ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும்.
இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தீச்சொற் பொருட்பயன் ஒன்றானும் உண்டாயின் - ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றேனும் பிறர்க்கு உண்டாயின் ; நன்று ஆகாது ஆகிவிடும் - அவன் ஏற்கெனவே செய்துள்ள பிறவறங்கள் பயன்படாமற்போம் .
சொற்குற்றம் பொய் , குறளை , கடுஞ்சொல் , பயனில் சொல் என நான்கு என்பர்.
" ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீய சொல்லின் பொருளைப் பயக்குமாயின் , நன்மை யாகாதாகியேவிடும் " என்னும் மணக்குடவ ருரை பொருந்துவதன்று .
கலைஞர் உரை:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல்
தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில்
உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.
Translation
Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.
Explanation
If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.