சமீபத்தில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகைகளை வாபஸ் பெற்று, சேவை வரியை விதித்தது. இந்த சேவை வரி விதிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு, நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, வருமான வரித்துறை, "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. மேலும் வரிவிதிப்பு தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நெருக்கடியால், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, விவாதித்து முடிவு எடுப்பதற்காக வரும், 7ம் தேதி, பெங்களூருவில் அவசர கூட்டத்திற்கு தென் மாநில தனியார் பள்ளி நிர்வாகிகளின் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த வரிவிதிப்பால், மாணவர்களுக்கான கல்வி கட்டணம், நோட்டு புத்தக கட்டணம், வாகன கட்டணம், கராத்தே கட்டணம், நடனம் கற்றுக்கொடுத்தால், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் என, ஒன்று விடாமல், அனைத்து இனங்களுக்கும், தனித்தனியே 12 சதவீத சேவை வரி வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
|