LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஆ.மாதவன்

பாச்சி

பாச்சி செத்துப் போனாள். வாழ்வு அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப் போவாள் என்று கனவில்கூட நினைத்ததில்லை. மனத்தால் தீண்டிக்கூடப் பார்க்காத ஒரு பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. பாச்சி செத்துப் போனாள்! நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே! என்ன வேண்டிக் கிடக்கிறது? போச்சு, எல்லாம் போச்சு.”

கடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோலில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது. சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.

பாச்சி செத்துப் போன விஷயம் யாருக்காவது தெரிந்திருக்குமோ? தெரிந்திருந்தாலும் யாருக்கென்ன? நாணுவிற்கு மனசு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டு ஆட்கள் போகும் போதெல்லாம் கூடப் பாச்சி சுறுசுறுப்போடுதான் இருந்தாள். அதற்குப் பிறகு என்ன நடந்துவிட்டது? சந்து பொந்துகளிலிருந்து ஏதாவது விஷப் பூச்சி தீண்டியிருக்குமோ? ராத்திரி - லாரியிலோ மோட்டாரிலோ அடிபட்டிருக்குமோவென்றால் அதுக்கான ஊமைக்காயம் கூடப் பாச்சியின் உடம்பில் இல்லை என்ன மறிமாயமோ! விடியக்காலம் பார்த்தபோது பாச்சி காலைப்பரப்பி, நாக்கையும் துருத்திக்கொண்டு செத்துக் கிடக்கிறது.

நாணுவிற்கு நெஞ்சை வலிப்பது போலிந்தது. இப்படித் திடுதிப்பென்று அவஸ்தையில் விட்டுவிட்டுப் போய்விட்டாளே. இனி என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. எல்லாரும் போய்விட்டார்கள். இனி யாருமில்லை.

பாச்சி செத்துப் போனாள்!

”என்ன நாணு மேஸ்திரி, உன் பாச்சி செத்துப் போச்சே. அட அநியாயமே! இப்படியுமா? ராத்திரிபாரேன், நான் சினிமா பாத்துக்குட்டு வரச்சே கூட பாச்சியை இங்ஙனே பார்த்தேன். சே, உன் காரியந்தான் இப்போ திண்டாட்டமா போச்சு…”

துக்கம் விசாரித்த சோனியை நிமிர்ந்து பார்த்தான், நாணு, அவன் பரட்டைத் தலையும், காக்கி நிக்கரும், காதருகில் பீடீயின் துண்டு மிச்சமும்! பல் தேச்சால் பல்லு தேஞ்சா போயிடும்? பாச்சிக்கு இவனைக் கொஞ்சமும் பிடிக்காது. நேற்றைக்கு முன்னால்கூட இவனெ கடிச்சு உருட்டாத கொறை. நாணு மட்டும் இல்லாமலிருந்தால் மேலும் விசேஷமெல்லாம் நடந்திருக்க வேண்டியது. நல்ல காலம், அப்படி ஒண்ணும் தலை மிஞ்சவில்லை… ”இந்தா பாச்சி, நம்ம சோனி. அவனை வெரட்டாதே…” இந்தா பாச்சி, நம்ம சோனி. அவனை வெரட்டாதே…” என்று தட்டிக் கொடுத்த பின்னர்தான் அடங்கினாள். கிட்டங்கியில் அரிசி வண்டிகள் வந்து நின்றபோது, இவன், இந்தச் சோனி மறு ஓரம் மாடுகளுக்குப் பின்புறமாக போய்ப் பதமாக நின்று கொண்டு, குத்துக் கம்பால், துவர்த்து மடியில் சாக்கிலிருந்து அரிசியைச் சரித்துக் கொண்டிருந்தான். கிட்டங்கிக்கு வந்த பின்பு படி அரிசி போனாலும், பெட்டிதிராசில் எடை பார்க்கும் சங்கர அண்ணாச்சிக்கு, நாணு தனா பதில் சொல்லணும். அதனாலே ஒரு ஈ, காக்காயைக் கூட நாணுவும், பாச்சியும் சேர்ந்து கொண்டு அண்டவிடுவதில்லை. சோனிப் பய ஆளைவிழுங்கி ஆயிற்றே. எப்படியோ புகுந்து விட்டான் பாச்சிக்குத்தான் திருட்டென்றால் மூக்கில் மணக்குமே. எல்லாமே ஒரு நிமிஷம்தான். காலாற எங்கேயோ போய்விட்டு வந்து கொண்டிருந்த பாச்சி, அப்படியே மாடுகளின் கால் இடுக்கு வழியாக ஒரு பாய்ச்சல், குத்துக் கம்பும், துவர்த்து முண்டுமாகச் சோனி அகப்பட்டுக் கொண்டான்.

”நாணு அண்ணே… நாணு அண்ணே…” என்ற சோனியின் அலறிய குரலைக் கேட்டு, ஒண்ணுக்குப் போயிருந்த நாணு ஆணிப்புற்றுக் காலும் செருப்புமாக ஓடி வந்ததினால், காரியம் மிஞ்சவில்லை.

சும்மா சொல்லக்கூடாது. பாச்சி மிக மிகப் புத்திசாலி!

சோனி, துக்கம் விசாரித்துவிட்டு, அவன் போக்கில் போனான். அவனுக்கென்ன? ஒரு தொல்லை விட்டுது. இந்த நாணுச் சனியனும்கூட ஒழிஞ்சு போனால், சரக்கு வண்டிகளின் மிச்ச அரிசியை வைத்தே ஜீவனம் நடத்திவிடலாம். இப்போ என்னடாவென்றால் நாலணாக் காசுக்கு ஒரு அந்தர் கனம் மூட்டையைச் சாலையிலிருந்து மேட்டுக்கடை வரைக்கும் சுமையா சுமையென்று தூக்க வேண்டியிருக்கிறது.

பொழுது விடிந்துகொண்டேயிருந்தது. கிட்டங்கியின் ஒட்டுமுகப்பில் மாடப் புறாக்கள், வரிசை வரிசையாக வந்து அமர்ந்திருந்தன. தினமும், இந்த அழகான புறாக்களுக்கு நிறைய அரிசி மணி இங்கே கிடைக்கும். என்ன ஜோர் புறாக்கள். கழுத்து வெட்டி நடக்கும் போது பளபளவென்று பஞ்ச வர்ணம் வீசுகிறது. பாச்சிக்கு இந்தப் புறாக்களிடம் வெகு சிநேகம். புறாக்கள் அரிசி பொறுக்கிக் கொண்டிருக்கும்போது, கண்ணாம் பூச்சி விளையாட்டில் தாச்சியைத் தாவிப் பிடிப்பது போலப் பாச்சி லபக்கென்று ஒரு தாவல் தாவுவாள். படபடவென்று அத்தனை புறாக்களும் பறந்து ஓட்டு வளைவில் ஏறிக்கொள்ளும். ஏச்சுப் பிட்டோமே என்கிற பாவனையில் பொட்டுக் கண்களை உருட்டி உருட்டிப் பாச்சியைப் பரிகசிக்கும். கிட்டங்கித் திண்ணையிலேயே அமர்ந்திருந்து பீடிப் புகையின் லயத்தில் நிலை மறந்திருக்கும் நாணுவிற்கு வெகு சந்தோசமாக இருக்கும். பாச்சியும் புறாக்களும் தொட்டுப் பிடித்து விளையாடும் விளையாட்டு நடத்துகிறார்கள்! போனால் போகிறது. அடுத்த தபா ஒரு புறாவையாவது பிடிக்காவிட்டால் பாரேன்’ என்கிற பாவனையில் முகத்தையும் தொங்கப் போட்டுக் கொண்டு, பாச்சி பொடி நடையாக நாணுவின் காலடியில் வந்து, ‘இப்போ என்ன வந்துவிட்டது?” என்பது போலப் படுத்துக்கொள்வாள்.

”புறா பறந்திருச்சா, பாச்சி?” என்று, பாச்சியின் தாடையைத் தூக்கி முகத்தை ஆராய்வான் நாணு. ‘போயேன், ஆமாம்…’ என்கிறது போல முகத்தை அவன் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு எங்கோ பார்க்கும், பாச்சி.

”படு போக்கிரி நீ. கிட, அங்கே…!” என்றவாறு பீடியைத் தூர எறிந்துவிட்டு, ஆணிப் புற்றுக் காலைச் செருப்புகளுக்குள் நுழைத்து மெல்ல எழுந்து அப்பு, டீக்கடைக்கோ, எங்கோ போவான், நாணு.

அந்தப் பாச்சி செத்துப் போனாள்.

வெயில், சேட்டுவின் கிட்டங்கிக் கட்டடத்தின் முகப்பிற்கும் மேலே வந்துவிட்டது. முக்கு ரோட்டில் பல சரக்குக் கடைகள் திறக்கப் பையன்கள் சாவியுடன் வந்து காத்து நிற்கின்றனர். யாரோ ஒருவன், ராத்திரி கண்ட சினிமாவில் ராகேஷின் தமாஷ் பற்றி உரக்கப் பேசுகிறான். ஒம்பது மணி சங்கு இன்னும் கேட்கவில்லை போல…

நாணுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாச்சியின் முகத்தில் ஈக்கள் வந்து மொய்த்துக் கொண்டிருந்தன. அதைப் பார்க்க நாணுவிற்கு எப்படியோ இருந்தது. மெல்ல எழுந்து தலைக்கட்டை அவிழ்த்துப் பாச்சியின் முகத்தில் மூடினான். பிறகு பாச்சியின் பின் கால்களைச் சேர்த்துப் பிடித்து மெதுவாக இழுத்து வெயில் படாத இடமாகக் கிடத்தினான். ‘அம்மாடியோ, என்ன கனம் கனக்குது…’

ஓடைக்காரன் கோவிந்தன், தூரத்திலேயே சாக்கடையைத் தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். பழக்கடைத் தெருவின் அழுகல் ஆரஞ்சுகளும், எலுமிச்சம் பழங்களும், தக்காளி அழுகலும், முட்டைக்கோசு பழத்த இலைகளும், வைக்கோல் சருகும், சாக்கடைத் தண்ணி நாற்றத்தில் வேகமாக ஒழுகி வந்து கொண்டிருந்தன. இனி ஆக வேண்டியதைப் பற்றிக் கோவிந்தனிடம் தான் யோசனை கேட்கவேண்டும். அவன் உபாயம் சொல்வான். ஆனாலும் அவன் படுபாவி. அவனும், அவன் குள்ள உடம்பும் சாக்கடைத் தூம்பாவையும் பிடித்துக் கொண்டு முண்டு முண்டாகக் கைகளும், ரெண்டு பெரிய பன்ரொட்டியை பதிச்சு வைச்சது போலப் பரந்த நெஞ்சும், மீசையும், எப்பவும் சிவந்த கண்ணும், படுபாவி. எரக்கமே கிடையாது. கருமடம் சேரியில் எந்தச் சாவு நடந்தாலும் கோவிந்தன் வழி சொல்வான். அன்றொரு நாள் ஒரு எருமை மாட்டைக் கை வண்டியில், காலைக் கையைக் கட்டிப் போட்டு லொப லொபவென்று, ரோட்டு வழியாக இழுத்துக் கொண்டே போனான். அதைக் கொண்டு போய் உரித்துத் தோலை விற்பான். எறைச்சியைச் சேரியில் எல்லோருக்கும், எட்டணா பங்கு, ஒரு ரூபா பங்கு என்று விற்று முதல் செய்வான். கொம்புகளைப் பழவங்காடி தந்த வேலைக் கடையில் நல்ல விலைக்கு விற்பான். சே என்ன ஜன்மமோ? சாயந்தரமானால், வாற்றுச் சரக்கு வயிறு முட்ட விட்டுக் கொண்டு, கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் விழுந்துகிடப்பான்.

அந்தத் தடிமாடனிடம்தான் போய்ப் பாச்சிக்கும் வழி கேட்க வேண்டும். பாச்சியிடம் என்ன இருக்கிறது. அவன் விற்றுப் பணமாக்க?

”என்ன நாணு மேஸ்திரி, நின்னுக்கிட்டீருக்கீங்க? ஏது உங்க பாச்சி. காலை நீட்டிட்டாப் போல இருக்கு. நல்ல வேளை, என் மண்வெட்டிக் காம்பாலே அது வாயைப் புளக்க வேண்டியது, சில்லறை அக்கிரமமா, இந்தச் சாலைக்கடையிலே அது செய்தது? ஆமா, எப்படிச் செத்தது? யாராவது மருந்து வச்சுக்கொன்னிருப்பாகளோ? லாரியோ வண்டியோ அடிப்பட்டாப்பலே தெரியலியே. செத்தப்பறம் பார்க்கும்போது பாவமாத்தான் இருக்கு…”

”எப்படிச் செத்ததோ! வெடியக் காலம் பார்த்தா என் விரிப்பின் பக்கத்திலே இப்படிக் கெடக்குது. ஓரமா இருக்கட்டும்னுதான் அப்படி இழுத்துப் போட்டிருக்கேன்… இப்போ என்ன செய்யிறது கோவிந்தா? உன்னைப் புடிச்சாத்தான் சங்கதி நடக்கம்…”

”செய்யிறது என்ன? கிடக்கட்டும் இங்கியே, நான் முக்கு வரைக்கும் ஒடையை இழுத்துவிட்டு விட்டு, கை வண்டியையும் கொண்டுக்கிட்டு வாறேன். சங்கதியெல்லாம் சரி கேட்டுக்கிட்டே நம்ம பங்கு மட்டும் குறையாமெ வாங்கித் தந்திரணும். உன் கருமாதிக் காரியம் பாத்துக்கோ. வரட்டா? சாயந்திரம் கொஞ்சோ மினுங்கணும்.”

மினுங்குதல் என்றால் அவன் பாஷையில் வாற்றுச் சரக்கை வயிற்றில் நிரப்பணுமென்று அர்த்தம்.

