வடமொழி மதித்த இசைநூல் லழக்குடன் அடுத்த எண்நான்கு அங்குலி யகத்தினும் நாற்பதிற் றிரட்டி நால்அங் குலியினும் குறுமையும் நெடுமையும் கோடல்பெற் றைதாய் ஆயிரம் தந்திரி நிறைபொது விசித்து (5)
கோடி மூன்றில் குறித்து மணிகுயிற்றி இருநிலம் கிடத்தி மனம்கரம் கதுவ ஆயிரத் தெட்டில் அமைத்தன பிறப்பு பிறவிப் பேதத் துறையது போல ஆரியப் பதம்கொள் நாரதப் பேரியாழ் (10)
நன்னர்கொள் அன்பால் நனிமிகப் புலம்ப முந்நான்கு அங்குலி முழுஉடல் சுற்றும் ஐம்பதிற் றிரட்டி ஆறுடன் கழித்த அங்குலி நெடுமையும் அமைத்து உள்தூர்ந்தே ஒன்பது தந்திரி உறுந்தி நிலைநீக்கி (15)
அறுவாய்க்கு ஆயிரண்டு அணைத்து வரைகட்டி தோள்கால் வதிந்து தொழிப்படத் தோன்றும் தும்புருக் கருவியும் துள்ளிநின் றிசைப்ப எழுஎன உடம்புபெற் றெண்பது அங்குலியின் தந்திரி நூறு தழங்குமதி முகத்த (20)
கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல நிறைமதி வட்டத்து முயல்உரி விசித்து நாப்பண் ஒற்றை நரம்புகடிப் பமைத்து அந்நரம்பு இருபத் தாறுஅங் குலிபெற இடக்கரம் துவக்கி இடக்கீழ் அமைத்து (25)
புறவிரல் மூன்றின் நுனிவிரல் அகத்தும் அறுபத் திரண்டிசை அனைத்துயிர் வணக்கும் மருத்துவப் பெயர்பெறும் வானக்கருவி தூங்கலும் துள்ளலும் துவக்கநின் றிசைப்ப நான்முகன் முதலா மூவரும் போற்ற (30)
முனிவர்அஞ் சலியுடன் முகமன் இயம்ப தேவர்கள் அனைவரும் திசைதிசை இறைஞ்ச இன்பப் பசுங்கொடி இடப்பால் படர வெள்ளி அம் குன்றம் விளங்க விற்றிருந்த முன்னவன் கூடல் முறைவணங் கார்என (35)
அரவப் பசுந்தலை அரும்பவிழ் கணைக்கால் நெய்தற் பாசடை நெடுங்காட்டு ஒளிக்கும் கண்எனக் குறித்த கருங்கயல் கணத்தை வெள்ளுடல் கூர்வாய் செந்தாட் குருகினம் அரவுஎயி றணைத்தமுள் இலைமுடக் கைதைகள் (40)
கான்றலர் கடிமலர் கரந்துறைந் துண்ணும் கருங்கழி கிடந்த கானல்அம் கரைவாய் மெய்படு கடுஞ்சூள் மின்எனத் துறந்தவர் சுவல்உளைக் கவனப் புள்இயல் கலிமான் நோக்கம் மிறைத்த பரிதிகொள் நெடுந்தேர்ப் (45)
பின்னொடும் சென்றஎன் பெரும்பிழை நெஞ்சம் சென்றுழிச் சென்றுழிச் சேறலும் உளவோ அவ்வினைப் பயனுழி அருந்தவம் பெறுமோ? இடைவழி நீங்கிஎன் எதிர்உறுங் கொல்லோ? அன்றியும் நெடுநாள் அமைந்துடன் வருமோ? (50)
யாதென நிலைக்குவன் மாதோ பேதை கொள்ளாது ஒழிமனம் கடுத்தே. (52)
|