LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 336 - துறவறவியல்

Next Kural >

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை - ஒருவன் நேற்றிருந்தான், இன்றில்லை; என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு - என்று சொல்லும் பெருமையை உடையது இவ்வுலகம்! உண்மை உடம்போடிருத்தலையும் இன்மை இறத்தலையும் குறிக்கும், இரட்டுறலால் உண்மை பிறத்தலையுங் குறிக்குமேனும், குழவிப் பருவத்திறப்பு மிகச் சிறுபான்மையாதலானும், குழவியை அஃறினைச் சொல்லாலன்றி ' ஒருவன் ' என்று உயர்திணைச் சொல்லாற் குறிப்பது மரபன்மையானும், வீற்றிருந் தாளன்னை வீதி தனிலிருந்தாள் நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள் என்று பட்டினத்தடிகள் பாடியது போல், "நேற்றிருந்தான், இன்றில்லை" என்று இளைஞரையும் முதியோரையும் பற்றிக் கூறுவதே வழக்கமாதலாலும், அவ்வுரை சிறப்புள்ளதன்றாம். ' ஒருவன்' என்னும் ஆண்பால் தலைமை பற்றிப் பெண்பால் ஒன்றன்பாலையுந் தழுவும். ' பெருமை' என்றது எதிர்ப்பொருளணி (Irony) யாதலால், ' நிலையாமை மிகுதி' என்று கொள்ளத் தேவையில்லை.
கலைஞர் உரை:
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகக் கொண்டதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
Translation
Existing yesterday, today to nothing hurled!- Such greatness owns this transitory world.
Explanation
This world possesses the greatness that one who yesterday was is not today.
Transliteration
Nerunal Ulanoruvan Indrillai Ennum Perumai Utaiththuiv Vulaku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >