LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1093 - களவியல்

Next Kural >

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று. (அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.)
மணக்குடவர் உரை:
முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள். அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர். தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைமகள் காதலை நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள்- நான் நோக்காதபோது அவள் என்னை அன்புடன் நோக்கினாள் ;நோக்கி இறைஞ்சினாள்- அங்ஙனம் நோக்கினவள் உடனே ஒன்றைக் கருதி நாணங்கொண்டு என்னை வணங்குவாள் போலத் தலைகுனிந்தாள்; அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர் -அச்செயல் எம் மிருவேமையும் பிணிக்கும் காதற்பயிர் வளர அவள் வார்த்த நீராகும். யாக்கும் அன்பை யாப்பென்றார்.யாப்பைப் பயிராக வுருவகியாமையின் இது ஒரு மருங்குருவகம்.
கலைஞர் உரை:
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.
சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.
Translation
She looked, and looking drooped her head: On springing shoot of love 'its water shed! .
Explanation
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.
Transliteration
Nokkinaal Nokki Irainjinaal Aqdhaval Yaappinul Attiya Neer

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >