இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, சமர்பிக்கப்படும் ஆவணங்களில், முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஆவணமாக ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), வருமான வரித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களும் பான் கார்டுகளை வாங்கி வைத்து கொள்ளலாம்.
பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பவர், தன் அடையாளம் மற்றும் முகவரியை உறுதி செய்வதற்கு, தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் என்ன என்ன என்பதை, வருமான வரித்துறை பட்டியலிட்டுள்ளது. இதில், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட, சில ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் தற்போது, முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கான, ஆவணமாக ஆதார் அடையாள அட்டையும் பயன்படுத்தலாம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
|