இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் வாள் வீச்சில் களமிறங்கும் தமிழக வீராங்கனை பவானி தேவி
வட சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்தலவதா ஆனந்த சுந்தரராமன் பவானிதேவி.இவர் இந்தியாவின் சார்பில் 2021-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சில் களம் இறங்குகிறார். ஒலிம்பிக் வாள்வீச்சுப் பிரிவில் களமிறங்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் பவானி தேவி.
இவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார்.அதில் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள பவானி தேவியால் தமிழ் நாடே பெருமை கொள்கிறது. கடின உழைப்பினால் வென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
பவானி தேவி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.சென்னை முருகா தனுஷ்கோடி பள்ளியில் ஏதேனும் ஒரு விளையாட்டுப் பிரிவை தேர்ந்தெடுக்கச் சொன்னபோது வாள்வீச்சினை தெரிவு செய்துள்ளார். 2003 ஆம் ஆண்டு இவரது வாள்வீச்சு ஆரம்பமாகியுள்ளது. தனது 14 வது வயதில் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2009ஆம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் நம் நாட்டிற்கு வெண்கலம் பெற்று தந்துள்ளார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் பதக்கங்களை இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளார் பவானி தேவி.
கேரளாவில் வாள் வீச்சு பயிற்சி பெற்று வந்த இவர், தற்போது இத்தாலியில் உள்ள நிக்கோலா ஜெனாட்டி என்பவரிடம் பயிற்சி பெற்று வருகின்றார். கடினமான காலங்களிலும் தன் முயற்சியை கைவிடாமல் இந்நிலையை எட்டியுள்ளார் பவானிதேவி. தோல்விகளுக்கு அடிபணியாமல் வெற்றியையே தன் குறிக்கோளாக வைத்து முன்னேறியுள்ள பவானிதேவி உண்மையில் தமிழ்நாட்டின் பெருமையாவார்.
|