LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

ஓணப்பந்து விளையாட்டு

தமிழகத்தின் மிக பழமையான வீர விளையாட்டுகளில் ஓணப்பந்தும் ஒன்றாகும். பொதுவாக ஆடவர் மட்டுமே விளையாடும் இவ்விளையாட்டு குமரி மாவட்டத்தில் பிரபலமான விளையாட்டாகும். இது ஏழு வீரர்களைக்கொண்ட இரு அணிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டாகும். ஒரு அணி கைகளால் பந்தையடிக்க மறு அணி பந்தை கால்களால் திருப்பி அடித்து விளையாடப்படுவதாகும்.

ஓணப்பந்து தயாரிக்கும் முறை :

எருமைத் தோலை எடுத்து அதனுள் தேங்காய் நாரை இறுக்கமாக வைத்து நேர்த்தியாக தைத்து ஓணப்பந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கென்று குமரி மாவட்டத்தில் பந்து தைப்பவர்கள் உள்ளனர். இது கிரிகெட் பந்தை விட சற்று சிறியதாக இருக்கும். ஒரு பந்து சுமார் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 
ஓணப்பந்து மைதானத்தை அமைப்பது எப்படி?

இந்த மைதானம் 25 x 7 மீட்டர் அளவுள்ள நீள் செவ்வக அமைப்பாகும். இதில் அகல வாக்கில் இரண்டு கோடுகள் இடப்பட்டிருக்கும். அவை முறையே தட்டும் கோடு, பவுள் கோடு ஆகும். மண் தரையை சீர்படுத்தி மணல் போன்றவை நீக்கப்பட்ட கட்டாந்தரையை சாலை உருளையால் சமப்படுத்தி பின் மாட்டுச்சாணத்தால் முழுவதும் மெழுகி மைதானம் தயாரிக்கப்படுகிறது. பின் நான்கு மூலைகளிலும் சுமார் 65 அடி உயரமுள்ள நான்கு கமுகு மரங்கள் எல்லைக்கம்பங்களாக நாட்டப்படுகிறது.

ஓணப்பந்து மைதானத்தின் ஒரு பக்கம் அடித்தாடும் பக்கம், எனவும் மறு பாகம் தடுத்தாடும் பக்கம் எனவும் அழைக்கப்படும். அடித்தாடும் பக்கத்திலுள்ள இரு கம்பங்களின் நடுவில் 65 அடி உயரத்தில் கயிறு மூலம் பட்டுத்துணி கட்டப்பட்டிருக்கும்.

ஒனப்பந்து விளையாட்டில் வெற்றி பெற 7 கட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு :

  • ஒற்றை,
  • இரட்டை,
  • முறுக்கி,
  • தாளம்,
  • காவடி,
  • ஓட்டம்,
  • பட்டம்.


ஒரு கட்டத்திற்கு மூன்று பந்து வீதம் மொத்தம் 21 பந்துகள். தடுப்பாட்டத்தை சமாளித்து 21 பந்துகளையும் சரியான முறையில் செலுத்தும் அணி வெற்றி பெறும்.


ஒனப்பந்து அணிகள் :

இவ்விளையாட்டை விளையாட இரண்டு அணிகள் தேவை. ஒரு அணியில் அணித்தலைவர் உட்பட ஏழு வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு வீரருக்கும் 1 முதல் 7 வரையுள்ள ஒவ்வொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இது வீரர்களின் சட்டையில் எழுதிஇருக்கும்.


ஒனப்பந்து விளையாடும் முறை :

கிரிக்கெட்டில் டாஸ்  போடுவது போன்றே ஒனப்பந்து விளையாட்டிலும் டாஸில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே முதலில் கைகளால் பந்தை அடித்தாட அடித்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர். எதிரணியினர் அவர்கள் அடிக்கின்ற பந்தை கால்களால் தடுத்தாட தடுத்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர்.

அடித்தாட்டமும் தடுப்பாட்டமும் :

அடித்தாடும் அணியின் முதல் வீரர் முதலில் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு அடுத்த கையால் பந்தை ஓங்கி அடித்து எதிரணியை நோக்கி செலுத்த வேண்டும். பந்து எல்கைக்கம்பங்களுக்கு வெளியே செல்லாமலும் பவுள் கோட்டிற்கு வெளியே விழாமலும் செல்ல‌ வேண்டும். எதிரணி வீரர்கள் அதாவது தடுத்தாடுபவர்கள் 7 பேரும் தடுத்தாடும் பக்கத்தின் முன்களத்திலும் பின்களத்திலும் நின்று கொண்டு முதல் வீரர் அடித்த பந்தை திருப்பி கால்களால் செலுத்த வெண்டும்.எல்லைக்கோட்டிற்கு வெளியே செல்லாமல் நேராக அடித்தாடும் பக்கம் பந்து சென்றால் அடித்தாடுபவர்களும் பந்தை கால்களால் திரும்ப செலுத்துவர். இவ்வாறு மாறி மாறி பந்தை உதைத்து விளையாட வேண்டும். தடுத்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கொட்டிற்கு வெளியே செலுத்தினாலோ அடித்தாடுபவர்கள் செலுத்திய பந்தை கால்களால் திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் முதல் பந்தை வெற்றிகரமாய் முடித்து விட்டு இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். அடித்தாடுபவர்கள் கால்களால் செலுத்திய பந்தை தடுத்தாடுபவர்கள் கைகளால் அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் ஆட்டமிழப்பார். பிடிக்கும்போது தவற விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார்.

அடித்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே செலுத்தினாலோ தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் ஆட்டமிழப்பார். தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். பிடிக்கத்தவறினால் ஆட்டமிழப்பார். இவ்வாறு அடித்தாடுபவர்கள் தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியான முறையில் செலுத்தினால் அடித்தாடுபவர்கள் ஒற்றை நிலையிலிருந்து இரட்டை என்ற நிலைக்கு முன்னேறுவர். தொடர்ந்து முதல் வீரர் இரட்டை முதல் பந்தை செலுத்துவார். முதல் வீரர் ஒற்றை 1,2,3 இவற்றில் எந்த பந்தில் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது வீரர் ஒற்றை முதல் பந்திலிருந்துதான் விளையாட வேண்டும்.

ஆனால் முதல் வீரர் மூன்று பந்துகளையும் வெற்றிகரமாக செலுத்தி இரட்டை என்ற நிலைக்கு முன்னேறிய பின் ஆட்டமிழந்தால் இரண்டாவது வீரர் இரட்டை முதல்பந்திலிருந்து ஆட்டத்தை தொடங்குவார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியாக வீசினால் மட்டுமே ஒவ்வொரு கட்டமாக முன்னேற முடியும்.விளையாடும்மோது ஏழு வீரர்களும் ஆட்டமிழந்தால் அடித்தாடுபவர்கள் எந்த கட்டத்தில் விளையாடுகின்றனறோ அந்த நிலையை தக்க வைத்தவாறு தடுத்தாட பக்கம் மாறுவர் எதிரணியினர் அடித்தாட பக்கம் மாறுவர். இவர்களும் ஆட்டமிழக்கும் போது மீண்டும் தடுத்தாடுபவர்கள் தாங்கள் விட்ட நிலையிலிருந்து அடித்தாடுவர்.


ஓட்டம் :

இவ்வாறு ஒற்றை, இரட்டை,முறுக்கி,தாளம்,காவடி,ஓட்டம் என‌ முன்னேற வேண்டும். ஓட்டம் ஆட்டத்தின் முக்கிய கட்டமாகும். ஓட்டத்திற்கு மட்டும் மூன்று பந்துகளையும் அடித்தாடும் வீரர் நேரடியாக கால்களால் உதைத்து விளையாட வேண்டும். ஆனால் பந்து மற்ற பந்துகளைப்போல் பவுள் கோட்டினுள் விழுந்துதான் செல்ல வேண்டும். ஓட்டம் 3 பந்துகளையும் தாண்டினால் ஆட்டத்தின் இறுதி கட்டமான‌ பட்டம் என்ற நிலைக்கு முன்னேறுவர். பட்டம் மூன்று பந்துகளையும் தாண்டும் அணி முதற்கட்ட ஆட்டத்தில் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற‌ நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.

