|
|||||
சபரிமலையில் பெண்களுக்கு தனிவரிசை கிடையாது கேரள அமைச்சர் அறிவிப்பு! |
|||||
சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட மாட்டாது என கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். சபரிமலையில் இளம் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க ஐப்பசி பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் போது, பெண்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் வரும்போது அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். குறிப்பாக தங்குமிடம், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க ேவண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சபரிமலையில் நடை திறக்க இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்குள் போதிய வசதிகளை செய்ய முடியாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார். இந்த நிலையில் சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிப்பதற்கு அவசர கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டம் முடிந்தபின் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சபரிமலையில் பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். நிலைக்கல் வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் அரசு பஸ்களில்தான் செல்ல வேண்டும். இந்த பஸ்களில் 25 சதவீதம் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். நிலைக்கல், வண்டிப்பெரியார், எருமேலி உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கு தேவையான கழிப்பறை, கூடுதல் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். இதுவரை துப்புரவு பணிகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இனி பெண்களும் ஈடுபடுத்தப்படுவர். மேலும் கூடுதல் பெண் போலீசார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்படுவர். தேவைப்பட்டால் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் இருந்து பெண் போலீசார் வரவழைக்கப்படுவர். சபரிமலையில் ஏற்கனவே தரிசனத்துக்கு ஆன்-லைன் முன்பதிவு வசதி உள்ளது. இவ்வாண்டு முதல் திருப்பதி கோயில் மாதிரியில் டிஜிட்டல் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்படும். சபரிமலைக்கு பெண்கள் தனியாக வரமாட்டார்கள். குடும்பத்துடனோ அல்லது குழுக்களாகவோதான் வருவார்கள். எனவே பெண்களுக்கு தனிவரிசை தேவையில்லை. 18ம் படியில் பெண் போலீசை நிறுத்த வேண்டுமா என்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும். பம்பையில் பெண்கள் குளிக்க தனி வசதி செய்யப்படும். நிலைக்கலில் 10 ஆயிரம் பேர் ஓய்வு எடுக்கும் வகையில் வசதி செய்யப்படும். கூட்டம் அதிகமுள்ள நாட்களில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிவரும். எனவே, பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க தயாராக இருக்கும் பெண்கள் மட்டும் சபரிமலைக்கு வந்தால் போதும். இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 02 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|