இந்திய அரசியலில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதாகத் தெரிகிறது . பதவிக்கு வருமுன் அடக்கமாக இருப்பதும் , பதவியைப் பெற்றதும் தம்மை எதிர்த்த அல்லது இன்னலுக்கு உட்படுத்தியவரைப் பழிக்குப்பழி வாங்க நினைப்பதும் அவர்கள் வாடிக்கையாகும் . ஆனால் , அவ்வாறான சூழலில் கக்கன் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது .
கிட்டத்தட்ட அவருக்கு விவரம் தெரிந்த நாள் முதல் வாழ்நாள் முழுவதும் அரசியல் நடத்தியிருக்கிறார் . இதுவரை எதிர்த்தவர்களும் இன்னல் விளைவித்தவர்களும் இருந்திருக்கவே வேண்டும் . அப்படியானால் அவர்களைக் கக்கன் எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் ? என்று எண்ணுவது சரியான ஆய்வாக அமையும் . அந்த நோக்கில் ஒன்றை இங்குக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் .
1942 ஆம் ஆண்டு வெள்ளையர்களால் சிறை செய்யப்பட்டு , மதுரை மேலூர்க் காவல் நிலையத்தில் கக்கன் கசையடி வாங்கினார் என்பதை முன்பே பார்த்தோம் . அந்தக் கசையடி நிகழ்ச்சியில் நேரடிப் பங்கு கொண்ட காவல்துறைக் காவலராகப் பணியாற்றியவர் திரு . நித்தியானந்தம் . 1957 ஆம் ஆண்டு கக்கன் அமைச்சர் பொறுப்பேற்பதற்கு முன் அந்தக் காவலர் , பதவி உயர்வு பெற்று உதவி ஆய்வாளர் பதவியில் இருந்தார் .
அமைச்சரான கக்கனைக் கண்டு வாழ்த்துச் சொல்ல வந்த பொதுமக்களுள் திரு . நித்தியானந்தமும் ஒருவர் . எல்லோரும் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு தனியே அமைச்சர் கக்கனைச் சந்தித்தார் . ‘ என்னை மன்னித்து விடுங்க’ என்று கண்ணீர் மல்க காலில் விழ முயன்றார் . அவரைத் தடுத்த நிறுத்தி ‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் ? இது என்ன நாகரீகம் ?’ என்று கேட்டார் . ‘ உங்களுக்குக் கசையடி கொடுத்த காவலருள் நானும் ஒருவன் , என்னைத் தண்டித்து விடாதீர்கள்’ என்று கெஞ்சினார் .
‘நீங்கள் உங்கள் கடமையைச் செய்தீர்கள் , அதில் தவறு ஒன்றுமில்லை , உங்களைப் போல் கடமை உணர்வுமிக்கவர்கள் தாம் இந்த நாட்டிற்குத் தேவை’ என்று தட்டிக் கொடுத்துச் சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார் .
பிற்காலத்தில் நித்யானந்தத்தின் மகனுக்குக் காவல்துறையில் பணி கிடைக்கக் கக்கனே ஏற்பாடு செய்ததாக நித்தியானந்தமே பலரிடம் கூறியிருக்கிறார் .
இங்கு , இதுபோன்ற இன்னொரு அரசியல் தலைவரின் செயலை ஒப்பிடுதல் பொருத்தமாக இருக்கும் . விலைவாசிப் போராட்டத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட அறிஞர் அண்ணாவை அழைத்துச் செல்லும் காவலர் ஒருவர் ‘கைதிக்குத் தோளிலென்ன துண்டு எடுடா’ என்றெல்லாம் பேசிய அதே காவலர் , ஒரு சில மாதங்களுக்குள் அண்ணா முதலமைச்சரான போது அணிவகுப்பு மரியாதையில் தன்னைக் கண்டு நடுங்கியதைப் பார்த்து விட்டு அவரைத் தனியே அழைத்த அண்ணா , ‘ உங்கள் கடமையைச் செய்ததைப் பாராட்டுகிறேன்’ என்றாராம் . இப்போது பாருங்கள் , பண்பாளர்கள் எங்கும் , எப்போதும் ஒரே மாதிரிதான் போலும் .
பண்புள்ளம் கொண்ட கக்கன் , தமக்கு இன்னா செய்தாரை மன்னித்து நன்னயம் செய்து விடுவதே மிகப் பெரிய பண்பாடு என்ற வள்ளுவரின் வாக்கினை மனத்தில் ஏந்தி நடந்தார் .
|