ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 2 வது முறை சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார். இது, உலகின் மிகப் பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும்.
இதில், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக 32 மாநிலங்களில் 14,000 அரசு மற்றும் தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தமாகி உள்ளது.
இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் தேசிய சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி இந்து பூஷன் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘‘அரசியல் சாசனப்படி ஆதார் திட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தில் முதல்முறையாக சிகிச்சை பெறுபவர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையைக் காட்டி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், 2வது முறை சிகிச்சை பெறும்போது ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டை கிடைக்கவில்லை என்றால் ஆதார் பதிவு செய்து 12 இலக்க அடையாள எண் பெற்றதற்கான ஆவணத்தையாவது காட்ட வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
|