கோவாவில் வசிக்கும் நைஜீரிய மக்களை வெளியேற்றுவதை போலீசார் நிறுத்தவில்லை என்றால், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை அவர்களின் நாட்டிற்கு விரட்டி அடிப்போம் என நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவாவில் சமீபத்தில், போலீசாருக்கும் போதை மருந்து விற்கும் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கொல்லப்பட்டவரின் உடலை எடுத்துக்கொண்டு நைஜீரியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கோவா தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதிததனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டு போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசாரிடமிருந்து லத்திகளையும் பறித்து போலீசாரையும் உள்ளூர் மக்களையும் மிரட்டினர். பிணத்தை நடுரோட்டில் போட்டு, தங்கள் நாட்டு தூதரக அதிகாரி வந்தால் தான் வெளியேறுவோம் என மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 50 நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து கோவா விரைந்த, நைஜீரிய தூதரக அதிகாரி ஜேக்கப் நவாடியா, போராட்டத்தில் ஈடுபட்ட நைஜீரிய மக்களை சந்தித்து பேசினார். பிறகு அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது, கோவாவில் வாடகை வீட்டில் வசிக்கும், நைஜீரிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில், போலீசாரும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். இந்தியாவில், 50 ஆயிரம் நைஜீரியர்கள் தான் வசிக்கின்றனர். ஆனால், நைஜீரியாவில், 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். கோவா போலீசார், நடவடிக்கையை நிறுத்தா விட்டால், நைஜீரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை விரட்டி அடிப்போம் என நைஜீரிய தூதரக அதிகாரி ஜேக்கப் நவாடியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
|