LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 723 - அமைச்சியல்

Next Kural >

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர். ('அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்; அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர். இஃது அவையஞ்சாமை அரிதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பகையகத்துச் சாவார் எளியர்-போர்க்களத்துள் அஞ்சாது புகுந்து பகைவரொடு பொருது மறத்தொடு சாகவல்லவர் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதவர் அரியர்-ஆயின், ஓர் அவையிடத்துப் புகுந்து அஞ்சாது நின்று உரை நிகழ்த்த வவ்லவர் சிலரே. இது பகையஞ்சார்க்கும் அவையஞ்சார்க்குமுள்ள தொகைவேற்றுமை கூறிற்று. அமர்க்கள மறத்தினும் அவைக்கள மறமே சிறந்த தென்பது கருத்து. ஒப்புமை கூறும் உவமையிற் போன்றே ஒவ்வாமை கூறும் வேற்றுமையிலும் உள்ள இரு கூறுகளுள், ஒன்றன் அடை இன்றொன்றைச் சாருமாதலின், அஞ்சாமை 'சாவார்' என்பதனொடு கூட்டப்பட்டது. பொருட்கேற்பப் பொருதல் சொல்லுதல் என்னும் இரு சாரார் வினைகளும் வருவித்துரைக்கப்பட்டன. எளிமையும் அருமையும் பெரும்பான்மை சிறுபான்மையொடு தாழ்வுயர்வும் உணர்த்தி நின்றன. இம் முக்குறளாலும் அவையஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.
Translation
Many encountering death in face of foe will hold their ground; Who speak undaunted in the council hall are rarely found.
Explanation
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
Transliteration
Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar Avaiyakaththu Anjaa Thavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >