LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1132 - களவியல்

Next Kural >

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.
மணக்குடவர் உரை:
பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
( நாணுடைய நுமக்கு அது முடியாதென மடல்விலக்கிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது . ) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அத்துன்பத்தைப் பொறாத வுடம்பும் உயிரும் தமக்குக் காப்பான மடற்குதிரையை ஏறக் கருதுகின்றன ; நாணினை நீக்கி நிறுத்து - அதற்குத் தடையான நாணத்தை நீக்கி வைத்து . அறிவு நிறை யோர்ப்புக் கடைப்பிடி யென்னும் ஆண்மைக்குணம் நான்கும் முன்னரே நீங்கிவிட்டன் . எஞ்சியிருக்கும் நாணம் என்னும் இருபாற் பொதுக் குணமும் , ' மடலேற்றத்தின் பொருட்டு நீக்கப்பட்டுவிடும் . அல்லாக்கால் உயிரும் உடம்பும் துன்பம் பொறுத்துக்கொண்டு உடனிற்கு மாறில்லை யென்பான் , 'நோனாவுடம்பு முயிரும் மடலேறும் ' என்றான் . ' உழந்து வருந்தினார்க்கு ' என மேற்குறிளில் வந்தமையின் , இங்கு ' நோனா ' என்று மட்டுங் கூறினார் . ' மடலேறும் ' என்றது தோழி தன் ஆற்றாமை யறிந்து விரைந்து குறைமுடிப்பாள் என்று கருதி . ' மடல் ' ஆகுபெயர் .
கலைஞர் உரை:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.
சாலமன் பாப்பையா உரை:
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
Translation
My body and my soul, that can no more endure, Will lay reserve aside, and mount the 'horse of palm'.
Explanation
Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.
Transliteration
Nonaa Utampum Uyirum Matalerum Naaninai Neekki Niruththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >