அன்னைத் தமிழை வணங்குகின்றேன். திருக்குறள் இல்லாமல் இந்தியாவிற்கு எந்த பெருமையும் இல்லை. தமிழுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் - சென்னையில் தருண் விஜய் பேச்சு !!
சென்னை வந்திருந்த உத்தரகாண்டம் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழுக்காக அவர் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த காரணத்தால் அவருக்கு வைரமுத்து அவர்களின் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் சிறப்பான நன்றி கூறும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திரு ஒளவை நடராசன், முனைவர் அறவாணன் மற்றும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் தருண் விஜய் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். ஒட்டுமொத்த தமிழர்களின் ஒற்றை கோரிக்கை தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதாகும்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழ் மொழி வடநாட்டில் கற்றுத் தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையை உடனே ஏற்ற தருண் விஜய் உத்தரகாண்டத்தில் அவரது தொகுதியில் தமிழ் மையம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று கூறினார். மேலும் அவரது மாநிலத்தில் திருக்குறளை வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டத்தில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தமிழ் மொழி நிச்சயம் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நாம் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் தருண். அதற்காக தான் எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்வதாக கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறள் இல்லாமல் இந்தியாவிற்கு எந்த பெருமையும் இல்லை. திருக்குறளே இந்தியாவின் தேசிய நூல் என்றும் அறிவித்தார்.
|