குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா அளிப்பதை அமெரிக்கா அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், அமெரிக்க அரசு அதிகாரிகள், எம்.பி.க்களை சந்தித்து நரேந்திர மோடிக்கு விதிக்கப்பட்டுள்ள விசா தடையை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது. இதனை அடுத்து மாநிலங்களவையின் 25 உறுப்பினர்கள் சார்பிலும், மக்களவையின் 40 உறுப்பினர்கள் சார்பிலும் தனித்தனியே இரண்டு கடிதங்கள் அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதில், ""நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதில் மாற்றம் எதுவும் கொண்டு வரக்கூடாது. குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் விசா வழங்கினால், மோடியின் மனித உரிமை மீறலை சட்டரீதியாக அங்கீகரித்தது போலாகிவிடும். இது இந்திய-அமெரிக்க உறவுகளையும் பாதிக்கும். அமெரிக்கா மனித உரிமை மற்றும் நீதிக்கு பதிலாக பொருளாதார உறவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது எனக் கருத வேண்டியிருக்கும்'' என்று இந்திய எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
|