LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1138 - களவியல்

Next Kural >

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று ).
மணக்குடவர் உரை:
நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது. இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
தேவநேயப் பாவாணர் உரை:
(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகிய வழித் தலைமகள் சொல்லியது. ) நிறை அரியர் ( என்னாது ) - இவர் நிறை யென்னும் அடக்கப் பண்புடைமையால் இவரை நாம் மேற்கொள்வது அரிது என்று அஞ்சுதல் செய்யாது ; மன் அளியர் என்னாது - மிகவும் .அளிக்கத்தக்கார் என்று இரங்குதலுஞ் செய்யாது ; காமம் மறை இறந்து மன்று படும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து அம்பலத்திற்கு வருவதாயிற்று . உலகத்துப் பெண்பாலார் காமத்தியல்பு கூறுவாள் போன்று , தன் காமம் பெருகியவாறும் இனி அறத்தொடு நிற்றல் வேண்டு மென்பதும் குறிப்பாற் கூறியவாறு . ' என்னாது ' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவித்துரைக்கப்பட்டது . இது அம் பலின் பிற்பட்ட போதுநிலை , காப்புச்சிறையாவது , தலைமகள்மீது ஐயுற்ற செவிலியும் நற்றாயும் அவளை வீட்டைவிட்டு வெளியேறாவாறு . காவல் செய்தல் .
கலைஞர் உரை:
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.
சாலமன் பாப்பையா உரை:
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
Translation
In virtue hard to move, yet very tender, too, are we; Love deems not so, would rend the veil, and court publicity!.
Explanation
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).
Transliteration
Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam Maraiyirandhu Mandru Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >