LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 276 - துறவறவியல்

Next Kural >

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.)
மணக்குடவர் உரை:
நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.
தேவநேயப் பாவாணர் உரை:
நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - உள்ளத்திற் பற்றாது பற்றற்றவர்போல் நடித்துப் பிறரை யேமாற்றி வாழும் பொய்த் துறவியரைப்போல; வன்கணார் இல் - கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை. கன்னியரையும் பிறர் மனைவியரையுங் கற்பழித்தலும், அடைக்கலப் பொருளைக் கவர்தலும், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தலும்,கொள்ளை யடித்தலும் ,தம் விருப்பம் நிறைவேறும் பொருட்டு எத்துணை நல்லவரையுங் கொல்லுதலும் ,ஆகிய தீவினைகளிலெல்லாம் வல்லவரும் ,கடுகளவும் மனச்சான்று இல்லவருமாதலின் கூடாவொழுக்கத்தினர் போற் கொடியர் பிறரில்லையென்றார்.பற்றற்றவர் போல் நடிப்பவரும் நடியாதவருமாகிய இருவகைக்கொடியோருள், நடிப்பவர் மிகக் கொடியவர் என்பது கருத்து.
கலைஞர் உரை:
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.
Translation
In mind renouncing nought, in speech renouncing every tie, Who guileful live,- no men are found than these of 'harder eye'.
Explanation
Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).
Transliteration
Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu Vaazhvaarin Vankanaar Il

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >