உழுத நிலம் அதில் விதைத்த விதை,
முளைத்து பூமியை முட்டி,
தழைத்து வானத்தை பார்த்தது எட்டி.
வளர்ந்த பயிரின் பசுமை காக்க திறந்த பூமி நீரை வார்க்க
வளர்ந்த பயிரின் பசுமை காக்க,
திறந்த பூமி நீரை வார்க்க,
பரந்த பூமி ஈரம் காக்க,
முளைத்து வந்த விதை
தழைத்து விடும் தளிர்....
விதைத்தவனுக்கு கண்கொள்ளா காட்சி,
அவன் மனம் கொள்ளும் மட்டற்ற மகிழ்ச்சி,
பரந்த பூமியோ தாராள மனம் படைத்த தாய்,
பயிரோடு சேர்த்து களையும் வளர்ப்பாள்,
பயிர் காக்க நாம் களைவோம்,
கலந்து வளர்ந்த களையாவையும்.
பயிரின் பசுமை ஈர்த்து,
பறந்து வந்த வண்டெல்லாம்,
தன்னை மறந்துபோய்,
பயிரோடு உயிராக ஒட்டிக்கொள்ளும்.
உயிர்கொல்லி அதனை அளவோடு அள்ளி,
தெளித்து கொள்வோம் பூச்சி தன்னை,
பயிரில் காண்போம் மலர்ச்சி தன்னை.
காலம் கடந்து கருவுற்ற பயிரில்,
வெடித்து வெளியேறுவாள் நெல்மணி,
பச்சை பசுமையோடு,
பல இன்னல் பட்டதோடு,
நிமிர்ந்து நின்று வளர்ந்த பயிரை,
தலைகுனிய வைப்பாள் முற்றிய நெற்கதிர்.
வளமையாக வளர்ந்து வந்த பயிரை,
வாட வைத்து வைக்கோலாக்கி
அறுவடை என்னும் பெயரில்
பயிரெனும் தாயிடம் விடைபெறுவாள் நெல்மணி.
இதேபோலத்தான்,
இணைத்து பார்த்தால் இவ்வுலகில்
யாதொரு உயிரும் நெற்கதிர் போலே,
பசுமையாய் வாழ்ந்த பெற்றோர்கள் பலபேர்
அறுவடைக்கு பின் நெற்பயிர் வைக்கோலாவதைப்போல்,
பிள்ளைகள் பெரியோரானதும்,
காப்பகத்தில் காய்ந்து போகிறார்கள்...
கோவி . கந்தசாமி.
|