சல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை கசப்பு, குமட்டல், வாந்தி, உமிழ்நீர் அதிகமாக உற்பத்தியாதல், இருமல் போன்றவை ஏற்படலாம். அச்சப்படத் தேவையில்லை.

மதியம், இரவு வழக்கம்போல் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம் ?


1. துளசிச் சாறு – அப்படியே சாறு எடுத்து  2 -  5  துளிகள் விடலாம் அல்லது ஒரு பருத்தி துணியில் துளசி இலைகளை பொட்டலம் போல கட்டி நீராவியில் வேகவிட்டு பிழிந்த சாற்றினை பயன்படுத்தலாம்.

2. தும்பை பூச்சாறு – 1 முதல் 2 துளி விடலாம். ( இது மூக்கடைப்பு மற்றும் மயக்க நிலைகளில் பயனாகக் கூடிய ஒரு மருத்துவ முறையாகும் )


3. இது போன்றே புதினா, கொத்துமல்லி, கரிசாலை, பொன்னாம்கண்ணி, தூதுவளை, வல்லாரை, பிரமி, கோவை போன்ற மூலிகைகளின் இலைச்சாறுகளை பயன்படுத்தலாம்.

4. மிளகு அல்லது சுக்குடன் விளக்கெண்ணை / நல்லெண்ணெய் கலந்து காய்ச்சிய மூலிகை எண்ணெய்யையும் மூக்குத் துளியாக பயன்படுத்தலாம்.


5. சுக்கு தைலம், அரக்கு தைலம், சந்தனாதி தைலம், கத்தூரி தைலம் ( கஸ்தூரி தைலம் ), காயத்திருமேனி தைலம் போன்ற பல மூலிகை எண்ணெய்கள் சித்த மருத்துவ பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை மூக்குத்துளியாக பயன்படுத்தும் போது நோய் வராமல் உடலும் மனமும் பாதுகாக்கப்படுகிறது. சித்த மருத்துவ அறிவுரைப்படி ஏதேனும் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.


என்ன பயன் ?


மூக்குத்துளை மூச்ச்க்காற்றின் அளவினையும் அதன் ஓட்டத்தினையும் கட்டுப்படுத்தி உடலில் உயிராற்றல் ஓட்டத்திற்கு அடிப்படியாக உள்ளது. உடலையும் மனதையும் இயக்கக் கூடிய நரம்பு மண்டலத்தோடு நெருங்கிய தொடரபுடையதாக மூக்குத்துளை உள்ளது. மூக்குத்துளையின் உள்பகுதியில் உணர்ச்சி மிக்க தானியக்க நரம்பு மண்டலத்தின் நரம்பு இழைகளால் ( Sensitive autonomic nerve fibres )  பிணைக்கப்பட்டுள்ளது. மூக்கின் உள்பகுதி மற்ற சாதாரண இடங்களை காட்டிலும் 20  மடங்கு அதிக நரம்பு இழைகளால் இணைக்கப் பட்டுள்ளது. இந்த நரம்பு தொகுதிகள் உணர்வு மண்டலத்துடனும் ( Limbic system ) ஹைபோதலாமஸ் ( Hypothalamus ) எனும் மூளை பாகத்துடன் தொடர்புடையன. மூக்கினுள் அமைந்துள்ள சளிச்சவ்வின்  ( Mucous membrane ) கீழ் ஒரு திசு தொகுப்பு உள்ளது ( Spongy tissue Turbinate ). மனதின் உணர்வோடு இந்த பகுதி நெருங்கிய தொடர்புடையது. இந்த திசுவின் சீரான செயல்பாடு மூச்சுப் பாதையினை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. இயல்பான உணர்வோடு மனம் சீராக இயங்குவதற்கு மூக்கின் உள்ளமைப்பு முக்கிய பங்காற்றுகிறது.

சூழ்நிலைக்கு தகுந்தவாறு காற்றினை சூடேற்றியோ அல்லது குளிர்வித்தோ நுரையீரலுக்கு அனுப்புவதற்கு இந்த பகுதியின் சீரான இயக்கம் உதவுகின்றது. இந்த பகுதிகள் குறிப்பிட்ட கால் இடைவேளையில் தூய்மைப்படுத்தப் படுவதும் வன்மைபடுத்தப் படுவதும் இன்றியமையாததாகும். இதற்கு மூக்குத் துளி மருத்துவம் உதவியாய் இருக்கின்றது. இதனை நுட்பமாக உணர்ந்த சித்தர்களின் மூக்குத்துளி மருத்துவத்தை ஆறு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொண்டு உடல், உயிர், மன இயக்கத்தினை சீர் செய்து மேம்படுத்துவோம்.

நலப்பயணம் தொடர்வோம்...........................

by Swathi   on 10 Mar 2015  0 Comments
Tags: Siddha Maruthuvam   Nasal Drops   Siddha Maruthuvam Articles   சித்த மருத்துவம்   மூக்குத்துளி மருத்துவம்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.