நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)
மணக்குடவர் உரை:
நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள்,
இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே; நயன் இலன் என்பது சொல்லும் - அவன் நேர்மை (நீதி) யில்லாதவன் என்பதை அறிவிக்கும்.
அறிவித்தலும் பயனளவிற் சொல்லுதலை ஒக்குமாதலின் 'சொல்லும்' என்றார்.
கலைஞர் உரை:
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே
அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
Translation
Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.
Explanation
That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue".