LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : என் கேள்விக்கு என்ன பதில்? - அத்தியாயம் 2

என் கேள்விக்கு என்ன பதில்?

 

"அத்துவானக்காடு. ஆள்நடமாட்டம் கூட அதிகமாக இருக்காது. அந்த நிறுவனத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களை நாம் பார்க்கும் போது சுடுகாடு போலவே தெரியும். அந்தப் பகுதியில் அந்த நிறுவனத்தின் கட்டிடம் மட்டும் தனியாகத் தெரியும். ஊருக்குள் இருந்த கட்டிடத்தில் இருந்து மாறி இரண்டு வருடத்திற்கு முன் தான் அங்கே மாறியிருக்கின்றார்கள். ஒரு இறக்குமதியாளர் (BUYER) எதிர்பார்க்கும் அத்தனை வசதிகளும் உள்ளே உள்ளது. அந்த நிறுவனத்தின் பக்கத்தில் வீடுகள் கூட எதுவும் கிடையாது. இப்போது தான் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றது. தூரத்தில்  சாலையில் இருந்து நாம் பார்த்தால் அந்த நிறுவனத்தின் மேலே உள்ள வடிவம் மட்டும் தெரியும். அந்த கூரை வடிவம் பச்சை நிறத்தில் இருக்கும்.  காரணம் இயற்கைக்கு தொந்தரவு இல்லாத அமைப்பில் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் அந்த நிறுவனத்தை அமைத்துள்ளனர்"

 

என் நண்பர் எனக்கு முதல்முறையாக பஞ்சபாண்டவர்கள் குறித்து அறிமுகம் செய்து வைத்த போது அந்த நிறுவனத்தைப் பற்றி அடையாளம் என்று இப்படித்தான் சொன்னார். அப்பொழுது திருப்பூருக்குள் இப்படிப்பட்ட நிறுவனமும் உள்ளதா? என்ற ஆச்சரியம் என் மனதில் உருவானது.

 

நண்பர் சொன்னபடி குறிப்பிட்ட நாளில் அடையாளம் கண்டு அந்த கட்டிடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். நுழைவாயிலில் பாதுகாவலர் நிற்கிறார்,  மக்கள் அவர்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். ஆட்களும், வாகனங்களும் உள்ளே வெளியே வந்து போய்க் கொண்டிருக்க அந்த இடமே சுறுசுறுப்பாக இருந்தது. தூரத்தில் இருந்து அந்த கட்டிடத்தையும் பார்வையிட்டதற்கும் அருகே வந்து பார்த்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிந்தன.

 

நான் வாகனத்தை பாதுகாவலர் சொன்னபடி ஓரமாக வைத்து விட்டு அவர்கள் வாகனத்திற்கென்று தந்த அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டேன்.

 

நான் வந்துள்ள விபரத்தைப் பற்றி அவர்களிடம் சொன்னபோது உள்ளே அழைத்துக்கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்த நண்பர் சொன்ன வாசகம் மீண்டும் ஒரு முறை என் மனதில் வந்து போனது.

 oru-tholitchalaiyin-kurippugal-part2

"உன்னைப் போல கரடுமுரடான ஆட்களுக்கு ஏற்ற நிறுவனம் அது தான். உன் திறமைகளைப் பற்றி தெரியாமலேயே இங்கே குப்பை கொட்டி கொண்டு இருக்காதே. நீ அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். உன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சியென்பது திட்டமிடப்பட்ட நிர்வாக அமைப்பின் கீழ் தான் இருக்க வேண்டும். அது போன்ற அமைப்பில் செயல்படும் போது தான் உன் திறமைகளின் மதிப்பீடு உனக்கே புரிய வரும்" என்றார்.

 

தொடர்ந்து சொன்ன விசயங்கள் தான் என்னை எந்த அளவுக்கு புரிந்துள்ளார் என்பதை உணர்ந்து கொள்வதாக இருந்தது. 

 

"கடிவாளம் போட்டது போல இருக்கும். அதே சமயத்தில் உன்னை மெருகேற்றிக் கொள்ள உதவியாய் இருக்கும்.  திருப்பூருக்குள் இன்னமும் சரியான நிர்வாக அமைப்பு எந்த நிறுவனத்திலும் உருவாக்கப்படவில்லை. உருவாக்கும் ஆசையும் எவருக்கும் இல்லை. ஆனால் சிறு தொழில் போல செயல்படும் இவர்களால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது." என்று நண்பர் பேசிய போது எனக்கு சற்று குழப்பமாகவே இருந்தது. நிர்வாகத்திற்கு ஒரு கட்டமைப்பு வேண்டும் என்கிறார். தன்னை அதற்குள் பொருத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். ஆனால் அதுவரையிலும் நான் பார்த்த ஒவ்வொரு நிறுவனத்திலும் தலையில்லா முண்டம் போலத்தான் நிர்வாக அமைப்பு இருந்தது.  அதற்குள் தான் முதல் பத்து வருடங்கள் குப்பை கொட்டிக் கொண்டிருந்தேன்.

 

என் மேல் உள்ள அக்கறையின் காரணமாகவும், என் திறமைகளின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையின் பால் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விட குறியாக இருந்தார். அப்போது தான் நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு ஒரு நாள் வந்திருந்த போது வேறு சில உரையாடல்களுடன் பஞ்சபாண்டவர்கள் இருந்த நிறுவனம் பற்றியும் அங்குள்ள தேவையைப் பற்றியும் கூறினார். எல்லா வசதிகளும் இருந்து உற்பத்திப் பிரிவில் சரியான தலைமைப் பொறுப்பு இல்லாத காரணத்தால் மாதம் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஆடைகள் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிர்வாகம் கடந்த ஆறுமாதமாக 25000 ஆடைகளை மட்டுமே ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது" என்றார். 

 

"இதன் காரணமாக மொத்த நிர்வாகமும் நிதிச் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது" என்பதை கூடுதல் தகவலாக சொன்னார்.

 

நண்பரிடம் சங்கடப்படாமல் சட்டென்று கேட்டேன். அப்படியென்றால் மாதச் சம்பளமே சரியாக வராதே என்றேன்.

 

ஆமாம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் சம்பளம் போடுகிறார்கள் என்றார்.

 

ஏன் இப்படிப்பட்ட நிறுவனத்தில் என்னை தள்ளிவிட ஆசைப்படுகின்றீர்கள் என்றபோது அவர் யோசிக்காமல் பேசிய வார்த்தை எனக்கு சிரிப்பை வரவழைத்தது.

 

நீ சென்றால் மாதச் சம்பளம் சரியாக போடும் அளவுக்கு உன்னால் மொத்த நிர்வாகத்தையும் மாற்றிவிட முடியும் என்றார்.

 

தொடர்ந்து பேசிய போது அங்கே இருந்த நிர்வாக அமைப்பைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

அங்குள்ள நிர்வாக அமைப்பில் ஐந்து பேர் இருக்கின்றார்கள். அங்கே அவர்களை பஞ்சபாண்டவர்கள் என்பார்கள்.  அவர்களைத் தாண்டி உள்ளே நுழைந்து விட்டால் போதும். அதன் பிறகு உன்னை அவர்கள் விடவே மாட்டார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளி. படபடப்பில் உளறிவிடாதே. அமைதியாக அவர்களை சமாளித்து உள்ளே சென்று விடு என்று கூறினார்.

 

நண்பர் என்னிடம் சொல்லியவற்றை யோசித்துக் கொண்டே பாதுகாவலர் எழுதித் தரச் சொன்ன தகவல்களை அவர்கள் கொடுத்த காகிதத்தில் எழுதியபடி நிறுவனத்தின் உள் பகுதியை நோட்டம் விட்டேன்.  ஆச்சரியமாக இருந்தது.  வெளிப்புற தோற்றத்திற்கு சம்மந்தம் இல்லாமல் உள்புறம் இருந்தது. தெளிவாக நேர்த்தியாக ஒவ்வொரு பகுதியும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது.

 

ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு நபர் (Buyer) என்னவெல்லாம் எதிர்பார்பாரோ அவையெல்லாம் கனகச்சிதமாக இருந்தது. ஒவ்வொரு இடமும் சுத்தமாக இருந்தது. உள்ளே பணியில் இருந்த பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.  மொத்த நிர்வாகமும் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துவதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

நிச்சயம் இங்கே உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உருவானது.

 

செக்யூரிட்டி மக்கள் கேட்ட தகவல்களை எழுதிக் கொடுத்ததும், நான் வந்த காரணத்தைப் படித்து விட்டு உள்ளே அழைத்து பேசினர். உள்ளே இருந்து அனுமதி கிடைத்ததும் எனக்கு விசிட்டர் பாஸ் என்ற அட்டையை என் கழுத்தில் கட்டிக் கொள்ள அறிவுறுத்தினர்.

 

ஒருவர் நிறுவனத்தின் வரவேற்பறையை நோக்கி அழைத்துக் கொண்டுச் சென்றார். நீண்ட சாலை போன்ற பாதையின் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த சிமெண்ட் தளத்தில் நடந்து சென்றேன். இரண்டு பக்கமும் வெட்டிவிடப்பட்ட அழகுச் செடிகள். ஒவ்வொன்றையும் கூர்மையாக கவனித்துக் கொண்டே வரவேற்பறையின் உள்பகுதியில் நுழைந்த போது அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.  வரவேற்பரை நீண்ட ஹால் போலவே இருந்தது. தாராளமாக ஒரு மினி கூட்டமே நடத்தலாம். அந்த அளவுக்கு விசாலமாக இருந்தது. பணச்செழிப்பின் தன்மை ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது. நான் வந்துள்ள விபரம் குறித்து உள்ளே தகவல் சொல்லப்பட்டுள்ளது.  வரவேற்றையில் நடுநாயமாக அமர்ந்திருந்த பெண்மணி என்னைக் கண்டதும் என் பெயர் சொல்லி நீங்க மேலே செல்லலாம் என்றார். அவரின் உதவியாளர் என்னை மேலே அழைத்துக் கொண்டு சென்றார். நான் நுழைந்தது முதல் ஒவ்வொரு செயல்பாடும் விரைவாக நடந்து கொண்டிருந்தது. என்னைப் போலவே பலரும் அங்கே காத்துக் கொண்டிருந்தனர்.

 

எனக்கு அங்கு ஒவ்வொன்றும் ஆச்சரியமாகவே இருந்தது. எனக்கு அங்கே கிடைத்த மரியாதையை விட நண்பருக்கு அந்த நிறுவனத்தில் இருந்த செல்வாக்கைப் பற்றி என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

முதல் தளத்தில் உள்ள ஒவ்வொரு தடுப்புகளையும் தாண்டிச் சென்ற போது அங்கேயிருந்த அலுவலகம் சார்ந்த நிர்வாக அமைப்பை புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பிரிவின் தொடக்கத்திலும் மேலே எழுதி வைக்கப்பட்டிருந்ததை வைத்து ஒவ்வொரு துறையையும் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அலுவலகம் முழுக்க பரவியிருந்த குளிர் என் உடம்பை ஜில்லிட வைத்துக் கொண்டிருந்தது. நடந்து சென்று கொண்டிருந்த போது பக்கவாட்டு பகுதியைப் பார்த்தேன். சுவற்றின் பாதிப்பகுதியை கண்ணாடி மூலம் தடுக்கப்பட்டு உருவாக்கியிருந்தார்கள்.

 

கண்ணாடி தடுப்பு தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் இருந்த காரணத்தால் மேலே இருப்பவர்களால் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் கீழ் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த தொழிற்சாலையின் மொத்த விஸ்தீரணமும் தெரியும்படி இருந்தது. தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டே என்னை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்த பெண்மணியை தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தேன்.

 

நான் பார்த்த போது மொத்த தொழிற்சாலையும் சுத்தமாக தெரிந்தது. மிக குறுகிய நேரத்தில் என் மனதில் அங்கே பார்த்த ஒவ்வொன்றையும் வைத்து பல கணக்குகள் போட்டு வைத்துக் கொண்டேன். என் நண்பர் சொன்ன இந்த நிறுவனத்தின் பலமும் பலவீனமும் புரிந்தது.  சுருக்கமாகச் சொன்னால் “பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மெண்ட் வீக்” என்பதாக கற்பனையில் வைத்துக் கொண்டேன்.


 oru-tholitchalaiyin-kurippugal-Part2

 

 

 

நான் நுழைய வேண்டிய அறையை காட்டிவிட்டு கூட வந்த பெண்மணி நகர்ந்து சென்று விட்டார். நான் அந்த அறையின் உள்ளே நுழைவதற்கு முன் மரியாதையின் பொருட்டு லேசாக தட்டி விட்டு அறையின் உள்ளே செல்ல அங்கே மற்றொரு உலகம் எனக்கு அறிமுகமானது. அது கலந்துரையாடல் நடக்கும் இடமது. நீண்ட மேஜையும் சுற்றிலும் நாற்காலியும் உயர்தரமான வடிவமைப்பில் உருவாக்கியிருந்தார்கள். மெல்லிய இசை அந்த அறை முழுக்க ஊடுருவிக் கொண்டிருந்தது. தேவையான அளவு மட்டுமே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் நான் பார்க்க வந்த ஐந்து பேர்களும் எனக்காக காத்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் நாற்பது வயது மதிக்கக்தக்க பெண்மணி. மற்ற அத்தனைபேரும் கணவான் கணக்காக இருந்தனர்.

 

மனதிற்குள் இருந்த தயக்கத்தையும், உள்ளே ஓடிக் கொண்டிருந்த பலவித யோசனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் சுட்டிக் காட்டிய நாற்காலியில் அமர்ந்தேன். நான் ஏற்கனவே மின் அஞ்சல் வழியே அனுப்பியிருந்த என் சுயவிபர குறிப்புகளை ஒருவர் மாற்றி ஒருவர் படித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி மனதிற்குள் சிரித்துக் கொண்டே அலர்ட் ஆறுமுகம் போல அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருந்தேன்.  என் சிந்தனைகள் இருகூறாக பிரிந்து நின்றது. ஒன்று அவர்களின் யாரோ ஒருவர் திடீரென்று கேள்வி கேட்பார். நாம் தயாராக இருக்க வேண்டும்.  அதே சமயத்தில் அவர்கள் கேட்கும் கேள்விகள் சார்ந்த விசயங்களுக்கு அப்பாற்பட்ட ஆயத்த ஆடைத் தொழில் சார்ந்த பலவித எண்ணங்கள் என் மனதில் அலையடித்துக் கொண்டிருந்து.

 

உலகில் உள்ள மற்ற துறைகளை ஒப்பிடும் போது ஆயத்த ஆடைத் தொழில் என்பது வினோதமானது. திருப்பூருக்குள் முறைப்படுத்த முடியாத நிலையில் தான் இந்த தொழில் இன்று வரையிலும் நடந்து கொண்டிருக்கின்றது. மற்ற துறைகள் போல இதன் நிர்வாக அமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் அடக்க முடியாத நிலையில்  தான் உள்ளது.  மேலைநாடுகளில் உள்ளது போல இந்த தொழிலுக்கென்ற தீர்மானிக்கப்பட்ட வரையரை என்பதே இன்று வரையிலும் இல்லை. ஆனாலும் எல்லோரும் தொழிலில் இருக்கின்றார்கள்.  அதிக பணம் வைத்திருப்பவர்களும், பணம் எதுவுமே இல்லாதவர்களும் கூட இந்த தொழிலில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  தினசரி ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டு 300 ரூபாய் லாபம் சம்பாதித்து இதுவே போதும் என்பவர்களும் சரி, மாதம் ஐந்து கோடிக்கு வரவு செலவு செய்து தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.  இது ஏன்? என்பதை விட இது இப்படித்தான் என்று இந்த தொழிலில் உள்ள அத்தனை பேரும் கடந்து போய்க் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

 

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நூற்றுக் கணக்கான பேர்கள் காணாமல் போய்விட அடுத்த நபர்கள் உள்ளே வந்து அவர்கள் உழைப்பை கொட்டிக் கொண்டு பணம் என்ற மாயமானை துரத்திக் கொண்டுருக்கின்றார்கள். சிலருக்கு சிக்குகின்றது. பலரோ வலைக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றார்கள்.

 

திருப்பூருக்குள் நுழைந்த முதல் பத்து வருடங்களில் நான் கற்ற பலவித அனுபவங்கள் ஏராளமான பாடங்களையும், படிப்பினைகளையும் தந்த போதிலும் எந்த இடத்திலும் சுய சிந்தனைகளை உபயோகிக்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை. நாம் இருக்கும் பதவி, நமக்கு மேலே இருப்பவர்களின் ஆதிக்கம் இரண்டுக்கும் நடுவே தான் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது. இது தவிர பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாக அமைப்பின் தெளிவற்ற தன்மை கூட்டாஞ்சோறு கலவையாக ருசியற்ற தொழில் வாழ்க்கையைத் தான் வாழ வேண்டியதாக இருந்தது.  இந்த தொழிலில் உள்ள சவால்களைத் தாண்டியும் பல விசயங்களை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்த போதிலும் அதற்காக வாய்ப்பு எனக்கு உருவாகவே இல்லை. காரணம் எவரும் நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிச் சென்று விடவே தயாராக இருந்தனர். முதலாளிக்கு பல பயங்கள். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களுக்கே நமக்கென்ன லாபம்? இந்த இரண்டுக்கும் நடுவே இருந்த ஒவ்வொரு நிர்வாகமும் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்லரித்த மரம் போல எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழ தயாராகவே இருந்தது.  அப்படித்தான் இங்கும் திடீரென்று விழவும் செய்தது.  முதல் வருடம் 50 கோடி வரவு செலவு செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் சொத்துக்கள் அடுத்த வருடத்தில் வங்கியின் ஏலத்திற்கு வந்த கதையெல்லாம் நிறைய பார்த்த காரணத்தால் என் மனதில் ஒருவித தேக்க நிலை உருவாகியிருந்தது. 

 

நாம் ஒரு நிர்வாகத்தின் நிறை குறைகளை அலசி அடுத்த கட்டத்தைப் பற்றி பேச விரும்பினாலும் எவரும் ஆதரிக்க தயாராக இருக்க மாட்டார்கள். "உன் அதிகப்பிரசங்கித்தனம் இங்கே தேவையில்லை" என்பதாகத்தான் ஒரு வட்டத்திற்குள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள்.

 

ஆனால் இங்கே ஒரு கட்டமைப்புக்குள் இருப்பது போலவே இருந்தது.  மென்பொருள் துறை போல துறை சார்ந்த செயல்பாடுகள் இருப்பதாக தெரிந்தது.  இந்த நிறுவனத்தை அறிமுகப்படுத்திய நண்பரும் இதையே தான் என்னிடம் வேறுவிதமாக சொல்லியிருந்தார்.

 

"நமக்கு திறமை இருக்கிறது என்று நம்புவது தவறில்லை. ஆனால் திறமையை எந்த இடத்தில் எப்படி பயன்படுத்துக்கின்றோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியுள்ளது" என்றார். அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டே இங்கே நாம் சற்று அடக்கி வாசிக்க வேண்டும் என்று யோசித்தபடியே அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருந்தேன்.

 

முதல் கேள்வி மனிதவளத்துறை இயக்குநரிடமிருந்து வந்தது.

 

"உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்து தொழிலாளர் நலன் சார்ந்து என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுவீர்கள்?" என்றார்,

 

பதில் சொல்ல வேண்டிய நான் அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மற்றொரு கேள்வியை அவரிடமே கேட்டேன்."

 

                                                -தொடரும் 

by Swathi   on 07 Aug 2014  9 Comments
Tags: Oru Tholitchalaiyin Kurippugal   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்                 
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : காற்றில் பறக்கும் கௌரவம் -  அத்தியாயம் 11 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : காற்றில் பறக்கும் கௌரவம் - அத்தியாயம் 11
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பாறைகளைப் பிளக்கும் விதைகள் -  அத்தியாயம் 9 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பாறைகளைப் பிளக்கும் விதைகள் - அத்தியாயம் 9
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பலி கொடுத்து விடு -  அத்தியாயம் 8 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பலி கொடுத்து விடு - அத்தியாயம் 8
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே - அத்தியாயம் 7 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே - அத்தியாயம் 7
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : என் பெயர் மாடசாமி - அத்தியாயம் 6 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : என் பெயர் மாடசாமி - அத்தியாயம் 6
கருத்துகள்
17-Aug-2014 04:39:50 சுரேஷ்பாபு said : Report Abuse
கேள்விக்கு பதில் கேள்வியா? சுவாரஸ்யம்தான்! ஆயத்த ஆடைத்தொழில் பற்றி பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
 
14-Aug-2014 07:43:37 தி தமிழ் இளங்கோ said : Report Abuse
மனிதவளத்துறை இயக்குநரின் கேள்வி நீங்கள் கம்யூனிசத்தில் நம்பிக்கை உள்ளவரா என்பதனை மறைமுகமாக வினவுவதைப் போல உள்ளது.
 
09-Aug-2014 17:10:50 ப.ராதாகிருஷ்ணன் said : Report Abuse
1970-72 ம் ஆண்டில்மேலைநாடுகளில்குறிப்பாக கட்ட மைப்புகள் இருந்தன.படித்து உள்ளேன்.மிகஅருமையாக குறிப்பிட்டு இருந்தீர்கள் .
 
09-Aug-2014 14:56:26 ராமு பழனியப்பன் said : Report Abuse
இந்த வாரம் நீளம் சற்றே குறைந்த அளவில் உள்ளது போல் தோன்றுகிறது. ஒரு வேளை சுவாரஸ்யத்தின் பாதிப்பா என்று தெரியவில்லை...
 
09-Aug-2014 05:33:50 டி.என்.முரளிதரன் said : Report Abuse
ஒரு சுவாரசியமான நாவலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். என்ன கேள்வி கேட்டீர்கள் என்ற தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
 
08-Aug-2014 10:53:08 ரஞ்சனி நாராயணன் said : Report Abuse
மிகவும் கோர்வையாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள். காட்சிகள் அப்படியே கண் முன்னே நடப்பது போல நடை அமைந்திருப்பது சுவாரஸ்யம். ஏங்க, கேள்வி கேட்டா பதில் சொல்லாம, பதில் கேள்வியா? ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யம் அதிகமாகிறது. பாராட்டுக்கள்!
 
08-Aug-2014 08:13:44 krishnamoorthy said : Report Abuse
மிக எதார்த்தமான நடையில் ஆழமான மன உணர்வுகளை அழுந்த பதிந்து இருக்கிறீர்கள் . (எப்படித்தான் இன்னும் இவை நினைவு அறைகளில் வளமாக இருக்கிறதோ?) வெகு நேர்த்தியான் ஆங்கில படங்களின் திரைக்கதை அமைப்பு போல ஆங்காங்கே பல புள்ளிகள் தொடர்கின்றன இவை அனைத்தும் கோடாக மாறி இணையபோகிறது என்ற ஆச்சர்யங்களை நோக்கி நகர்கிறோம் என்பது எங்களுக்கு புரிகிறது .
 
08-Aug-2014 04:02:54 tv said : Report Abuse
ஹும்! இப்படியா சஸ்பென்ஸ் வெச்சு நிறுத்துவீங்க? :-))))
 
08-Aug-2014 02:30:32 கார்த்திக் said : Report Abuse
அடுத்த அதிகரத்திட்காக ஆவலோடு காத்திருக்கிறேன்....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.