கோவிந்தன் சாக்கடைத்தண்ணீர்க் குப்பை கூளத்தோடு நீளத் தூம்பாவால் தள்ளிக் கொண்டே போனான், புழுங்கிய ஆரஞ்சு, அழுகல் சரக்குகளின் வாடை மூக்கைத் துளைத்தது.

கீழக்கோடியில் கடைகளைத் திறந்து கொண்டிருந்தார்க்ள. பையன்கள் பலகைக் கம்பிகளை உருவி எடுக்கும் சத்தம் கேட்டது. பெரிய கடைகளின் இரும்பு ஷட்டர்கள் கறகறவென்று ஓசையுடன் மேலே எழும்புகின்றன.

இன்று புதன் கிழமை. வள்ளக்கடவிலிருந்து அரிசி வண்டிகள் வராது, செவ்வாய், வெள்ளியென்றால், இந்நேரத்திற்கு முன்னால், சரக்கு ஏற்றிய வண்டிப் பட்டாளம் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை ஜங்ஷன் வரைக்கும் நீண்டிருக்கும், அந்த அலமலங்களில் பாச்சிக்கு இப்படி வந்திருந்ததென்றால் எக்கசக்கமாக இருந்திருக்கும். நல்லவேளை. இன்று புதன் கிழமை. தினமும் பஜாரில் பெரிய கடையை திறப்பதற்கு முன்னால் கிட்டங்கியை ஒரு முறை பார்க்க வரும் சேட்டு கூட இன்னும் வரவில்லை. பாச்சி இந்த மட்டில் யோகம் செய்தவள்தான். நல்ல நாள் பார்த்துச் செத்திருக்கிறாள்.

‘ஹூம், போய்விட்டாளே!( நாணுவிற்கு, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் போய் ஒரு சாயா குடிக்க வேண்டுமென்றோ - ஏன், ஒரு பீடி பற்ற வைக்க வேணுமென்றோ, கூடத் தோணவில்லை, என்ன இருந்தாலும் கேவலம் ஒரு…சே, அப்படியா? இந்த மாதிரி வாயில்லாப் பிறவிகளிடம் எங்கே இருக்கிறது? எவ்வளவு காலமாக இது கூடவே வாழ்ந்திருக்கு. ஒரு நேரம் இல்லாவிட்டால் மறு நேரம் விட்டுப் பிரிஞ்சு இருந்ததில்லை. காலுக்கு ஆணிப் புற்றுப் பிடிச்சு இவ்வளவு காலமாச்சு. தெரிஞ்சவங்க, முகும் கண்டவங்க யாரும் ஏன் என்ன என்று கேட்டதில்லை. எல்லாத்துக்கும் இந்தப் பாச்சிதான். அவளால்தான் கிட்டங்கிக் காவல்கார வேலை கிடைச்சது. அன்றாடத்துக்குப் பஞ்சமில்லை, சொந்தமா பந்தமா? யார் இருக்கிறதா? ஒருத்தருமில்லே. அப்படியே நாள் போவுது. இந்த ஜன்மத்துக்கிட்டே ஒரு பிடிப்பு… ராத்திரியெல்லாம் பக்கத்திலேதான் படுத்துக் கிடக்குது, காலை நக்குது, முகத்தை எட்டி எட்டிப் பார்க்கிறது. விசுவாசம், பற்றுதல், மறக்க முடியமாட்டேன் என்குது.

கிட்டங்கி பேட்டைக்குள் சமாசாரம் நடந்ததினால் பஜார் பயகளுக்க இன்னும் விஷயம் எட்டவில்லை. சுமை கூலிக் குட்டப்பனும், வேலாயுதனும், கையில் சாக்கு தூக்கும் கொக்கி ஊக்குடன் எப்படியோ பேட்டைக்குள் வந்துவிட்டார்கள். ”என்ன நாணு அண்ணே, கோவிந்தன் சொன்னான், உன் சரக்கு செத்துப் போச்சாமே? சீக்கிரமா சேட்டுக்கு ஆள் அனுப்பு. முளை, பாயி, வைக்கோல் - எல்லாம் நாங்க ஆச்சு…’ என்று பரிகாசம் செய்துவிட்டு, அப்புவின் சாயக்கடைக்குள் நுழைந்துவிட்டார்கள். அங்கேயும் புட்டு, பயர், பப்படம் சாப்பிட்டுக் கொண்டிருந்த யாரெல்லாமோ - இதைச் சொல்லி உரக்கச் சிரிப்பதாக நாணுவிற்குத் தோன்றியது. சவத்தப் பயலுக!

‘ஆக்கங் கெட்டவனுக. அவனுகளுக்கென்ன? கால் நல்லா இருந்த காலத்திலே, நாணு மேஸ்திரின்னா முக்குக்கு அந்தப் பக்கம்தான் நிற்பான். இப்போ நாணு அண்ணேன்னிட்டு சங்காத்தம் கேக்க வாறானுக, ”டேய்! நாணுவுக்குக் காலுக்குத்தான் ஆணிப்புற்று. கைகளைப் பார்த்தாயா, அதுக அப்படியேதான் இருக்கு. பதனமிருக்கட்டும்…”

பாச்சியின் மேல் ஈக்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. சுவருக்கப்பால் அந்தப் பக்கம் கருப்பட்டிக் கடைத்தெரு, அதனால்தான் இவ்வளவு மொத்த ஈக்கூட்டம்.

”பாச்சி! ஒரு மூணு நாலு வருஷமிருக்குமோ நீ நம்மகிட்டே வந்து…?”

‘…பாச்சி வந்த புதுசில்தான், கால் ஆணிப் புற்றுக்குச் சக்கிலியனிடமிருந்து செருப்பு வாங்கினது. கேட்டு கடை வாசலிலேயே நேரம் முச்சூடும் உக்காந்திருந்தார், ராத்திரிக்கி எட்டணா தருவாரு. சிலப்போ பத்தணா தருவாரா…? நல்லா இருந்த காலத்திலே கிட்டங்கி அட்டிச்சாக்கு அத்தனையும் ஒற்றை ஆளா நின்றுகூட அடுக்கி வச்சதுண்டு. அப்போவெல்லாம் நல்ல ஆங்காரம் இருந்தது. கால் நோக்காடு வந்தாலும் எல்லாம் ஒவ்வொண்ணா அஸ்தமிச்சுப் போச்சு. உடுத்த கைலிதான். மறு துணிக்கு வருஷக் கணக்குகூட ஆகும். சிரங்கு வந்தா குரங்குதான் என்று சொல்லுவாங்களே; அதே போல ஆச்சு. ஒரு வேலையும் செய்ய முடியாது. முக்கி முனகி ஒரு மூட்டையைத் தலையிலெடுத்தால் கால் ஆணியும், செருப்பின் மேல் சவாரியுமாக நடக்கவா முடியும்? நாணுவா சாக்குத் தூக்குகிறான்? முக்குத் தாண்டி வருமுன்னாலே - விடிஞூசு பூசை போட்டாகுமே’ என்று பேச்சு பதிந்து போயிற்று. சேட்டுவுக்கும் தினப்படி ‘சக்கரத்து’ வியாபாரமாக எட்டணா பத்தணா அளக்கிறதுன்னா நாளா வட்டத்திலே கசந்துதான் போவுது, அப்போ பட்டினிதான்…

‘இந்த வாக்கிலேதான் ஒருநாள், தேங்காய் தொண்டு வண்டி ஒன்றின் பின்னால் யாரோ கழுத்தில் கயிற்றைக் கட்டி விரட்டி விட்டிருந்த பாச்சியைக் கண்டது. ‘மொள் மொள்’ என்று அழுது கொண்டு, வண்டியின் வேகத்துக்குக் கால்களைக் கீழ் ரோட்டில் உரசிக் கொண்டு இழைந்து வந்த பாச்சியை நாணு கண்டான். பாச்சிக்குப் பாச்சியென்று யார் பெயர் வச்சது? அப்புவா? வேலாயுதனா? யாரோ? கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் ஒரு சண்டி ‘சரக்கு’ வந்திருந்தாள். அவளிடம் வேலாயுதன், குட்டப்பன், அப்பு இவனுகள் பாச்சா ஒண்ணும் பலிக்கவில்லை. அவள் பெயர்தான் பாச்சி. அந்தச் சரக்கு சுலபத்தில் தமக்கு மசியாத ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவன்களில் யாரோதான் பாச்சிக்கு அந்தப் பெயரை வைத்தது. யார் வச்சால் என்ன? நாணுவிற்குப் பாச்சியைப் பிடித்துப் போயிற்று. அவளை வண்டியிலிருந்து அவிழ்த்து வந்து அப்பு சாயாக் கடையிலிருந்து ஒரு இணுக்குப் புட்டு வாங்கிக் கொடுத்தான். சிரட்டையில் காப்பி வாங்கிக் கொடுத்தான். பிறகு ஒவ்வொரு நாளும் தனக்குக் கிடைக்கிறதில் பாங்கைப் பாச்சிக்கும் கொடுத்தான், நாணு. இதுதான் சிநேகிதம்ங்கிறது. நாணு கிட்டங்கித் திண்ணையில் விரிப்பை விரித்துப் படுக்கும்போது பாச்சியும் அருகில் வந்து ஒண்டிக் கொள்வாள் விரட்டினாலும் போகாது. அடித்தாலும் நகளாது. பிறகு என்ன செய்ய? போகப் போக எல்லாம் சரியாகப் போய்விட்டது. பாச்சிக்கு நாணுதுணை. நாணுவுக்குப் பாச்சி துணை என்றாயிற்று. பாச்சி இப்போ நன்றாக வளர்ந்துவிட்டாள். எல்லாரையும் சிநேகம் பிடித்துக் கொண்டாள். அப்பு கடைத் தொட்டியிலிருந்து மீன்கறி விருந்து, எலும்புத் துண்டு விருந்து, சாம்பார் தயிர்சாதக் கதம்ப விருந்து,எ ல்லாம் கிடைத்தது. அப்படியாக இருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

ராத்திரி ஒரு மூணு நாலு மணியிருக்கும். தெருவில் கூட லைட் இல்லை. ‘பவர்கட்’ என்று சொல்லி ரோட்டு விளக்கையெல்லாம் அணைத்திருந்தார்கள். கிட்டங்கி வாசலில் நாணுவிற்கு அருகில் படுத்திருந்த பாச்சி திடீரென்று எழுந்து கிட்டங்கியின் பின்புறச் சுவர்ப்பக்கமாக ஓடி விழுந்து போய்க் குலைக்க ஆரம்பித்தது. இந்தப் பக்கம் நின்று குலைத்தது. அந்த ஓரமாக நின்று குலைத்தது. காலைக் கீழே பிறாண்டிப் பிறாண்டிக் குலைத்தது. ‘நாணு படுத்திருக்கிற பக்கமாக வந்து, ‘வாயேன், வந்து பாரேன்…’ என்கிற மாதிரிக் குலைத்தது. விழித்துக் கொண்ட நாணு, ‘எந்திரிக்கணுமா வேண்டாமா’ என்ற சோம்பலின் தர்க்க நினைவில் ஒரு கணம் தயங்கினான். பாச்சி விட்டால்தானே? குலைப்பது அதிகமாயிற்று. ‘என்னமோ காரணமில்லாமல் பாச்சி குலைக்காதே. சட்டென்று எழுந்து செருப்பையும் மாட்டிக் கொண்டு நடந்து வந்து பார்த்தப்போம். கிட்டங்கியின் பின்புறச் சுவரோரமாக நின்றிருந்த ரயினேஜ் கம்பம் வழியாக ஓட்டைப் பிரித்து உள்ளே ஆள் இறங்கியிருப்பது - தெரிந்தது, பிறகென்ன. அப்புவின் கடையிலிருந்து ஆட்களைத் தட்டி எழுப்பி, காலைக்கறவைக்குச் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அஞ்சாறு பால்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து பார்த்தபோது திருடன் வசமாகச் சிக்கிக் கொண்டான். சேட்டு வீட்டிற்குச் சைக்கிளில் ஆள்போய், அவர் காரைப் போட்டுக் கொண்டு வந்து, போலீசுக்குப் போன் பண்ணி, மகஜர் தயார் பண்ணி, துவர்த்து முண்டு பொட்டணத்தில் கட்டிய அரிசி தொண்டி சாமானுமாகத் திருடனைக் கொண்டு போகும்போது விடிய விடியப் பத்து மணிக்கு மேல் ஆயிற்று, ரோட்டில் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை வரை ஒரே சுட்டம். நாகர்கோவில் பஸ்கள் மெதுவாக நிறுத்திக் கூட்டத்திற்குக் காரணம் கேட்டு விட்டுப் போயிற்று. பஜாரில் திருடன் புகுந்து அதைக் கண்டு பிடிப்பதென்றால் சாதாரணக் காரியமா?

”யார் கண்டுபிடிச்சது?”

”நம்ம நாணுதான். அவன் இங்கே திண்ணையிலேதானே ராவும் பகலும் குடியிருக்கான்…”

”நாணுவா? தமிர் காலும் செருப்புமா அவன் எப்படிக் கள்ளனைக் கண்டுபிடிச்சான்?”

”அது தெரியாதா? அவன் சரக்கு பாச்சிதான் முதல்லே ஆளைப் புடிச்சுக் கொடுத்திருக்கா. பிறகு கேக்கணுமா?”

”ஓகோ, அப்படியா…?”

சேட்டுவிற்கு ரொம்ப சந்தோஷமாகப் போய்விட்டது. சின்னத் திருட்டோ, பெரிய திருட்டோ ஓட்டைப் பிரிச்சு இறங்கிறதானால் சாமான்யமா? லட்சக்கணக்கில் அட்டிச் சரக்கு இருக்கிற இடத்தில் திருடன் என்றால்…? அதிலிருந்துதான் நாணுவிற்கு மாதச் சம்பளக் கணக்காயிற்று.

கிட்டங்கிக் காவல், சம்பள வேலை, எல்லாம் பாச்சியாலேதானே.

கடை கண்ணியெல்லாம் சாத்தி, ஆட்களெல்லாம் போய்விட்ட பின்பு, சந்தடி ஓய்ந்து, பாச்சியும் தெரு விருந்துக்கெல்லாம் போய்க் களைத்து - ஆடி ஆடி, நாணுவின் விரிச்சாக்கில் வந்து ஒண்டும்போது ராத்திரி ஒரு நேரம் இரு நேரம் ஆகிவிடும். நாணுவும் ஒரு சுருள் பீடியைப் புகைத்துக் கொண்டு, அப்படியே ‘கடவுளைத் தரிசித்துக் கொண்டு’ கிடப்பான். பாச்சி வந்து அருகில் ஒண்டியதும், நாணுவிற்கு ஒரு சமாதானம் பிறக்கும். இனிக்கொஞ்சம் தூங்கலாம். பாச்சி இருக்கிறாள்.

”இன்னைக்கு இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தே, பாச்சி?”

பாச்சிக்குப் பேச்சில்லை. நாணுவின் கைகளை உராசிக் கொண்டு, முகத்தைத் தொங்கத் தொங்க விடுவாள். செல்லம் கொஞ்சுவான். முணுமுணுவென்று முளல் வாசிப்பாள்.

”பாச்சி, நீ மட்டும் இல்லேன்னா நான் இதுக்கு முன்னாலே என்னமோ ஆயிருப்பேன். உன் புண்ணியத்திலே சேட்டு சம்பளம் போட்டுக் கொடுத்தாரு. இப்போ பாரு, குட்டப்பன், வேலாயுதன், அப்பு ஒருத்தனாவது சீண்ட வராணுமே? சொகம்… பாச்சி, நீ என்னெ விட்டுப் போயிராதே, தங்கம்!”

பாச்சி மூச்மூச்சென்று என்னதான் சொல்வாளோ? இப்போ ஒரு நாளா ரெண்டு நாளா? நாணுவிற்கு மாசக் கணக்கு, வருஷக்கணக்கு தெரியாது. ஓணத்திற்கு ஓணம் வரும்போது…’ ஒரு வருஷம் போனதே தெரியவில்லை’ என்ற எண்ணம் தோன்றும். எவ்வளவோ காலமாச்சு ரேசன் வந்தது. குட்டப்பன் பட்டாளத்துக்குப் போயிட்டான். அதுக்குப் பொறவு ‘இம்புட்டு பொடியனா வந்த உன்னி, இப்போ பெரிய சுமட்டுக்காரனாயிட்டான். அவன் கையிலும், சாக்கத் தூக்குகிற ஊக்கு வந்துவிட்டது. அப்பு சாயக் கடையில் அவன் மச்சினன், கொஞ்ச நாள் வந்து கல்லாவில் இருந்தான். அப்பு பால்காரி ராஜம்மாவோட சிநேகம் பிடிச்சான், அவள் கர்ப்பமாக வந்து கடை நடையில் நின்று சிலவுக்குக் காசு கேட்டு வழக்கெல்லாம் நடந்தது. எவ்வளவோ சங்கதிகள் நடந்திருக்கு. சாலை ரோடு கொத்திக் கிளறி ரெண்டாவது தடவை தார் போட்டார்கள். வண்டி, பஸ் எல்லாம், அட்டக்குளங்கரை ரோட் வழியாகத் திருப்பிப் போயிற்று.

பாச்சி செத்துப் போனாளே!

நாணுவிற்கு மனம் ரொம்ப வலித்தது. காலை வெயில் உடலைச் சுட்டது. கேட்டு, மஸ்ஸின் முழுக்கை ஜிப்பாவும், பாளைத் தார் வேஷ்டியுமாகக் காரில் வந்திறங்கிக் கிட்டங்கி வாசலைத் திறந்து- டிரைவர்தான் பெரிய பூட்டுக்களைத் திறந்தான். குனிந்து, வாசல் பலகையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு உள் நுழைந்தார். பாச்சி செத்த விபரம் அவருக்குத் தெரிந்திருக்காது, சொல்லணுமே.

கோவிந்தன் வந்துவிட்டான். கை வண்டியைக் கடகடவென்று இழுத்து நடையில் கொண்டு வந்து நிறுத்தியபோது நாணுவிற்கு நெஞ்சு பக்கென்றது. வண்டியில் வெல்ல மூடை கட்டி வந்த பாயொன்று ஈ மொய்க்க விரித்திருந்தது. பாச்சியைக் கொண்டு போகப் போகிறான்.

அப்போதான் சேட்டு கவனித்தார்.

”நாணு, என்ன கோவிந்தன் வண்டியோட வந்திருக்கான்? கிட்டங்கிச் சந்திலே பெருச்சாளிக கண்டா செதுக்கிடக்கா? அதுக்கெதற்கு வண்டியும் பாயும்…?”

”இல்லே எஜமானே… நம்ம பாச்சி நேத்து ராத்திரி செத்துப் போச்சு. நாணு மேஸ்திரி மொகத்தை எஜமான் பார்க்கலெ போல…” கோவிந்தன்தான் செய்தியைச் சொன்னான்.

சேட்டு அப்பொழுதுதான் நாணுவைக் கவனித்தார்.

”அய்யோ! நம்ம பாச்சியா? எப்படிச் செத்தது? அட பாவமே… நல்ல புத்தியுள்ள பிராணியாச்சே… எப்படி?”

”ராத்திரியெல்லாம் கிட்டக்கத்தான் படுத்திருந்தது. விடிஞ்சு பார்த்தா இப்படி! எந்தப் பாவி செய்தானோ?” நாணு அழுதானோ? குரல் எழும்பவே இல்லை.

சேட்டுவிற்கு மேலும் துக்கம் விசாரிக்கப் பிடிக்கவில்லையோ என்னமோ?

”கோவிந்தா, நீதானே கொண்டு போறே? எல்லாத்தையும் போல இதையும் கடப்புற மணலிலே எறிஞ்சிராதே. உங்க சேரி, கருமடத்துப் பக்கமா, ஒரு குழியெடுத்து அதை நல்ல மொறையிலே புதைச்சிரு பாவம். நல்ல புத்தியோட இருந்தது. மனுஷப் பிறவிகளைக் காட்டிலும் நல்லத்தான் திரிஞ்சுது. சும்மா சொல்லக்கூடாது, இந்தா, கடையிலே கணக்கனிடம் இந்தச் சீட்டைக் காட்டி அஞ்சு ரூபா நீ வாங்கிக்கோ. மடிச்சிராதே…”

நாணுவிற்கு அப்பியே அமிழ்ந்து போனது மாதிரி இருந்தது. ஆணிப் புற்றுக்காலின் செருப்பை பறித்துக் கொண்டு, கல்லுத் தரையில் நடக்க விட்டது போல வாதனையாக இருந்தது. இதுதான் கடைசி பாச்சியைக் கோவிந்தன் கொண்டு போகப் போகிறான்.

பாச்சி போகப் போகிறாள்.

இன்னும் யார் இருக்கிறா? சின்னப் பிராயத்திலேயே அம்மா, மேத்தன்கூட ஓடிப்போனது. அப்புறம் அப்பன் எறச்சிக் கடைச்சண்டையிலே வெட்டுப்பட்டுச் செத்தது. பத்துப் பதினெட்டு வயசு வரையில கருமடம் சேரியில் புல் வெட்டி விற்று, எருமைகளைக் குளிப்பாட்டிக் கொடுத்து வாழ்ந்தது… அப்புறம் சாலைக் கடைக்கு வந்து சுமடு தூக்கிப் பிழைத்தது. வருஷங்களாயிற்று கடைசியலெ, கால் ரெண்டிலும் ஆணிப்புற்று வந்ததுக்கப்புறம், நடக்க மாட்டாமெ, கிட்டங்கித் திண்ணையே கதின்னு கிடந்தது… எல்லாம் போச்சு. பாச்சி செத்துப் போனா, பாச்சியோட எல்லாம் போவுது இனி ஒண்ணுமில்லை.

”நாணு மேஸ்திரி, துவர்த்து வேணும்னா எடுத்துக்கோங்க. உங்க சரக்கெ வண்டியிலே ஏத்தப் போறேன்…” கோவிந்தன் பாவி!

நாணுவிற்கு ஒன்றுமே தோன்றவில்லை. பேசாமல் நின்றான்.

”மேஸ்திரிக்கி சங்கடம்தான்… நவருங்க அப்பா, என்ன கனம், எளவு…”

கோவிந்தன் பாச்சியை வண்டியில் எடுத்துப் போட்டான்.

நாணு பாச்சியைக் கடைசியாக ஒரு முறை பார்த்தான். திறந்த வாயில் முந்திரிப் பருப்புச் சிதறல் போல வெள்ளை வெளெரென்று பற்கள் வெளியே தெரிகின்றன. ஈக்கள் விடாமல் மொய்க்கின்றன. கால்கள் நாலும் விரிந்து கிடக்கின்றன. ராத்திரியெல்லாம் தன் விரிப்பில் கிடக்கும் அதே கோலம்…”

வண்டியைக் கோவிந்தன் கடகடவென்று இழுத்துக் கொண்டு போனான், சேட்டு ஒரு முறை வந்து பார்த்தார். கார் டிரைவர் காரினுள் இருந்தவாறே - லேசாக அலட்சியமாகக் கொஞ்சம் பார்த்தான்.

பாச்சி செத்துப் போனாள்

நாணு வெறுமையில் நின்றான். வெயில் ஏறிக் கொண்டிருந்தது.

by Swathi   on 29 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.