முதற்கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற‌ அணி இரண்டாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இரு அணிகளும் மீண்டும் ஒற்றை நிலையிலிருந்து ஆட்டத்தை தொடங்கும். இந்த ஆட்டத்தில் முதலில் வென்ற அணி மீண்டும் வென்றால் 2:2 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெறும். ஆட்டம் முடிவு பெறும்.முதலில் வென்ற அணி தோல்வியடைந்தால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வென்ற நிலையில் மூன்றாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.இரண்டாம் கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி மூன்றாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் பட்டத்தை தாண்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்


ஒனப்பந்து ஆட்டத்தின் விதிமுறைகள் :

பந்தை பிடிக்கும்போது பந்தை கைகளால் மட்டுமே பிடிக்க வேண்டும் தரையிலோ உடம்பிலோ படக்கூடாது.

அணி வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எண்களின் வரிசையில்தான் விளையாட வேண்டும். இருப்பினும் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஆட்டம் முடிந்த பின் எண்களை மாற்ற தடையேதுமில்லை.

பந்தை கால்களால் திரும்பச்செலுத்தும்போது ஒருவர் செலுத்திய பின் அதே அணி வீரர் மீண்டும் அந்த பந்தை செலுத்தலாகாது.

பந்தை செலுத்தும்போது பந்து வீரரின் கால் மூட்டின் மேல் பட்டால் அவர் பந்தை தவற விட்டதாகவே கருதப்படும்.

பந்தை பிடிக்கும்போது ஒரு வீரர் கையை உயர்த்தினால் அவரே அப்பந்தை பிடிக்கும் தகுதியை பெறுகிறார்.

பந்து வேகமாக வரும்போதே பந்தை திரும்பச்செலுத்த வேண்டும்.பந்து வேகம் குறைந்து நின்ற பின் பந்தை அடித்தலாகாது.

பந்து எல்கை கம்பத்தின் மீது பட்டாலும் எல்கைக்கு வெளியே சென்றதாக கருதப்படும்.

 
போட்டியின் நடுவர்கள் :

ஓணப்பந்து போட்டிகள் நடைபெறும்போது ஓணப்பந்து விளையாட்டில் தேர்ந்த இரு நடுவர்கள் செயல்படுவர். ஒருவர் எல்கைக்கம்ப‌ நடுவராக செயல்படுவார். வேகமாக வரும் பந்துகள் எல்கைக்கம்பத்திற்கு வெளியே சென்றதா உள்ளே சென்றதா என்பதை மட்டும் தீர்மானிப்பார். இன்னொரு நடுவர் மற்ற காரியங்களில் முடிவெடுப்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானதாகும்.
 

ஓணப்பந்து போட்டி :


ஓணப்பந்து போட்டி என்பது பல்வேறு அணிகள் பங்குபெறும் விளையாட்டாகும். மூன்று நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பிரபலமான சுமார் 25 க்கு மேற்பட்ட‌ அணிகள் பங்கு பெறும். கால் இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டி என போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். ஆடுகளத்தில் 65 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் பட்டின் மீது கால்களால் பந்தை அடிக்கும் வீரருக்கு சிறப்பு பரிசு, ஆட்ட நாயகன் பரிசு ஆகியவையும் உண்டு. பல்வேறு இளைஞர் அமைப்புகள் ஆண்டுக்கொருமுறை இப்போட்டியை நடத்தி வருகின்றன.

 

by Swathi   on 02 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்... அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...
அத்திலி புத்திலி - அறிமுகம் அத்திலி புத்திலி - அறிமுகம்
அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் .. அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..
மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) .... மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....
பூசணிக்காய் இருக்கா? பூசணிக்காய் இருக்கா?
மீன்சட்டி மீன்சட்டி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.