இராயப்பேட்டையில் கக்கன் குடியேறிய போது , தம் மக்களுள் மூவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர் . குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர் உறுப்பினர் இருந்தனர் . குடும்பத்தின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வது என்பது பெரிய கேள்விக் குறியானது . எனினும் , அந்தக் கேள்விக் குறியை ஆச்சரியக் குறியாக மாற்றினார் மாரியப்ப நாடார் . இவர் உற்றுழி உதவும் நண்பராக வந்த நின்றார் .
இந்தியா விடுதலைக்குப் போராடிய காலத்தில் வறுமையிலும் இடைவிடாமல் போராடத் தேவையான உணர்வு ஊட்டும் கவிதைகளைப் பாடிய பாரதியார் , கண்ணனைத் தம் தோழனாகப் பாவித்துப் பாடும்போது ,
“கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லுள்
கேலி பொறுத்திடுவான் - எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடு வான் - என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான் சொல்லும்முன் உணர்வான் - அன்பர்
கூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுளரோ ?”
என்று பாடுவார் . அத்தகைய ‘கண்ணன்’ போல் கக்கன் குடும்பத்தினர்க்கு அந்த மாரியப்பன் நாடார் , ‘ நன்றி கெட்டவர்கள்’ கூட்டத்திடையே நல்ல மனித நேயராகக் கிடைத்தார் . மாரியப்பன் நாடார் இராயப்பேட்டையில் ‘அஜந்தா ஸ்டோர்ஸ்’ என்ற கடையை நடத்தி வந்தார் . இவர் கக்கன் பேரில் வைத்திருந்த மரியாதை அளவிடற்கு அரியது .
கக்கன் வீட்டிற்கு வேண்டிய அத்தனை பொருள்களையும் மாரியப்பன் நாடார் மனமுவந்து வழங்கி வந்தார் . எப்போதாவது கக்கன் குடும்பத்தினர் கொடுக்கும் சிறு தொகையை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வார் . கடைக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை குறித்து வாய் திறந்ததே இல்லை . அதுமட்டும் இல்லை , கக்கன் வீட்டிலிருந்து யார் வந்து , எதைக் கேட்டாலும் தடை இல்லாமல் கொடுத்தனுப்ப வேண்டும் என்று கடைச் சிப்பந்திகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் . நீண்ட நாள் நிலுவைத் தொகையைக் கொடுக்க முடியாத நிலை வந்தபோதும் மாரியப்பன் நாடார் கேட்காமல் தொடர்ந்து தேவையான பொருள்களைக் கொடுத்து வந்ததைக் கக்கன் குடும்பத்தவர் எப்போதும் நன்றியோடு நினைவு கூர்கின்றனர் . பிற்காலத்தில் நிலுவைத் தொகை முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கொடுக்கப் பட்டது என்றாலும் , மாரியப்பன் நாடார் தம் குடும்பத்திற்குச் செய்த உதவியை மிகப் பெரியதாகப் பாராட்டிக் கக்கன் பலரிடத்தில் பேசியது உண்டு .
டாக்டர் நடராசன்
மாரியப்பன் நாடார்போல் இன்னும் சிலரும் கக்கனுக்கு உதவிகள் செய்தது உண்டு . அத்தகையவர்களுள் குறிப்பிடத் தக்கவர் டாக்டர் நடராசன் ஆவார் . மனிதன் ஒருவன் செல்வத்தோடும் சீரோடும் பதவிகளோடும் வாழும்போது அவனுடன் சேர்ந்து நின்று புகழ்பாடி வாழ்த்துவதும் , நிலை தவறித் தாழ்ந்தபோதோ , கீழிறியங்கியபோதோ கண்டுகொள்ளாமல் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதும் இன்றைய உலகில் வாடிக்கையாகிவிட்டது . இதற்குக் கக்கன் மட்டும் விதிவிலக்காகி விடுவாரா ? பதவி போனபின் தேடிவந்து பார்ப்பார் இல்லாத நிலையில் , கக்கன் இராயப்பேட்டை பகுதியில் குடியிருந்தபோது தவறி விழுந்துவிட்டார் . இச்செய்தியைக் கேட்டு அவசர சிகிச்சை தருவதற்காக வந்தவர்தான் டாக்டர் நடராஜன் . டாக்டர் நடராஜன் சென்னைப் பொது மருத்துவமனையின் , முடநீக்குத் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் . இவர் தாம் வகித்த பதவியைப் போலவே பண்பிலும் பழக்க வழக்கங்களிலும் உயர்ந்தவராகத் திகழந்தார் .
இந்தச் சமயத்தில்தான் கக்கனுக்கு இவர் அறிமுகமானார் . அவசர சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் நடராஜன் , கக்கனின் பண்பு நலன்களால் கவரப்பட்டுத் தொடர்ந்து நட்புணர்வோடு பழகினார் . ‘ அழைத்தவர் குரலுக்கு வருவேன்’ என்று கண்ணன் கூறினான் அல்லவா , அதுபோல அழைத்தபோதெல்லாம் டாக்டர் நடராஜன் ஓடோடி வந்து நின்று பல உதவிகளைச் செய்தார் . தாம் வரமுடியாத நேரத்தில் தம் உதவியாளர்கள் யாரையாவது விரைவாக அனுப்பிக் கக்கனுக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்தார் . மனம் சலிப்படையாமல் டாக்டர் நடராஜன் தொடர்ந்து வந்து சிகிச்சை அளித்ததைக் கக்கன் மட்டுமன்றி அவர் குடும்பத்தார் அனைவரும் மறவாமல் பாராட்டிப் பேசி வந்ததை யாரும் மறக்க முடியாது . அத்துடன் டாக்டர் நடராஜன் செய்த சிகிச்சைக்கோ , கொடுத்த மருந்திற்கோ எதையும் பெற்றதில்லை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது
|