LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

நஞ்சுண்டு வீழ்ந்தாள்

தென்பாங்கு -- கண்ணிகள்

வாழை இலைதனில் சோற்றைச் - செங்கான்
    வட்டித்துக் கூப்பிட்ட போது
    சூழ நடந்தசுப் பம்மா - தன்
    துணைவன் நினைப்போடு வந்தாள்!
    ஆழும் அலைகட லுக்குள் - சூழல்
    ஆயிரம் வாய்த்திடக் கூடும்;
    ஏழைத் துணைவனை எண்ணி - நையும்
    ஏந்திழை எப்படிக் காண்பாள்?

    சோற்றினை உண்டனள் நங்கை - நீர்
    தூக்கிப் பருகிய பின்னர்
    காற்றினில் ஆடும் கிளைபோல் - அவள்
    கட்டுடல் ஆடிற்று! நெஞ்சம்
    மாற்றம் அடைந்தது! கண்ணில் - ஒளி
    மாறி மயங்கி விழுந்தாள்.
    சோற்றில் 'மயக்க மருந்தா?' - என்று
    சொல்லி விழுந்தனள் மண்ணில்!

    தன்னிலை தன்னைவிட் டோட - அதைத்
    தான்தொடர்ந் தேபற்றி வந்து
    மின்னல் அசைவது போலத் - தன்
    மேனி தள்ளாட எழுந்தாள்.
    சின்னதோர் பாயினை நோக்கிச் - சென்று
    திம்மனை எண்ணி விழுந்தாள்.
    பொன்னுடல் வாடிற்று! நெஞ்சு - துயில்
    புக்கு மறைந்திடு முன்னே

    மெல்லிடை யில்வைத்த கத்தி - தனை
    மென்கையி னால்தொட்டுப் பார்த்தாள்.
    சொல்லினில் தீயைக் கலந்து - சில
    சொற்களைச் சொல்லினள் மெல்ல:
    'கல்லிடை நார்உரிக் கின்றான்! - அனற்
    காற்றினில் நீர்வேண்டு கின்றான்.
    வல்லியைத் தொட்டிடு வானேல் - அவன்
    வாழ்வினை மீட்பவர் இல்லை!'

    இவ்வுரை சொன்ன மறத்தி - மயக்
    கேறினள்; மெய்ம்மறந் திட்டாள்!
    செவ்விதழ் சோர்ந்தது! கண்கள் - ஒளி
    தீர்ந்தன! வேர்வையின் நீரில்
    அவ்வுடல் மூழ்கிற்று! மேகம் - திசை
    ஆர்ந்தது போற்கருங் கூந்தல்
    எவ்விடத் தும்பரந் தோடி - நிறைந்
    திட்டது கட்டுக் குலைந்தே!

    செங்கான் உடல்பதைத் திட்டான் - என்ன
    செய்வதென் றேஅறி யாமல்
    அங்கும்இங் கும்பறந் தோடி - வீட்டின்
    அக்கம்பக் கம்சொல்லப் போனான்.
    சிங்கனைக் கண்டனன்! 'ஏடா - செங்கான்
    செல்'என்று கூறினன் சிங்கன்.
    செங்கான் பயந்து நடந்தான் - அந்தச்
    சின்னக் குடிசையின் பின்னே.

    சிங்கன்அவ் வீட்டில் நுழைந்தான் - உற்ற
    சேதிகள் யாவும் தெரிந்தான்.
    அங்குச்சுப் பம்மாவின் அண்டை - அவன்
    அண்டினன்! மற்றவர் இல்லை.
    பொங்கிற்று வானில் முழக்கம்! - மின்னல்
    பொல்லாங்கு காட்டிற்று! நல்ல
    மங்கைக் கிரங்கி இருட்டும் - அழும்
    வண்ணம் பொழிந்தது மாரி!

    காட்டை முறித்திடும் காற்றும் - அவன்
    கையை முறிப்பது போலே
    தோட்டத்து வாசலி னோடு - சென்று
    தூள்பட வைத்தது வீட்டை!
    கூட்ட மலர்ச்சிறு கொம்பை - வையம்
    கும்பிடத் தக்கஓர் தாயைத்
    தீட்டுப் படாத நெருப்பை - விரல்
    தீண்டக் கடித்திடும் பாம்பை

    ஒட்டுற வில்லா வடக்கன் - உல
    கொத்தது காணாத தீயன்
    எட்டுத் திசைகளில் எல்லாம் - பின்னர்
    'ஏஏ' எனச்சொல்லி ஏசக்
    கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் - அந்தக்
    கோதை கிடந்திட்ட போது
    தொட்டனன்! தொட்டனன்! மீளாப் - பழி
    சூழ்ந்தனன்! சூழ்ந்தனன்! சிங்கன்!

    பொழுது விடிந்திட வில்லை! - இன்னும்
    பொற்கோழி கூவிட வில்லை!
    எழுந்து வௌியினிற் சென்றான் - மாதர்
    இருவர் இருந்திடும் வீட்டில்
    நுழைந்தனன் அத்தீய சிங்கன் - இதை
    நோக்கி யிருந்தஅச் செங்கான்
    அழுத கண்ணீரில் நனைந்தான் - சுப்
    பம்மாவைக் கண்டிட நின்றான்.

    போயிற்று மங்கை மயக்கம்! - இன்னும்
    பொழுதோ வெளுத்திட வில்லை.
    போயிற்று மானம்! உணர்ந்தாள் - உடல்
    போயிற்று! நல்லுயிர் தானும்
    போயிற்றுப் போவதன் முன்னே - சென்று
    போக்கிடு வேன்அவ னாவி!
    வாயிலில் நின்ற செங்கானைச் - 'சிங்கன்
    வந்ததுண் டோ?'என்று கேட்டாள்.

    'உண்டதும் நீவிர் மயங்கிப் - பாயில்
    உருண்டதும் கண்டேன் துடித்தேன்.
    கண்டதும் இப்பாழும் கண்தான் - இக்
    கையில் வலியில்லை தாயே.
    அண்டையில் நானின் றிருந்தேன் - பின்னர்
    அச்சிங்கன் உள்ளே நுழைந்தான்.
    அண்டையில் நில்லாது போடா - என்ற
    அவன்சொல்லை மீறா திருந்தேன்.

    இருட்டோடு வௌிவந்த சிங்கன் - அவன்
    இங்கிருந் தேபுறப் பட்டான்.
    புரட்டனோ டேகினேன் நானும் - கால்
    பொத்தென்ற சத்தமில் லாமல்!
    திருட்டு நடைகொண்ட குப்பு - வீடு
    சென்றனன் நானிங்கு வந்தேன்.
    கருத்துக் கலங்கினேன் தாயே! - என்
    கடமையை நான்செய்ய வில்லை.

    சேரியெல் லாமிதைச் சொன்னேன். - அவர்
    சீறிக் குதித்தனர் தாயே!
    சேரியின் மக்களைப் பாரீர்! - இதோ
    தீயெனச் சீறிநிற் கின்றார்.
    ஊரும் கிளம்பிடும் தாயே! - மொழி
    ஒன்றுசொல் வீர்இந்த நேரம்
    வாரிக் குவிப்பார்கள் தாயே - அந்த
    வடக்கரை' என்றனன் செங்கான்.

    ஓடினள் சிங்கனை நோக்கி - உடன்
    ஓடினர் சேரியின் மக்கள்!
    ஓடினன் செங்கானும் அங்கே - உம்
    உம்என்று தட்டினள் கதவை.
    நாடித் திறந்தனன் சிங்கன் - கதவின்
    நடுநின்ற அவன்மார்பு நடுவைச்
    சாடிப் புகுந்ததே கத்தி! - குத்திச்
    சாய்த்தனள் பெண்இந்நி லத்தில்!

    காம்பில் வளைந்திட்ட கொடுவாள் - செங்கான்
    கையோடி ருந்திட்ட தாலே
    'பாம்புகாள் ஒழியுங்கள்!' என்றான் - இரு
    பழிமாத ரும்தீர்ந்து போனார்.
    தேம்பாத அழுகையும், நீரின் - துளி
    தெரியாத கண்களும் கொண்டாள்
    வேம்பாக எண்ணினாள் வாழ்வை - கோட்டை
    விடியாத முன்னமே சேர்ந்தாள்.

    கோட்டையின் வாசலைக் காப்போர் - பெருங்
    கொட்டாவி விட்டுக் கிடந்தார்.
    பாட்டையைப் பார்க்க்கவே யில்லை - உயிர்ப்
    பாவையும் காவல் கடந்தாள்.
    கோட்டைப் புறத்தினில் எங்கும் - தூக்கக்
    கோலமல் லால்விழிப் பில்லை.
    பூட்டும் படைவீடு கட்குள் - நெடும்
    புன்னை மரத்திற்கு நேரில்

    தன்கணவன் சேர்படை வீடும் - முற்றும்
    சாத்திக் கிடந்ததைக் கண்டாள்.
    'என்னுயிர்ப் பொருளே திறப்பீர்! - கதவை
    இன்னுமோ தூக்கம்என் அத்தான்?
    ஒன்று மறியேனைச் சிங்கன் - தொடும்
    உள்ளம் படைத்தனன் கேளீர்!
    என்னை மயக்கத்தில் ஆழ்த்திக் - கற்பை
    ஈடழித் தான்வெறும் பேடி!

    செந்தமிழ்ச் சேய்தொட்ட மேனி - தன்னைத்
    தீண்டிட்ட தீயனைக் கொன்றேன்.
    அந்தோ உமைக்காண வேண்டும் - என்றன்
    ஆவிதான் போய்ச்சேரு முன்னே!
    எந்த நிலைதனில் உள்ளீர்? - உம்மை
    என்னென்ன செய்தனன்? காணேன்!
    அந்தோ எனக்கூவி மங்கை - அவள்
    அங்குமிங் கும்பறக் கின்றாள்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.