LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 835 - நட்பியல்

Next Kural >

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம். (எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.
தேவநேயப் பாவாணர் உரை:
பேதை - பேதையானவன்; எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு - எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் நரகத்துன்பத்தை; ‘ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொருபிறப்புள்ளேயே தேடிக்கொள்ள வல்லவனாம். "வரும்பிறவிகளிலெல்லாந் தான்புக்கழுந்தும் நிரயத்தினை" என்றும், "முடிவில் காலமெல்லாம் தான் நிரயத் துன்பமுழத்தற்கேதுவாங் கொடுவினைகளை" என்றும், பரிமேலழகர் கூறியிருப்பது மிக வரையிறந்திருப்பதனாலும், எழுவகைப் பிறப்பிலும் அழுந்தும் நரகென்பது உத்திக்குப் பொருந்தாமையானும், இங்கு 'எழுமைச்' சொற்குத்தொகைப் பொருளேயன்றி வகைப்பொருள் கொள்ளப்படவில்லை. 'எழுமை' நிறைவு குறித்த மரபெண்களுள் ஒன்று. அது இங்கு நீண்ட காலத்தை யுணர்த்திற்று. 'அளவு' என்னும் பெயருக்கேற்ப 'அழுந்தும்' என்றார். ஆற்றுதல் செய்ய மாட்டுதல். பேதை தனக்கு நெடுங்காலக் கேட்டைத் தானே தேடிக்கொள்வான் என்பதாம்
கலைஞர் உரை:
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.
Translation
The fool will merit hell in one brief life on earth, In which he entering sinks through sevenfold round of birth.
Explanation
A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.
Transliteration
Orumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum Thaanpuk Kazhundhum Alaru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >