திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி. (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.)
மணக்குடவர் உரை:
தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார்.
இது தலைமகள் தோழிக்குக் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைமகன் சென்றபின் வந்த தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்த கூறியது.)
ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு உரையாடா திருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து - அது எதற்கெனின், யாம் ஊடல் நீங்கித் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்தி உரையாடுதற்கு.
இயல்பாக நிகழ்ந்த தும்மலை வேண்டுமென்று செய்ததாகக் கொண்டதால் (புலவி) நுணுக்கமாயிற்று. தும்மியபோது வாழ்த்துதல் மரபாகலால், உரையாடல் வேண்டியதாயிற்று என்பதாம். ' யாம் ' என்றது அரசப் பன்மை (Royal 'we' ) , அகரந் தொக்கது.
கலைஞர் உரை:
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து
அவரை "நீடுவாழ்க" என வாழ்த்துவேன் என்று நினைத்து.
சாலமன் பாப்பையா உரை:
நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்).
Translation
One day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'.
Explanation
When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.