சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் எம்.ஜி.ஆரின் முழு உருவப் படத்தைத் திறந்து வைத்து, அவரது உரைகள் அடங்கிய நூல்களையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது: சென்னை விமான நிலையம் வரும் 2024-ஆம் ஆண்டில் பயணிகள், சரக்கு போக்குவரத்து அம்சங்களில் முழு நிறைவை அடையும் என்பதால் புதிய விமான நிலையம் அமைப்பது அவசியமாகிறது. சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளைச் சீரமைக்கும் பணிகளைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளைச் சீரமைத்தல் கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
இந்தக் கழகம் செயல்பட ஏதுவாக, முதன்மைச் செயலாளர் நிலையில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உடனடியாக நியமிக்கப்படுவர்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் தங்களது வீடு அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகள் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த "முதலமைச்சரின் வீட்டுக் காய்கறி உற்பத்தித் திட்டம்' என்ற புதிய திட்டம் ஏற்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் அது கிராமப் புறங்களில் தொடங்கப்படும். தென்சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, பள்ளிக்கரணையில் புறநகர் மருத்துவமனை அமைக்கப்படும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆறு தளங்களைக் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படும்.
ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கிலோமீட்டர் நீளமுள்ள மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்படும். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
|