LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள்

பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் கடந்த 10 ஆண்டுகளில் 165 நீர்நிலைகள் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக உவகை ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே சென்னை மக்களுக்கு 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் மோசமான நினைவுகள் எழும். பெருமழை, திறனற்ற நிர்வாகம் இதற்கு முக்கியக் காரணமென்றாலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளும் ஒரு முக்கியக் காரணமாகும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து உவகை ஆராய்ச்சி நிறுவனம் ஒரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கரணை நீர்பிடிப்பு பகுதிக்குள் வரும் ஒவ்வொரு துளி மழை நீரையும் தென் சென்னை மக்களின் தண்ணீர்த் தேவையைப் போக்கும் நீர் ஆதாரமாக மாற்ற முடியுமா? என்பது குறித்தும் இவ்வாய்வில் விவாதிக்கப்பட்டுள்ளது.

812 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள கோவளம் வடிநிலப்பகுதியில் மழை நீரை வெளியேற்ற ஆறுகள் இல்லை, தாழ்வான பகுதிகளான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், முட்டுக்காடு காயல் பகுதியின் மூலம்தான் மழைநீர் கடலில் வடிய வேண்டியுள்ளது. இப்பகுதி கடல்மட்டத்திலிருந்து தாழ்வான பகுதி என்பதாலும் ஆறுகள் இல்லாததாலும் அதிக வெள்ளப்பெருக்கைச் சந்திக்கக்கூடிய ஒரு சூழல் உள்ளது.

கோவளம் துணை வடிநிலப் பகுதியில் ஐந்து நீர்ப்பிடிப்புப் பகுதிகள் உள்ளன. இதில் தெற்குப் பகுதியில் இருக்கும் மூன்று நீர்ப்பிடிப்புப் பகுதியின் மொத்தம் 77 கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதி வடக்கே கிண்டி பூங்கா பகுதியில் தொடங்கி, கிழக்கே முட்டுக்காடு வரை விரிந்து உள்ளது; தென்மேற்கு எல்கையாக வண்டலூர் பகுதியில் துவங்கி, மேற்கே சின்னமலை வரையிலும் பரவியுள்ளது.

306 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இம்மூன்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும் அப்பகுதியில் இருக்கும் நீர்நிலைகளை நிரப்பிவிட்டுத் தாழ்வான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வந்தடைகிறது. அங்கிருந்து ஒக்கியமடுவு வழியாக பக்கிங்காம் கால்வாய் மூலமாக முட்டுக்காடு பகுதியில் கடலைச் சென்றடைகிறது. அதே போல, வடக்குப்பகுதியில் உள்ள இரண்டு நீர்பிடிப்பு பகுதிகளும் பெரிய உப்பு ஏரி மூலமாக எடியூர் அருகில் கடலைச் சென்றடைகிறது.

உவகையின் ஆய்வறிக்கை, வடக்குப்பகுதியில் உள்ள 3 நீர்பிடிப்பு பகுதிகளின் 306 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து, மழையின் அளவின் அடிப்படையில் உருவாகும் மழைத்தண்ணீர், அதைச் சேமித்து வைப்பதற்கான சாத்தியக்கூறுகள், மீதமுள்ள தண்ணீரை நகர்ப்புற மக்களுக்கு எவ்விதச் சேதமுமின்றி கடலுக்குக் கொண்டு செல்லும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துள்ளது.

கூகுள் எர்த் படங்கள் (Google Earth Images), கிராம வருவாய் ஆவணங்கள், ISRO-வின் செயற்கைக் கோள்களின் தரவுகள் (BHUVAN Data), தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நீர்வளத்துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலமும் நேரடிக் கள ஆய்வுகளின் மூலமும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் போன நீர்நிலைகள்:

பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் மொத்தம் 165 நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அவை முற்றிலுமாக காணாமல் போயுள்ளன. பரப்பளவில் இது 7,35 சதுர கிலோ மீட்டருக்கு (735 ஹெக்டேர்/1816.22 ஏக்கர்) சமம்.

நீர்நிலைகளில் எவ்வளவு நீரைச் சேமிக்கமுடியும்?
10 ஆண்டுகளில் (120 மாதங்கள்), வெறும் 6 நீர் நிலைகளில் மட்டுமே 90 மாதங்களுக்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. 21 நீர்நிலைகளில் 61-90 மாதங்கள் நீர் இருந்திருக்கிறது. 133 நீர்நிலைகளில் 30 மாதங்களுக்கும் குறைவாகவே தண்ணீர் இருந்திருக்கிறது.

கடந்த 100 ஆண்டுகளில் (1925-2024) சென்னையின் சராசரி ஆண்டு மழை அளவு 1231.3மிமீ, சராசரி மாத மழை அளவு 102 மிமீ. குறைந்த பட்சம் 100 மிமீ மழை பொழிந்தால் 17.61 mcm தண்ணீரும், அதிகபட்ச மழைப்பொழிவு 400 மிமீ இருந்தால் 70.44 MCM தண்ணீரும் பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து உருவாகும்.

தற்போதைய நீர்நிலைகளின் பரப்பளவு 25 sq.km. கொள்ளளவு (ஆழம் 1.5 மீட்டர் எனக் கணக்கிட்டால்) 37. 5 MCM. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் கொள்ளளவு 6.94 MCM. 100 mm மழை பெய்தால் தண்ணீரை முழுவதுமாகச் சேமிக்க முடியும். 400 மிமீ மழை பொழிந்தால் 65% தண்ணீர் சேமிக்க முடியும். நீர்நிலைகளை ஆழப்படுத்துவதன் மூலம், மீதமுள்ள 35% தண்ணீரையும் சேமிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால், பிற நீர்நிலைகளைப் போல பள்ளிக்கரணையை ஆழப்படுத்தக் கூடாது எனும் கூற்றும் நிபுணர்களிடம் நிலவுகிறது. ஏனெனில் பள்ளிக்கரணை ஒரு சதுப்பு நிலமாகும். சதுப்பு நிலத்தைத் தூர்வாருவது அதன் சூழல் சமநிலையைப் பாதிக்கும்.

மேலும், பக்கிங்காம் கால்வாயில் இருக்கும் திட்டை அகற்றி, அதை 100 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தி, முறையாகப் பராமரிப்பதன் மூலம், பள்ளிக்கரணை பகுதியில் எந்த வெள்ளப்பெருக்கும் இன்றி தண்ணீர் கடலுக்குச் சென்று சேரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

தென் சென்னை பகுதியின் தினசரி குடிநீர்த் தேவை சுமார் 600 மில்லியன் லிட்டர் (அல்லது 0.6 மில்லியன் கன மீட்டர்). தற்போது பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் சதுப்பு நிலம் ஆகியவற்றின் மொத்தச் சேமிப்பு திறன் 44.44 மில்லியன் கன மீட்டர். இதனால், தென் சென்னை பகுதியின் குடிநீர்த் தேவையைச் சுமார் 77 நாட்கள் பூர்த்தி செய்ய முடியும்.

முறையாக நீர்நிலைகள் பராமரிக்கப்படாததால், பெருவாரியான நீர் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு கடலுக்குச் செல்கிறது. இதுவே இந்த நீர்நிலைகளை இரண்டு முறை நிரப்பினால் 240 நாட்களுக்குத் தேவையான நீரைச் சேமிக்க முடியும் என்கிறது இவ்வறிக்கை.

உவகையின் பரிந்துரைகள்:
• இப்பொழுது நிலவி வரும் காலநிலை மாற்றத்தில், மழை நீரினைப் பிரச்சினையாகப் பார்க்காமல் அதை ஒரு வாய்ப்பாகக் கருதி ஒரு ஆண்டுக்குத் தேவையான நீரினைச் சேமித்து வைக்கக்கூடிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

• பெருகி வரும் மக்கள் தொகையில் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. இன்று மழை மூலமாக வரும் நல்ல நீரை அதி விரைவாகக் கடலுக்கு அனுப்பும் திட்டங்களே பெரும்பாலும் தீட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 91 கோடியில் தீட்டப்பட்டுள்ள ஒக்கிய மடுவிலிருந்து பள்ளிக்கரணை நல்ல நீரை நேரடியாகக் கடலுக்குச் செலுத்தும் திட்டம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

• நல்ல நீரைச் சேமிக்கும் திட்டங்கள் தொலை நோக்குப் பார்வையுடன் முறையான தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாகச் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத வண்ணம் தீட்டப்பட வேண்டும்.

• நீர் மேலாண்மைக்காக ஒரு ரூபாய் செலவு செய்தால் கூட அது ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளை/நீரியல் கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்காகச் செலவிடப்பட வேண்டும்.

• தமிழக நிலப்பரப்பு ஏற்கெனவே நீரினை உறிஞ்சும் தன்மை கொண்டது. இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாத்தால் அதுவே நீரினைப் பூமி உறிஞ்சி நிலத்தடி நீரை உயர வைக்கும்.

• புதிதாக sponge park என்று கூறப்படும் திட்டங்களுக்குப் பதிலாக இருக்கும் நீர்நிலைகளைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இயற்கையாக அமைந்த நீர்வழிப்பாதைகளைப் பாதுகாத்து அதைக் கருத்தில் கொண்டு எந்தத் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

• பள்ளிக்கரணை நீர்பிடிப்பு நிலத்தின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 2 மீட்டர், இது சில இடங்களில் 2 மீட்டர் கூட செல்லலாம். சுமார் 28% (சுமார் 86 sq.km/306 sq/km) பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள். இந்தப் பகுதிகள் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களும் தடை செய்யப்பட்ட பகுதியாக (No-Development Zones) அறிவிக்கப்படவேண்டும். மற்றும் எக்காலத்திலும் பாதுகாக்க வேண்டிய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

• தாழ்வான நீர் தேங்கியிருக்கும் செம்மஞ்சேரி பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு நகரம் போன்ற திட்டங்களை வேறு தகுந்த இடத்திற்கு மாற்றவேண்டும்.

நன்றி: பூவுலகின் நண்பர்கள்

 

 

by hemavathi   on 23 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு  முடிவுகள்- அரியலூர் மாவட்டம் முதலிடம் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்- அரியலூர் மாவட்டம் முதலிடம்
100 நாள் வேலைத் திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.336 ஆக உயர்வு 100 நாள் வேலைத் திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.336 ஆக உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு
குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்கள் சாதனை!-நம்பிக்கையூட்டும் நான் முதல்வன் திட்டம்! குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்கள் சாதனை!-நம்பிக்கையூட்டும் நான் முதல்வன் திட்டம்!
இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம் இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம்
தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி! தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி!
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.